மருந்து இல்லா மருத்துவம்: நோய் தீர்க்கும் சக்தி கொண்டதா இந்த சௌரா ஓவியங்கள்?

Medicine without drugs
Medicine without drugs
Published on

காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்த ஆதிமனிதர்களின் தொடர்பு கருவியாக இருந்தவை சுவரோவியங்கள். இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் இத்தகைய ஓவியங்களை பார்க்க முடியும்.

அந்த வகையில் 1500 ஆண்டுகள் பழமையான ஒடிசா மாநில பழங்குடியின மக்களின் சௌரா ஓவியங்கள் சிறப்பு பெற்றவை. சௌரா பெயிண்டிங் என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லாஞ்சியா சௌரா (சோரா) (Langia Saura) என்ற பழங்குடியினரால் வரையப்படும் ஒரு தொன்மையான பழங்குடி சுவரொவியப் பாணியாகும். இது 'இட்டலோன்ஸ்' (Italons), ஐகான்ஸ் (Icons) அல்லது 'ஈகான்ஸ்' என்றும் அழைக்கப் படுகிறது. இவை பெரும்பாலும் சடங்குகள், விவசாயம் மற்றும் தினசரி வாழ்க்கையை சித்தரிக்கின்றன.

ஒடிசாவின் ராயகடா, கோராபுட் மற்றும் கஜபதி மாவட்டங்களில் உள்ள சௌரா பழங்குடியின மக்கள் மரம், சூரியன், சந்திரன், யானை, குதிரை மற்றும் சடங்கு நடனங்கள் போன்ற மனித வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் வண்ணம் ஓவியங்கள் வரைகிறார்கள். பாரம்பரியமாக இடிதால் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப் பட்ட இது, சடங்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓவியங்களில் கிராம வாழ்க்கை, இயற்கை மற்றும் அண்டக் கூறுகளை சித்தரிக்கும் சிக்கலான வடிவியல், தாள லயத்திலான குச்சி உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை பொதுவாக சிவப்பு அல்லது மஞ்சள் காவி நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

வார்லி ஓவியத்தை போலவே இருந்தாலும் சௌரா கலையானது நீளமான மற்றும் கோணங்கள் குறைந்த மனித உருவங்களை பயன்படுத்துகிறது. சௌரா ஓவியங்களில், எல்லையிலிருந்து உள்நோக்கி வரையும் மீன்வலை அணுகுமுறை பயன்படுத்தப் படுகிறது. ஆனால் வார்லி ஓவியங்களில் இது இல்லை. இரண்டுமே குச்சி உருவங்களைப் பயன்படுத்தும் பழங்குடி சித்திர எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருந்தாலும், வார்லி ஓவியங்கள் மனித உடலை சித்தரிக்க இணைந்த முக்கோணங்களைப் பயன்படுத்துகின்றன.

அதேசமயம் சௌரா ஓவியங்களில் உருவங்கள் அவ்வளவு கூர்மையாக வரையறுக்கப்படவில்லை. மேலும் வார்லி ஓவியங்களில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் தெளிவாக வேறுபடுத்தக்கூடியவையாக இருக்கும் நிலையில், சௌரா கலையில் அத்தகைய உடல் வேறுபாடு இல்லை.

இதையும் படியுங்கள்:
உஷார்... இன்று ஏப்ரல் 1! நீங்கள் முட்டாளாகாமல் தப்பிப்பது எப்படி?
Medicine without drugs

பாரம்பரியமாக வெள்ளை நிறமிகள் அரிசி மாவு, வெள்ளை மண் மற்றும் தாவரச் சாறுகள் போன்ற இயற்கையான வெள்ளை வண்ணங்களை பயன்படுத்தி பழுப்பு நிற மண் சுவர்களில் வரையப்படுகின்றன. ஐகான்கள் எனப்படும் சௌரா பெயிண்டிங்குகள் முதலில் சோரா களிமண் குடிசைகளின் சுவர்களில் வரையப்பட்டன. ஓவியப் பின்னணிகள் சிவப்பு அல்லது மஞ்சள் காவி மண்ணிலிருந்து தயாரிக்கப்படுகின்றன‌. பின்னர் அவை இளம் தளிர்களிலிருந்து செய்யப்பட்ட தூரிகைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படுகின்றன.

இது வெறும் கலையல்ல, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், நோய் தடுப்பு மற்றும் செழிப்பிற்காகவும் வரையப்படுகிறது. மனிதர்கள், விலங்குகள், இயற்கை மற்றும் சடங்குகளை வடிவியல் கோடுகள் மூலம் இந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன.

தற்காலத்தில் இந்த பாரம்பரிய சுவரோவியக் கலையானது சுவர்களில் மட்டுமல்லாது கேன்வாஸ், காகிதம் மற்றும் பட்டுப் புடவைகளிலும் வரையப்பட்டு சர்வதேச அளவில் பிரபலமாகி வருகின்றன. கேன்வாஸ் மற்றும் காகிதம் போன்றவற்றில் அக்ரலிக் வண்ணங்கள் கொண்டு அழகுபடுத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com