இசைக் கலைஞர்களின் திறமைகளைப் போற்றி அவர்களுக்கு வழங்கப்படும் இசையின் உயரிய விருதுதான் கிராமி விருது.
இசை துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடைப்பெறும். அமெரிக்காவில் உள்ள National Academy of Recording Arts & Sciences அல்லது Latin Academy of Recording Arts & Sciences என்றழைக்கப்படும் ஒரு அகாடமியே இந்த விருதுகளை வழங்கி வருகிறது.
கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி முதன்முதலில் 1959ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மொத்தம் 28 விருதுகளே வழங்கப்பட்டன. அதன் பின்னர் 109 விருதுகளை ஒவ்வொரு பிரிவுகளிலும் இசையமைப்பாளர், பாடகர் எனப் பிரித்துக் கொடுத்தனர். 2011ம் ஆண்டு 109 விருதுகளிலிருந்து 78 விருதுகளாகக் குறைத்தனர்.
தற்போது இசைத் துறையில் பாப் இசை, ராக், ராப், கிளாசிக்கல், கோஸ்பல், ஜாஸ் போன்ற 25 பிரிவுகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் உலகம் முழுவதிலிமிருந்து 5 குழுக்களைத் தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் அந்த ஐந்து குழுக்களிலிருந்து ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குவார்கள். அதேபோல் சிறந்த பாடகர், சிறந்த பாடல், சிறந்த ஆல்பம் என 75க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முதல் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பாடல்களை அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின்னர் ஆண்டின் முதல் மாதம் அல்லது இரண்டாவது மாதம் விருது வழங்கும்நிகழ்ச்சி நடைபெறும்.
அந்தவகையில் முதன்முறையாக 1968ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ரவி சங்கர், கிராமி விருது வென்றார். இதுவரை அவர் 5 முறை கிராமி விருது பெற்று வாழ்நாள் சாதனை படைத்துள்ளார். அதேபோல் ஜுபின் மேஹ்தா அதிகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு 6 முறை வெற்றிபெற்றுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் ' ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற படத்திற்காக இரண்டு முறை கிராமி விருது வாங்கியிருக்கிறார்.
அந்தவகையில் 66 வது கிராமி விருது லாஸ் ஏஞ்சலில் நடைபெற்று வருகிறது. இதில் ஆல்பம் பாடல் விருதுக்காக இந்தியாவைச் சேர்ந்த சக்தி குழு விருது வென்றுள்ளது. சக்தி குழுவில் ஜான் மெக் லாஃப்லின், ஜகிர் உசைன், சங்கர் மஹாதேவன், வி. செல்வகணேஷ் மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் உள்ளனர். சக்தி குழு 1973ம் ஆண்டே தொடங்கப்பட்டிருந்தாலும், 2020ம் ஆண்டுத்தான் குழு நபர்கள் மீண்டும் இணைந்து முழு மூச்சுடன் செயல்பட்டனர். அந்தவகையில் சென்ற ஆண்டு தங்களது பாடலை கிராமி விருதுக்கு அனுப்பி வைத்து வெற்றிபெற்றுள்ளது சக்தி இசைக் குழு.