
மழை சீசன் என்றால், சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்துக்கு தனி மவுசு வந்துவிடும். வானிலை மைய இயக்குனர் தினம், தினம் கலர் கலர் சட்டை போட்டுக்கொண்டு, புயல், மழை நிலவரம் பற்றிய நிலவரங்களை மீடியாவுடன் பகிர்ந்துகொள்வார்கள். அதிகாரப் பூர்வமான அரசாங்கத்துறை அலுவலகத்தின் கணிப்பு என்ற வகையில் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆனால், சமீபகாலமாக, குறிப்பாக மழை சீசனில் பல தனியார் வானிலை ஆர்வலர்களும் சமூக ஊடகங்களின் வாயிலாக மழை, புயல் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஏராளமானவர்கள் அவர்களைப் பின் தொடர்கிறார்கள். இன்றைய தேதியில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப் பிரபலமான வானிலை ஆர்வலர் என்றால் அவர் பிரதீப் ஜான்! சென்னையில், ஒரு அரசு சார் நிறுவனத்தில் பணியாற்றும் இஞ்சினியர். சொந்த ஊர் கன்னியாகுமரி. சென்னையை மிரட்டிய மழை, சற்றே குறைந்த ஒரு நாள் மாலை அவர் கல்கிக்கு அளித்த பேட்டி:
"முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவு படுத்தி விடுகிறேன். நான் வானிலை மையத்தில் பணியாற்றவில்லை; வானிலை ஆராய்ச்சி நிபுணரும் இல்லை; தினமும் ஆபீசுக்குப் போய்வரும் அரசு அலுவலர். வானிலை குறித்து எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதன் அடிப்படையில்தான் நான் இயங்கி வருகிறேன்."
அப்படியென்றால் உங்களுக்கு வானிலை விஷயத்தில் எப்போது, எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
"சிறு வயதில் இருந்தே எனக்கு மழை என்றால் ரொம்பப் பிடிக்கும். 1994 அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி புயல் அடித்தது. கடுமையான மழை. அப்போது தொடர்ந்து மழை பெய்வதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூட நாட்களிலேயே, ஹிந்து பேப்பரில் வானிலை குறித்த செயற்கைக் கோள் மற்றும் காற்றழுத்த வரைப்படங்களையும் தினமும் வெளியிடுவார்கள். நான் அந்தப் படங்களை ஆர்வத்துடன் கவனிப்பேன்; அவற்றுக்கான செய்திகளையும் வரைபடத்துடன் சேர்த்து தினமும் படித்து, மழை, வானிலை குறித்த என் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அடுத்து, நாட்டில் எங்கே மழை பெய்தாலும், அது குறித்து பேப்பரில் வெளியாகும் செய்தியை, குறிப்பாக பருவ மழைக் காலத்தில் கவனத்துடன் படிப்பேன். பேப்பரில் ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த விஷயங்களை முதலில் படிப்பார்கள். நான் வானிலை சம்மந்தமானவற்றை முதலில் படிப்பேன். மழை நாட்களில் ரேடியோவில் வானிலை அறிக்கைகளை ஆர்வமாகக் கேட்பேன். ரேடியோவில் புயல் எச்சரிக்கைகள் குறித்து சொல்லப்படும் விஷயங்களையும், மறுநாள் பேப்பரில் புயல் குறித்து வெளியாகும் செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு, இன்ஜினீயரிங் சேர்ந்த கால கட்டத்தில்தான் இன்டர்நெட் அறிமுகமாகி இருந்தது. அதன் மூலமாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்றால் என்ன? அது எப்படி புயலாக மாறுகிறது? புயலை ஆங்கிலத்தில் பல பெயர்களால் குறிப்பிடுகிறார்களே, அவை ஒவ்வொன்றுக்கும் என்ன வித்தியாசம்? அவற்றின் தாக்கம் எப்படி மாறுபடும்? என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது. மேலும், மழை, புயல் குறித்த உலகளாவிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் இன்டர்நெட் மிகவும் உதவியது.
உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தது?
"இன்ஜினீயரிங், அதன் பின் எம்.பி.ஏ. முடிக்கும்போது, சென்னையைச் சேர்ந்த ராகேஷ் என்பவர், "இந்தியன் வெதர்மேன்" என்ற பிளாக் ஸ்பாட்டின் மூலமாக வானிலை குறித்த கருத்துக்களைப் பதிவு செய்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரிய வந்தது. அதன்பின் அவரது பதிவுகளை தொடர்ந்து படித்து, பல விஷயங்களைத் தெரிந்துக்கொண்டேன். 'கியா வெதர்' என்ற பிளாகில் ஏராளமான வானிலை தொடர்பான தகவல்கள் வெளியாகும். அதேபோல மும்பையிலும் ராஜேஷ் கபாடியா செயல்பட்டு வந்தார். இவர்களின் எழுத்துக்களை எல்லாம் நான் தொடர்ந்து படித்து, நிறைய விஷயங்களைத் தெரிந்துக்கொண்டேன். அதிகமாக மழை பெறும் இடங்கள் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டு, அந்த இடங்கள் குறித்த தகவல்களை சேகரித்து, அங்கே மழை பெய்யும் பேட்டர்ன் பற்றி ஆராய்ந்தேன். 2010ல், நானும் ஒரு பிளாக் ஆரம்பித்தேன், பெயர்: "தமிழ்நாடு வெதர்மேன்"
அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
"மழை பற்றிய ஏராளமான தகவல்களை, அதன் மூலம் நான் பகிர்ந்துகொண்டேன். ஆனால், பெரிசாக அது மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், நான் மனம் தளரவில்லை; தொடர்ந்து மழை, புயல், வெள்ளம் குறித்து எழுதிக்கொண்டே இருந்தேன். நாளடைவில் மக்கள் எனது எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்தார்கள். இன்று முகநூல், இணைய தளம் மூலமாக வானிலை குறித்த தகவல்களை நான் பகிர்ந்துகொள்கிறேன். இன்று என்னை முகநூலில் ஏழரை லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது பிரதீப்?
"வானிலை குறித்து நான் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களின் அடிப்படையில், அவ்வப்போதைய மழை. புயல் நிலவரங்கள் குறித்து கிடைக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து அடுத்து என்ன நிகழக்கூடும் என கணித்து, அந்தத் தகவல்களை நான் பகிர்ந்துகொள்கிறேன். அதேபோல நிகழும்போது, ஏன்னுடைய எழுத்துக்கு நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. ஒவ்வொரு மழை சீசனிலும் என்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது."
மறக்க முடியாத அனுபவங்கள்?
"நிறைய சொல்லலாம். உதாரணமாக, 2017ல், ஆகஸ்ட் 6ஆம் தேதி, சென்னையில் திடீர் மழை வர வாய்ப்பு உள்ளது. ஆனால், மழை கால் மணி நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும்" என்று சொல்லி, அன்றைய வானிலை சூழ்நிலையையும் விளக்கி இருந்தேன். சொன்ன மாதிரியே அன்று மழை பெய்ந்தது. அது மட்டுமில்லை. பல்வேறு இடங்களிலும், மழை பத்து முதல் 20 நிமிடங்கள் வரையே பெய்தது. மறுநாள் காலை சென்னையில் ஒரு மாரத்தான் ஓட்டம் நடக்கவிருந்த சூழ்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மழை பெய்து, தங்கள் மாரத்தான் ஓட்ட ஏற்பாடுகள் வீணாகிவிடுமோ என பயந்தார்கள். ஆனால், நான், "மழை பெய்து முடித்துவிட்டது. நீங்கள் திட்டமிட்டபடி, காலையில் மாரத்தான் ஓட்டத்தை நடத்தலாம்" என்று சொன்னேன். மறுநாள் காலையில் பிரச்னை ஏதுமின்றி, மாரத்தான் ஓட்டம் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது.
ஒரு நூற்றாண்டு காணாத மழை பெய்து, 2015ல் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. கொட்டும் மழையிலும், நான் மழை குறித்த தகவல்களை தொடர்ந்து அளித்து வந்தேன். ஒரு கட்டத்தில் "வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள். அலுவலகங்களில் இருப்பவர்கள், வீட்டுக்குப் புறப்பட்டு விடுங்கள்" என எச்சரித்தேன். நானும் கொட்டும் மழையிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கித் தவித்து, வீடு வந்து சேர்ந்தேன். இரவு முழுக்க நான் தூங்கவில்லை; அப்டேட் செய்துகொண்டே இருந்தேன். அதிகாலையில், "சென்னை மழை ஓய்ந்துவிட்டது! இனி மழை பெய்யாது!" என்று தகவல் பதிவிட்டுவிட்டுத்தான் நான் தூங்கப்போனேன்.