

சென்னையில் நேற்று மாலை, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஸ்லம்டாக்– 33 டெம்பிள் ரோடு திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் , இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக வரவுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு, செரினா வஹாப், துனியா விஜய் , சம்யுக்தா , விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேச தொடங்கிய விஜய் சேதுபதி "சீரியஸாக சொல்ல வேண்டுமென்றால் பூரி ஜெகநாத் ஒரு வரலாறு. எனக்கு தெரியாமலே அவருக்கும் எனக்கும் ஒரு பந்தம் உள்ளது". அவரது தெலுங்கு திரைப்படமான "அம்மா நானா ஓ தமிழா அம்மாயி" திரைப்படம் தமிழில் "எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி" என்று எடுக்கும் போது, அந்த திரைப்படத்தில் வெறும் 400 ரூபாய் சம்பளத்தில் நான் நடித்துள்ளேன்.
பூரி ஜெகநாத்திடம் இது பற்றி நான் கூறியிருக்கிறேன்," உங்களது படத்தின் ரீமிக்கில் நான் நடித்துள்ளேன் என்று. ஜெகநாத்தின் வாழ்க்கை கதையே அற்புதமாக இருக்கும். அவர் சினிமாவிற்கு வந்தது, அவரது தந்தை அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை, ஊருக்குள் அவர்களுக்கு இருக்கும் ஒரு சினிமா கொட்டகை, இன்றும் கூட அந்த சினிமா கொட்டகை இருக்கிறது. ஷூட்டிங் நேரம் முடிந்து விடப்படும் இடைவெளியில் கூட ஒரு சிறுகதையை ஜெகநாத் எழுதி விடுவார்.
அவர் வீட்டுக்கு நான் சாப்பிட சென்றபோது கூட நான்கு ஐந்து கதைகளை என்னிடம் கூறினார். அவரது திரைக்கதை, கதை சொல்லும் விதம், அதை வெளிப்படுத்தும் விதம் , திரையில் எந்த அளவிற்கு அதைக் கொண்டு வர வேண்டும் என்பதெல்லாம் அவரது அனுபவத்தில் தெளிவாக இருக்கும். பொதுவாக நடிகர்களுக்கு படம் திரையில் எப்படி இருக்கும்? என்ற பயம் இருக்கும். ஆனால், பூரி ஜெகநாத்திடம் அந்த பயம் தேவையில்லை.
அவரிடம் இருப்பது எப்போதும் ஆசுவாசமாக இருக்கும் , அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வார். அவர் ஒரு கில்லாடி , இந்த திரைப்படம் ஒவ்வொரு மொழியிலும் பெரிய வெற்றி பெறும். பூரி ஜெகந்நாத் திரைப்படங்களிலேயே இந்த படம் பெரிய வெற்றி பெற்ற படமாக இருக்கும். நம்முடன் வேலை செய்யும் பொழுது தெரியும் அல்லவா? அவருடைய அர்ப்பணிப்பு , அவருடைய உழைப்பு , இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு நடிகருக்கு நிச்சயம் தெரியும்.
உங்கள் மீது மிகப்பெரிய மரியாதையும் அன்பும் வைத்துள்ளேன்! இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. தயாரிப்பாளர் ஷார்மி மேடம் அவர்களுக்கும் எனது நன்றி. மீண்டும் இதே தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பதாக இருக்கட்டும், ஷார்மியுடன் நட்புடன் இருப்பதாகட்டும். அவர்கள் வீட்டிற்கு எப்போது சென்றாலும் சாப்பாடு போட்டே சாகடிப்பார்கள் நிஜமாகவே!
அங்கு போனால் நான் சொல்வேன். நீங்கள் என்னை வைத்து படம் எடுக்கிறீர்கள், நான் ஏற்கனவே பூசியது போல் தான் இருக்கிறேன். நீங்கள் இன்னும் பூசி விட்டால் என்னால் வேலை செய்ய முடியாது. அவர்களுடன் இருக்கும்போது தான் இதுக்கு மேலையும் தாங்காது என்று நான் டயட் கோர்ஸ் சேர்ந்தேன். அவர்கள் வீட்டின் சாப்பாடு தெலுங்கு படத்தில் காட்டுவதைப் போல, வகை வகையாக பிரம்மாண்டமாக இருக்கும், எப்போதும் சமைத்துக் கொண்டே இருப்பார்கள்.
நான் இதற்கு நன்றி சொல்லணும்.ஆனால், நன்றி சொல்ல மாட்டேன். அவ்வளவு சாப்பாடு போட்டு இருக்கிறார்கள்! அவர் பிசினஸில் மிகவும் ஸ்ட்ராங்கான பர்சன் கதைக்கு என்ன வேண்டுமோ? அதற்காக எதையும் செய்வார். தேங்க்ஸ் மேடம்!
'மகாராஜா' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு அதிரடியான ஆக்ரோஷ த்ரில்லர் களத்தில் குதித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டீசர் வெளியாகி, தற்போது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
யூடியூபில் வெளியான மிகக் குறுகிய காலத்திலேயே, இந்த டீசர் பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.
விஜய் சேதுபதியின் மிரட்டலான பார்வையும், அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பும் ரசிகர்களிடையே படத்தைப் பற்றிய ஆவலைத் தூண்டியுள்ளது. டீசரின் இந்த அசுர வேகம், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை சினிமா பிரியர்கள் மத்தியில் பல மடங்கு எகிற வைத்துள்ளது. 'மகாராஜா' படத்தை போலவே இந்த திரைப்படமும் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.