வேலூர் தங்க கோவில் வேலூர் அருகே ஸ்ரீபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது லட்சுமி நாராயணர் பொற்கோவில் ஆகும். திருப்பதியில் இருந்து 120 கிலோமீட்டர் சென்னையில் இருந்து 145 கிலோ மீட்டர் புதுச்சேரியில் இருந்து 160 கிலோமீட்டர் மற்றும் பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்தக் கோவில் செல்வத்துக்கு அதிபதியாக விளங்குகிறது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த கோவில் 1500 கிலோ சுத்தமான தங்கத்தால் ஆன தகடுகள் கொண்டு அமைக்கப்பட்டது.
அமிர்தசரஸ் பொற்கோவில் 750 கிலோ தங்கத்தால் ஆனது, அதைப்போன்று இரு மடங்கு தங்கத்தால் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் 100 ஏக்கர் பரப்பளவில் சிறப்பாக அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணப்பூக்களும் இயற்கை தாவரங்களும் நிறைந்து காணப்படும். இந்த கோவில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நாராயணி பீடம் சத்தி அம்மா என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த கோவில் தேசிய பசுமை விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கோவில் நடைபாதைகளில் ஆன்மீக குறிப்புகள் எழுதப்பட்டு இருக்கும்.
இக்கோவிலில் விமானம் சுத்தமான தங்கத் தகடுகளால் மூடப்பட்டு இருக்கும். கோவிலில் நடைபாதை 1.8 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. காலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரை நடை திறந்து இருக்கும். கோவில் கட்டும் எண்ணம் நாராயணி அம்மா கனவில் வந்ததாகும். ஏழு ஆண்டுகள் கட்டடப் பணி நடந்து கடந்த 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
அனைத்து ஆறுகளில் இருந்தும் புனித நீர் எடுக்கப்பட்டு சர்வ தீர்த்த குளம் அமைக்கப்பட்டது. இங்கு உள்ள பூங்காக்களில் 2000 வகையான தாவரங்கள் இருப்பது சிறப்பு. இந்த கோவிலின் சார்பாக ஒரு மருத்துவமனை செயல்படுகிறது. அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான கோவில் ஆகும்.