கடந்த 2022, செப்டெம்பர் 30ம் தேதி உலகெங்கும் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் 'காந்தாரா'. பார்த்த அனைவரையும் மிரட்டும் தொனியில் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த நிலையில், அனைவரின் பாராட்டையும் பெற்று, சமீபத்தில் 100 நாள் வெற்றி விழாவையும் கொண்டாடியது.
சிறிய பட்ஜெட்டில் தயாராகியிருந்தாலும், அதிகளவு வசூல் சாதனையையும் படைத்துள்ளதோடு, கன்னடப் படமான 'காந்தாரா', தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த ரிஷப் ஷெட்டி, சமீபத்தில் பேசும்போது, "கடந்தாண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'காந்தாரா' திரைப்படமே இரண்டாம் பாகம் என்றும், இப்படத்தின் முதல் பாகம்தான் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பாகமானது, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயங்களைக் குறித்தும் அந்த தெய்வத்தின் பின்னணி என்ன என்பது குறித்தும் விளக்கும் கதைக்களமாகத் தான் அமையும். அதற்கான கதை குறித்த பணி நடந்து கொண்டிருப்பதால் படம் குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும்" எனவும் கூறியுள்ளார்.