ஒரே ஒரு அச்சில் ஒரு சிலை மட்டுமே! ஏன் தெரியுமா? - 'லாஸ்ட் வேக்ஸ்' முறையின் வியப்பூட்டும் உண்மை!

Ancient tamil lost wax bronze casting process
Ancient tamil lost wax bronze casting processImg credit: AI Image
Published on

தமிழர் வரலாற்றில் கலைக்கும் அறிவியலுக்கும் உள்ள பிணைப்பை விளக்கும் மிகச்சிறந்த சான்று மெழுகு வார்ப்பு முறை ஆகும். இதனைத் தமிழில் 'உருகும் மெழுகு முறை' என்று அழைப்பர். இதை சமஸ்கிருதத்தில் 'மதுச்சிஷ்ட விதானம்' என்றும் அழைப்பதுண்டு. சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே இந்த முறையின் பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெண்கலச் சிலைகளை வடிக்கப் பயன்படும் இந்தத் தொழில்நுட்பம், இன்றும் அதன் தனித்துவத்தை இழக்காமல் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தச் செயல்முறையின் முதல் படி, ஒரு முழுமையான மெழுகுச் சிலையை உருவாக்குவதாகும். இதற்காகத் தேன் மெழுகு, பிசின், கொழுப்பு, எண்ணெய் ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இந்தக் கலவை ஒவ்வொரு பகுதி மற்றும் பாரம்பரியத்தைப் பொறுத்து மாறுபடலாம். சிற்பிகள் தங்களின் கைத்திறனால் இந்த மெழுகைக் கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிலையை வடிக்கின்றனர். இந்த மெழுகு உருவமே வெண்கலச் சிலையின் அளவையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.

மெழுகில் வடிக்கப்பட்ட சிலையின் மீது 'கருக்களி' எனப்படும் வண்டல் மண்ணை பல அடுக்குகளாகப் பூசுவார்கள். இந்த மண் அடுக்கே வார்ப்புருவாக செயல்படும். களிமண் நன்றாகக் காய்ந்த பிறகு, அதனை உலையில் வைத்துச் சூடுபடுத்துவார்கள். அப்போது உள்ளே இருக்கும் மெழுகு உருகி, அதற்காக விடப்பட்ட சிறிய துவாரத்தின் வழியாக வெளியேறிவிடும். இப்போது களிமண் அச்சின் உள்ளே ஒரு வெற்றிடம் இருக்கும்.

வெற்றிடமாக உள்ள அந்தச் சூடான களிமண் அச்சின் உள்ளே, உருக்கப்பட்ட வெண்கலக் கலவை அல்லது ஐம்பொன் ஊற்றுவார்கள். உலோகம் குளிர்ந்து கல்லாக மாறியதும், வெளிப்பக்கத்தில் உள்ள களிமண் அச்சு கவனமாக உடைக்கப்படும். உள்ளே இருந்து ஒரு அழகான உலோகச் சிலை வெளிப்படும்.

இதையும் படியுங்கள்:
யாராலும் படிக்க முடியாத மர்ம புத்தகம்! Voynich கையெழுத்துப் பிரதியின் திடுக்கிடும் உண்மைகள்!
Ancient tamil lost wax bronze casting process

லாஸ்ட்-வேக்ஸ் முறையின் தனிச்சிறப்பு ஒவ்வொரு சிலையும் ஒருமுறை மட்டுமே செய்ய முடியும் என்பதுதான். ஒருமுறை மெழுகு உருகிவிட்டால், அதே மாதிரியை மீண்டும் பயன்படுத்த முடியாது. அதனால் ஒவ்வொரு சிற்பமும் தனித்துவமான கலைப்பொருளாகும்.

மேலும், இந்த முறையில் மிகவும் நுணுக்கமான விவரங்களையும் துல்லியமாக வடிவமைக்க முடியும். சிற்பங்களின் முகபாவம், ஆடை அலங்காரம், நகைகள் போன்றவை மிக நுட்பமாக வெளிப்படும்.

சோழர் காலத்தில், குறிப்பாக நடராஜர் சிலைகள் இந்த முறையில்தான் உலகத் தரத்தில் வடிக்கப்பட்டன. இன்றும் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலைப் பகுதியில் வாழும் சிற்பிகள் இந்தத் தொன்மையான முறையைப் பின்பற்றிச் சிலைகளைச் செய்து வருகின்றனர். இதற்காகச் சுவாமிமலை வெண்கலச் சிலைகளுக்கு இந்திய அரசின் 'புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் உலோகவியல் அறிவுக்கு காலத்தால் அழியாத சான்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com