

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 80 ,90 களில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தவர் இளையராஜா. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி கிட்டதட்ட கால் நூற்றாண்டையும் கடந்து விட்டது. இவர்கள் இருவரும் ஏன் இணைந்து ஒரு படத்திலும் பணியாற்றுவது இல்லை? என்று கேள்வி நீண்ட காலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் இருந்து வருகிறது.
ஒரு காலத்தில் ரஜினி தொடர்ச்சியாக இளையராஜாவின் இசையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் அதிக படங்களுக்கு இசையமைத்த பெருமை இளையராஜாவிற்கு உண்டு. நீண்ட காலமாக இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ரஜினி சில நேரங்களில் அமைதியை விரும்பினால் நேரடியாக இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு சென்று விடுவார். இப்படி நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு சில முரண்பாடுகள் மூட்டையாக இருப்பதும் கவனிக்கத் தக்கது.
ரஜினி நடித்து வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற கூலி திரைப்படத்தில், இளையராஜாவின் பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டதற்காக அவர் தயாரிப்பு நிறுவனத்திற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தனது நெருங்கிய நண்பராக இருக்கும் ரஜினி நடிக்கும் படத்திற்கு அவர் காப்பிரைட் சம்பந்தமான நோட்டீஸ் அனுப்பியது , தமிழ் திரையுலகில் எவருக்கும் ஆச்சரியமாக இருக்கவில்லை. அவரது அனுமதியின்றி படத்தில் அவரது பாடல்கள் ஒளிபரப்பப்பட்டால் கட்டாயம் நோட்டீஸ் அனுப்புவார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் நடிகரும் யூ டியூபருமான சித்ரா லட்சுமணன் , இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனிடம் நேர்காணல் நடத்தினார். அதில் " வீரா திரைப்படத்திற்கு பின் , ரஜினியும் இளையராஜாவும் ஏன் இணைந்து பணியாற்றுவதில்லை? " என்று சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.
வீரா திரைப்படத்திற்கு பின்னர் , ரஜினியின் பாட்ஷா திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இளையராஜாவின் சம்பளம் அதிகமாக இருப்பதாக , தயாரிப்பாளர் தரப்பு ரஜினியிடம் கூறியிருந்தது. ரஜினி இளையராஜாவிடம் சம்பளத்தை பற்றி பேசினார்.
இது குறித்து பேசுகையில் " உங்களுக்கு தேவையானதை நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்கள் , எனக்கு தேவையானதை நான் கேட்டு பெற்றுக் கொள்கிறேன். அவர்களால் கொடுக்க முடிந்தால் கொடுக்கட்டும் , முடியாவிட்டால் பரவாயில்லை போகட்டும்" என்று இளையராஜா கூறியுள்ளார். அதற்கு , பின்னர் இளையராஜா எப்படியும் தனக்குத் தான் பாட்ஷா பட வாய்ப்பு வரும் என்று நினைத்திருந்தார். ஆனால் , அந்த திரைப்பட வாய்ப்பு அவருக்கு வரவில்லை , அதன் பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்று கங்கை அமரன் கூறினார்.
பாட்ஷா திரைப்பட வாய்ப்பு தேவாவிற்கு சென்றது. அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றது , தேவாவின் இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின்னர் தமிழ் சினிமாவின் பெரிய இசையமைப்பாளராக தேவா மாறினார். மேலும் தேவாவின் இசை தான் , இன்று வரை ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டிற்கு பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் முத்து திரைப்படத்தில் இருந்து 2.0 வரையில் ரஜினி பெரும்பாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ரஜினியின் படங்கள் சர்வதேச வரவேற்பை பெறுவதற்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒரு காரணமாக இருந்தது . 2.0 விற்கு பிறகு ரஜினிகாந்த் அனிருத்திற்கு தொடர்ச்சியான இசை வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.