“பாதயாத்திரை மூலமாக ஆட்சியைப் பிடித்தவரை, இன்னொரு பாதயாத்திரை மூலமாக வீழ்த்த முடியுமா?” என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜகன்மோகன் ரெட்டியை 2024 சட்ட மன்றத் தேர்தலில் வீழ்த்திவிட வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறார் நாயுடு. தனக்கு வயசாகிவிட்டதால் (அவருக்கு வயது 72) தன் மகனை “பாதயாத்திரை” அனுப்பத் திட்டம் போடுகிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி கடைசியில் நாயுடுவின் குப்பம் தொகுதியிலிருந்து புறப்பட்டு, ஆந்திராவின் கடலோர வட கிழக்கு கோடியில் உள்ள இச்சாபுரம் வரை பாதயாத்திரை செல்வதாகத் திட்டம்.
அந்த பாதயாத்திரையில், தன் மகன் நாரா லோகேஷுடன் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சி முக்கியஸ்தர்களின் மகன், மகள்கள் பங்கேற்க வேண்டும் என்று நாயுடு விரும்புகிறார். ஆனால், கட்சியின் மற்ற தலைவர்கள் இதில் பெரிசாய் ஆர்வம் காட்டாதது அவருக்கு ஏமாற்றமளிக்கிறது.
இதற்கிடையில், “பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்திவிடலாமா என்று யோசிக்கிறார் ஜகன் மோகன் ரெட்டி” என்று ஒரு நியூஸ். “பா.ஜ.க.வுடன் தெலுங்கு தேசம் கூட்டணியில் இல்லாததால், மும்முனைப் போட்டியில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது சுலபமாக இருக்கும்” என்பது ஜகன் மோகன் ரெட்டியின் கணக்கு.
பார்க்கலாம் யார் யார் எப்படிக் காய்கள் நகர்த்துகிறார்கள் என்று!