

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் வடிவுக்கரசி , இன்றளவும் வில்லி கதாபாத்திரத்தில் இவரை மிஞ்சிய நடிகை இல்லை, என்று கூட கூறலாம். எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் பேசும் குணத்தினை கொண்டவர் அவர். தமிழ் சினிமாவை சேர்ந்த ரஜினிகாந்த், விஜயகாந்த் , கமல் , கவுண்டமணி உள்ளிட்ட நடிகர்களைப் பற்றி பலமுறை வெளிப்படையாக பேசியுள்ளார்.
நீண்ட காலமாக தமிழ் திரையில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த அவர் , ஒரு நேர்காணலில் தமிழக முதல்வர் விஜயைப் பற்றிக் கூறியது , விஜய் ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிர்வினையாற்ற, வடிவுக்கரசியின் நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் அந்த நேர்காணலை முழுமையாகப் பார்க்காமலும் , அவர் சொன்னதன் பொருளை உணராமலும் அவரை வசை பாடியுள்ளனர், என்றும் கருத்து கூறியுள்ளனர்.
அந்த நேர்காணலில் ஊடகவியலாளர் வடிவுக்கரசியிடம், நடிகர் விஜய் முதல்வரானது குறித்து கருத்துக்களை கூறுமாறு கேட்டார். அதற்கு பதிலளித்த வடிவுக்கரசி , "விஜய் தனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படத்தில் எனக்கு மகனாக அவர் நடித்துள்ளார். அவர் எப்போதுமே என்னுடைய மகன் போன்றவர் தான். அந்த படத்தில் என்னைப் பார்த்து 'அம்மன் கோவில் எல்லாமே' என்ற பாடலைக் கூட பாடுவார்.
அந்த படத்தில் நடிக்கும் காலத்தில் விஜயின் வாய் அசைவது கூட தெரியாது , அந்தளவிற்கு அதிர்ந்து கூட பேசாதவர் . மிகுந்த அமைதியாக இருக்கும் அவரைப் பார்த்து எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். அதுமட்டுமல்ல விஜய் நடக்கும் போது காலடி ஓசைக் கூட கேட்காத அளவிற்கு நடப்பவர். அதே நேரம் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது , யார் இந்த பையன்? அந்தப் பையனா இப்போ இப்படி சண்டை போடுது என்று சந்தேகம் கூட வரும்.
சண்டைக் காட்சிகள் என்றால் அந்தளவிற்கு விஜயின் ஈடுபாடு இருக்கும். விஜய் தேர்தலில் ஜெயித்து முதல்வர் ஆகிவிட்டார் என்றதும் எனக்கு வருத்தமாகத் தான் இருந்தது. அதற்கு காரணம் விஜய் இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய சுமையை சுமக்க வேண்டுமா? என்ற கவலை தான்". ஒரு அம்மாவாக எனக்கு அதில் வருத்தம் தான், என்று வடிவுக்கரசி கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், "விஜய் அவருடைய குடும்பத்தினருக்கு எந்த அளவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்தார்? என்பது எனக்கு தெரியும். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் , அதை விட்டுவிட்டு தேவை இல்லாமல் அரசியலுக்கு வந்து நிறைய அழுத்தங்களையும் கஷ்டங்களையும் அவர் பார்க்க வேண்டுமா? என்று என் மனதில் தோன்றியது.
சமீபத்தில் ஒருநாள் விஜயின் நெருங்கிய நண்பரான ஶ்ரீ நாத்தை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அவரிடம் பேசும் போது, விஜய் சிஎம் ஆனதில் எனக்கு வருத்தம் தான். இந்த வயதில் ஏராளமான பொறுப்புகளை எல்லாம் அவர் தலையில் சுமக்க வேண்டுமா? என்பதில் எனக்கு கஷ்டமாக இருக்கிறது , இதை விஜய்யிடம் சொல்லுங்கள்," என்று கூறியிருக்கிறார்.
வடிவுக்கரசி விஜய் முதல்வரானதில் , அவருக்கு ஏற்படும் பணிச்சுமை , மற்றும் அரசியல் அழுத்தங்களை நினைத்தே அவ்வாறு பேசி இருக்கிறார். அவரது பேச்சு விஜய் மீதான அன்பின் காரணமாக வெளிப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என்று ஒரு சில விஜய் ரசிகர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.