காலத்தை வென்ற தூரிகைகள்- 2000 ஆண்டுகளாய் அழியாத அஜந்தா குகை 'ஹெர்பல்' ஓவியங்கள்!

Ajanta 'Herbal' Paintings
Ajanta 'Herbal' Paintings
Published on

காராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத் அருகில், வாகுரா ஆற்றின் வளைவில் அமைந்துள்ள அஜந்தா குகைகள், உலக அதிசயங்களுக்கு இணையானவை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் உளி மற்றும் சுத்தியலைக் கொண்டு செதுக்கப்பட்ட இந்த குகைகளில் உள்ள ஓவியங்கள், இன்றும் அதன் பொலிவை இழக்காமல் இருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நவீன இரசாயனக் கலவைகள் இல்லாத அந்தக் காலத்தில், இந்த ஓவியங்கள் எப்படி இவ்வளவு காலம் நிலைத்து நிற்கின்றன? அதன் பின்னணியில் உள்ள 'இயற்கை தொழில்நுட்பம்' குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

குகைச் சுவர்களின் ரகசியக் கலவை:

அஜந்தா ஓவியங்கள் நேரடியாக பாறைகளின் மீது வரையப்படவில்லை. எரிமலைப் பாறையான 'பசால்ட்' கற்கள் மிகவும் கடினமானவை. எனவே, ஓவியம் வரைவதற்கு முன் சுவர்களைத் தயார் செய்ய ஒரு தனித்துவமான கலவையைப் பயன்படுத்தினர்.

விலங்குகளின் சாணம், வைக்கோல், களிமண் மற்றும் அரிசித் தவிடு ஆகியவற்றை நீர்விட்டு பிசைந்து ஒரு தடிமனான பூச்சு உருவாக்கப்பட்டது. இதன் மேல் ஒரு மெல்லிய சுண்ணாம்புப் பூச்சு பூசப்பட்டது. ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்ட இந்த இயற்கை கலவை, ஓவியங்கள் விரிசல் அடையாமல் இருக்க 2000 ஆண்டுகளாக உதவி வருகிறது.

அழியாத இயற்கை வண்ணங்கள்:

அஜந்தா ஓவியங்களில் நாம் காணும் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்கள் அனைத்தும் மண்ணில் இருந்தும், கற்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை.

சிவப்பு மற்றும் மஞ்சள்: இவை உள்ளூர் மண்ணில் கிடைக்கும் இரும்பு ஆக்சைடு தாதுக்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. இதனால்தான் இந்த நிறங்கள் இன்றும் மாறாமல் ரத்த சிவப்பாகவும், தங்க மஞ்சளாகவும் மின்னுகின்றன.

பச்சை: 'கிளாக்கோனைட்' எனப்படும் ஒரு வகை பச்சை நிறக் கல்லில் இந்த வண்ணம் பெறப்பட்டது.

வெள்ளை: சுண்ணாம்பு மற்றும் ஒரு வகை வெண் களிமண் கொண்டு வெண்மை நிறம் உருவாக்கப்பட்டது.

கருப்பு (விளக்கு கருப்பு): விளக்குக் கரியைப் பயன்படுத்தி கண்கள் மற்றும் எல்லைக் கோடுகள் வரையப்பட்டன.

இதையும் படியுங்கள்:
2000 ஆண்டுகளுக்கு முன்பே ‘ஏர் கண்டிஷனிங்’ செய்த தமிழர்கள்! எப்படி தெரியுமா?
Ajanta 'Herbal' Paintings

வெளிநாட்டிலிருந்து வந்த நீலம்:

இந்த ஓவியங்களிலேயே மிகவும் ஆச்சரியமான விஷயம் 'ஆல்ட்ரா-மெரின் புளூ' எனப்படும் நீல நிறம். இந்த நிறம் இந்தியாவில் அப்போது கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் உள்ள 'பதாக்ஷான்' என்ற இடத்திலிருந்து 'லேபிஸ் லாசுலி' கற்களை வரவழைத்து, அவற்றை அரைத்து இந்த நீல நிறத்தை உருவாக்கியுள்ளனர். இது அக்காலத்திலேயே இந்தியா கொண்டிருந்த உலகளாவிய வணிகத் தொடர்பைக் காட்டுகிறது.

பிணைக்கும் பொருட்கள்:

வண்ணங்கள் சுவரில் ஒட்டிக் கொள்வதற்கு 'பிசின்' (பசை) மிக முக்கியம். பசைக்காக விலங்குகளின் தோல் அல்லது எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை நெகிழ்வுத் தன்மை கொண்ட பசை மற்றும் சில தாவரப் பிசின்களைப் பயன்படுத்துகின்றனர். இது வண்ணங்களைச் சுவருடன் ஆழமாகப் பிணைத்தது.

வெளிச்சம் இல்லாத இடத்தில் வித்தை!

அஜந்தா குகைகளுக்குள் சூரிய வெளிச்சம் நேரடியாக நுழையவில்லை. இருண்ட குகைக்குள் இவ்வளவு நுணுக்கமான ஓவியங்களை வரைய, அவர்கள் பெரிய கண்ணாடிகளைப் பயன்படுத்தி சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். இந்த மங்கலான ஒளியிலும் ஓவியங்கள் துல்லியமாகத் தெரிவதற்கு வண்ணங்களின் அடர்த்தி ஒரு முக்கிய காரணமாகும்.

இதையும் படியுங்கள்:
விமான நிலையங்கள் முதல் அரண்மனைகள் வரை... வாகைகுளம் விளக்குகளில் இத்தனை ரகங்களா?
Ajanta 'Herbal' Paintings

இன்று நாம் பயன்படுத்தும் பெயிண்ட்கள் சில ஆண்டுகளிலேயே வெளிறிப் போய்விடுகின்றன. ஆனால், நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து உருவாக்கிய இந்த வண்ணங்கள் காலத்தால் அழியாதவை. அஜந்தா ஓவியங்கள் வெறும் கலை மட்டுமல்ல; அவை இந்தியாவின் பழங்கால வேதியியல் மற்றும் பொறியியல் அறிவுக்குச் சான்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com