நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக குதித்துள்ள நிலையில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வந்தார். ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும் ஹிட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார். இவரின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி என்றாலும் கூட இவர் இனி சினிமாவில் நடிக்கபோவதில்லை என்று அறிவித்தது ரசிகர்களுக்கு பேரிடியாய் விழுந்தது.
விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நலப்பணிகளை செய்து வந்த விஜய், தானே களத்தில் இறங்கலாம் என முடிவெடுத்தார். இதனையடுத்து படிப்படியாக அனைத்து தொகுதி மாணவர்களுக்கு விருது வழங்கியது, வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது என களப்பணிகளில் ஈடுபட்டார். இதன் மூலம் மக்களும் விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி தமிழக வெற்றி கழகம் உருவாக்கி, இனி முழு நேர அரசியல் பணிகளை செய்வதாக அறிவித்தார். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் விஜய், தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் போட்டியிடத்திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை முதலில் தென் மண்டலத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார் என்றும் முதல் மாநாட்டை நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல் மாநாட்டில் கட்சியின் நிர்வாகிகள், கொடியை அறிமுகம் செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.