அக்பர் – பீர்பால் குட்டிக் கதை!

அக்பர் – பீர்பால் குட்டிக் கதை!
Published on

மொகலாய மன்னர் அக்பர் ஓர் அரசகுமாரனுக்கு தன் மகளை திருமணம் முடித்து வைத்தார். மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையும் சச்சரவுகளும் ஏற்பட்டது. இதனால் மன நிம்மதி இழந்த அக்பரின் மகள் தன் தந்தையிடம் வந்து கண்ணீர் விட்டுக்கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீரைக்கண்டதும்  அக்பருக்கு தன் மாப்பிள்ளை மீது கடும் கோபம் ஏற்பட்டது.

அதனால் தன் படைவீரர்களை அனுப்பி மருமகனை கைது செய்து தில்லியில் உள்ள சிறையில் அடைத்தார். அத்தோடு அவரது கோபம் தணிய வில்லை. எல்லா வீடுகளிலும் உள்ள மாப்பிள்ளைகளையும் கைது செய்து வர ஆணையிட்டார். அதேவேளையில் அக்பர் பீர்பாலையும் உடனே வரவழைத்தார்.

"சக்கரவர்த்திப் பெருமானே! தாங்கள் உடனே அழைத்தக் காரணம் என்ன? " என்று கேட்டார் பீர்பால். "மதியுக பீர்பால் அவர்களே !  நாளை காலை சூரிய உதயத்தின் போது எனது மாப்பிள்ளையைத் தூக்கிலேற்றி மரணதண்டன விதிக்க வேண்டும். அதே நேரத்தில், நமது நகரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் மாப்பிள்ளை களையும் தூக்கிலிட வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்ளைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் " என கட்டளையிட்டார் அக்பர்.

மன்னரின் விசித்திரமான ஆணையைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார் பீர்பால். உத்தரவைக் கேட்ட மக்களும் அச்சமடைந்தனர். கலவரமுற்ற மக்களைப் பார்த்து "இதற்காக பயப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அரசரும் அவ்வளவு கொடிய மனம் படைத்தவர் அல்ல" என்று சமாதானம் கூறி மக்களை அனுப்பி வைத்தார் பீர்பால்.

சூரிய உதயத்திற்கு முன்னர் அரண்மனைக்குச் சென்ற பீர்பால் "சர்க்கரவர்த்திப் பெருமானே! தாங்கள் கட்டளையிட்டபடி தூக்கு மரங்கள் தயாராகி விட்டன. தாங்கள் வந்து பார்வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்ளைகளுக்கும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றி விடலாம் "என்றார்.

பீர்பாலின் சொற்படி தூக்கு மரங்களை பார்வையிட்டார் அரசர். அச் சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இடையில் ஒரு தூக்கு மரம் தங்கத்திலும், மற்றொரு தூக்கு மரம் வெள்ளியிலும் காணப்பட்டது.

" இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளன. இதற்கு காரணம் என்ன? " என்று கேட்டார் அக்பர். சிறிதும் பதட்டப்படாமல்  அமைதியாக "மன்னர் பெருமானே! அந்த தங்கத்தினால் செய்த மரம் தங்களுக்காகவும், வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்கு மரம் எனக்காகவும் " என்றார் பீர்பால்.

பீர்பாலின் எதிர்பாராத பதிலைக் கேட்டதும் அக்பருக்கு ஆச்சரியமாக இருந்தது " நமக்கு எதற்கு தூக்கு மரங்கள்? என்றார் அக்பர். "மன்னர் பெருமானே! தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்ளை தானே, அதேபோல நானும் ஒரு வீட்டின் மாப்பிள்ளை தானே ஆகவே சட்டப்படி தண்டனை நம்முடைய இருவருக்கும் சேர்த்துத்தான்! " என்றார் பீர்பால்.கோபத்துடன் இருந்த அக்பர் தன்னை மறந்து வாய்விட்டு சிரித்தார்.

" மேன்மை மிகு சக்கரவர்த்தி பெருமானே! தங்களுடைய மாப்பிள்ளை தவறு செய்தமைக்காக நாட்டிலுள்ள எல்லோரையும் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களுடைய மாப்பிள்ளை செய்த தவறைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டுமேயன்றி, மரணதண்டனை அளிக்கலாமா? தங்களைத் திருத்துவதற்கு எந்த அருகதையும் எனக்கு கிடையாது. ஆனால் இந்தச் செய்கையால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கடமையல்லவா? தயவு செய்து மாப்பிள்ளைகளின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறேன் " என்றார் பீர்பால்.

தவறு செய்து அவப்பெயர் எடுப்பதிலிருந்து தன்னைத் தடுத்த பீர்பாலை அக்பர் பெரிதும் பாராட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com