விமர்சனம்: வடம் - ஜல்லிக்கட்டுப் பாசமும்... பழிவாங்கும் ஆட்டமும்!
ரேட்டிங்(2.5 / 5)
சண்டைகோழி படத்தில் ராஜ்கிரண் ஊரில் பெரிய தலையாக இருப்பார். விஷால் ஒரு பிரச்சனையில் தலையிட வில்லன் கோஷ்டி விஷாலை துரத்தும். இங்கே வடம் என்று சொல்லி விட்டு சண்டைகோழி படத்தின் கதை..? காரணம்..?
வடம் படத்தின் கதையும், சண்டைக்கோழி படத்தின் கதையும் சில இடங்களில் ஒத்து போவதால் தான். அங்கே ராஜ்கிரண் என்றால் இங்கே நரேன். அங்கே விஷால் என்றால் இங்கே விமல். ஒரே வித்தியாசம் வடம் படத்தில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றை புள்ளியில் கதை பின்னப்பட்டிருக்கிறது. வடம் படத்தை நேத்ரன் இயக்கி உள்ளார்.
பாண்டி முனி என்ற ஜல்லிக்கட்டு காளைமாட்டை வளர்க்கிறார் விமல். இந்த காளையை விலை கொடுத்து வாங்க முயற்சி செய்கிறார் நட்டி. விமல் மறுக்க இது சண்டையாக மாறி மோதல் நட்டியின் கொலையில் முடிகிறது.
இந்த கொலைக்கு பழி வாங்க வருகிறார் ஹீரோயின் சங்கனா ஸ்ரீ. படத்தில் பல காட்சிகளில் சில படங்களின் பாதிப்பு இருந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு பின்னால் இருக்கும் மனிதர்களின் ஈகோ, காதல் போன்றவைகளை படமாக்கிய விதம் சிறப்பாக இருந்தது. ஜல்லிக்கட்டு காட்சிகள் சிறப்பாக அமைந்ததற்கு ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் மிக முக்கிய பங்காற்றி உள்ளன.
நட்டியின் நடிப்பும், ஆடுகளம் நரேனின் நடிப்பும் மிக அமர்க்களம். முனீஸ்காந்த் சிரிப்புக்கு பதில் சீரியஸ் காந்த் ஆக மாறி விட்டார். தனது மகள் மீது அன்பு செலுத்தும் இடத்திலும், மகள் இறந்தபின் அழும் இடத்திலும் முனீஸ் காந்த் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. ஒரு குணசித்திர நடிகர் என்று நிரூபித்து விடுகிறார்.
ஹீரோயின் சங்கனா காதல் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார். ஹீரோ விமல் எல்லா இடங்களிலும் வசனத்தை ஒரே போல் பேசுகிறார். விமல் ஒரே போன்று எல்லா படத்திலும் நடிப்பதை மாற்றி கொண்டால் விமல் சினிமா எதிர்காலத்திற்கு நல்லது.
படத்தின் மிகப்பெரிய பலம் இமானின் இசை. ஜல்லிக்கட்டு பாடலில் கம்பீரமும், காதல் பாடல்களில் நெகிழ்ச்சியும் இருக்கிறது. வடம் என்பதை ஜல்லிக்கட்டு மாட்டில் சுற்றப்பட்டுள்ள கயிறை குறிக்கும்.
படத்தில் திரைக்கதையை இன்னும் ஸ்டராங் செய்திருந்தால் இந்த வடத்தை நன்றாக இழுத்திருக்கலாம். குறைகள் இருந்தாலும், சில படங்களின் சாயல் இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்.

