ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா!

177th Aradhana of Sri Thyagaraja Swamy
177th Aradhana of Sri Thyagaraja Swamyhttps://www.hindutamil.in

ங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் 1767ம் ஆண்டு திருவாரூரில் ராமபிரம்மம் - சீதம்மா தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதிலேயே சமஸ்கிருத மொழி பயின்று அதில் தேர்ச்சி பெற்றார்.  பின்பு சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்றார். தமது தலைசிறந்த சாகித்தியங்களால் கர்நாடக சங்கீதத்திற்கு சிறப்பும் பெருமையும் சேர்த்தவர் தியாகப்ரம்மம்.

சங்கீதத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றவுடன் இவர் கீர்த்தனங்கள் இயற்றத் தொடங்கினார்.  அபார ராம பக்தி கொண்ட தியாகராஜர், ராமபிரான் மீது எண்ணற்ற கீர்த்தனங்கள் தெலுங்கில் இயற்றியிருக்கிறார். இவருடைய கீர்த்தனங்கள் பாவத்துடன் கேட்பவர் உள்ளத்தை உருக்கும் விதமாக அமைந்திருக்கும்.  எல்லாமே பக்தி ரசம் நிறைந்த கீர்த்தனங்கள். சங்கீத வித்வான்கள் மனமுருகி பக்தியோடு இன்றும் இந்த கீர்த்தனைகளை மேடைக் கச்சேரிகளில் இசைக்கிறார்கள்.

இவர் சிறுவயது முதலே தங்கள் வீட்டில் ராம, சீதா, லட்சுமண விக்ரகங்களை பூஜை அறையில் வைத்து தினந்தோறும் சிரத்தையாக பூஜித்து வந்தார். இது பிடிக்காத இவரது தமையனார் ஒரு நாள் இரவு இவர் பூஜித்து வந்த விக்ரகங்களை இவருக்குத் தெரியாமல் தூக்கிக்கொண்டு போய் காவிரி நதியில் வீசி எறிந்து விட்டார். தான் தினந்தோறும் வழிபடும் விக்ரகங்களைக் காணாமல் நிலைகுலைந்து போன தியாகராஜர் அவற்றைத் தேடி பித்துப் பிடித்தவர் போல் அலைந்தார். சில நாட்களுக்குள், ஸ்ரீராமபிரான் அருளால் விக்ரகங்கள் இருக்குமிடம் தெரிந்து  அவற்றைக் கண்டெடுத்து மகிழ்ச்சியோடு வீட்டுக்குக் கொண்டு வந்து திரும்பவும் வழிபாட்டை ஆரம்பித்தார்.

ஒரு சமயம் மகான் ஒருவர் இவரை ராம நாமத்தை 96 கோடி முறை ஜபிக்கும் படி கூறினார். அதன்படியே இவர் 21 ஆண்டுகளில் 96 கோடி ராம நாமம் ஜபித்து முடித்தார்.  இதனால் இவர் வாழ்க்கையில் பல முறைகள் இவருக்கு ஸ்ரீ ராமரின் தரிசனம் கிடைத்தது.

முதன் முதலில் பெங்களூர் நாகரத்தினம்மா என்னும் கர்நாடக இசைப் பாடகி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்காக  ஒரு கோயில் கட்டி 1940ல் தியாகராஜ ஆராதனையை தொடங்கி வைத்தார். மார்கழி மாத பகுள பஞ்சமியன்று ஸ்ரீ தியாகராஜரின் ஆராதனை விழா தஞ்சை மாவட்டம், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்  சித்தியடைந்த திருவையாறில் கோலாகலமாக நடைபெறத் தொடங்கியது.

ஸ்ரீ தியாக ப்ரம்மம் ஆராதனை விழா
ஸ்ரீ தியாக ப்ரம்மம் ஆராதனை விழாhttps://www.hindutamil.in

1949 முதல் பஞ்சரத்ன கிருதிகளை கோரஸாகப் பாடி ஸ்ரீ தியாகராஜரை ஆராதிக்கும் வழக்கம் வந்தது. இந்த ஆராதனை விழா தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற இசை விழாவாக விளங்குகிறது. முதலில் ஆராதனை நடக்கும் தினத்தன்று காலையில் உஞ்சவிருத்தி பஜன் அவருடைய இல்லம் அமைந்திருக்கும் திருமஞ்சன வீதியிலிருந்து ஆரம்பித்து அவருடைய சமாதியில் முடிவுறும். அன்று அவருடைய திருவுருவ சிலைக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். அந்த நேரத்தில் சங்கீத வித்வான்களால் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்படும். இந்த பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஹரிகேசநல்லூர் ஸ்ரீ முத்தையா பாகவதர் அவர்களால் தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டது.

ஒரு வரிசை கிரமப்படி நடைபெறும் இந்த ஆராதனை விழாவில், காலை எட்டு மணியளவில் முதலில் நாதஸ்வர வித்வான்களின் சேர்ந்திசையை அடுத்து,  'சேதுலாரா' என்னும் பைரவி ராகக் கீர்த்தனத்தை புல்லாங்குழல் வித்வான்கள்  சேர்ந்து இசைப்பார்கள். அப்பொழுது ஸ்ரீ தியாகராஜர் விக்ரகத்திற்கு அபிஷேகம் ஆரம்பிக்கப்படும். தொடர்ந்து எதிரெதிர் வரிசைகளில் அமர்ந்திருக்கும் ஆண்கள், பெண்கள் என்று அனைத்து சங்கீத வித்வான்களும் சேர்ந்து, 'பஞ்ச ரத்ன' கீர்த்தனங்கள் என்று ஸ்ரீ தியாகய்யர் இயற்றிய ஐந்து பாடல்களை கோரஸாகப் பாடுவார்கள். இவை, 'ஜெகதாநந்தகா' என்னும் நாட்டை ராகப் பாடல், 'துடுகு கல' என்னும் கௌள ராகப் பாடல், 'சாதிஞ்சனே' என்னும் ஆரபி ராகப் பாடல், 'கனகன ருசிரா' என்னும் வராளி ராகத்தில் அமைந்த பாடல் கடைசியாக 'எந்தரோ மஹானுபாவுலு' என்னும் ஸ்ரீராகப் பாடலாக உள்ளது. இந்த வரிசையில் பஞ்சரத்ன கீர்த்தனங்கள் பாடப்படுவது ஒரு பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்வில் வெற்றியாளராகத் திகழ நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!
177th Aradhana of Sri Thyagaraja Swamy

இந்த நிகழ்வு நேரலையாக பல வருடங்களாக பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் திருவையாறில் நடைபெறும் ஆராதனை விழாவுக்குப் போக முடியாத சங்கீத வித்வான்களும்,  ரசிகர்களும் வீட்டிலிருந்தபடியே நேரலையில் ஆராதனை விழாவை கண்டு களித்தபடி, பஞ்சரத்ன கீர்த்தனங்களை கூடவே பாடி ஸ்ரீ தியாகராஜ பிரம்மம் என்னும் ஒப்பற்ற மகானுக்கு இசை அஞ்சலி செலுத்தலாம்.

1847ம் வருடம் ஜனவரி 6ம் தேதி சித்தியடைந்த ஸ்ரீ தியாகராஜருக்கு இந்த வருடம் 177வது ஆராதனை விழா நாளை (30.01.2024 செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீ தியாகப்ரம்ம மஹோத்ஸவ குழுவால் கொண்டாடப்படும் இந்த விழா 26.01.2024 அன்று ஆரம்பித்து 30.01.24 அன்று ஆராதனை விழாவோடு நிறைவடைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com