கடந்த 2008ம் ஆண்டு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் மற்றும் அதனுடன் குதிரைகளின் எலும்புக் கூடுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பழமைவாய்ந்தத் தேருக்கு பின்னால் உள்ள கதையைதான் நாம் பார்க்கவுள்ளோம்.
Veselin Ignatov என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்தான் இந்த மரத்தால் ஆன தேர் மற்றும் குதிரையின் எலும்புக்கூடுகளை கண்டுப்பிடித்தார். இது வெண்கலத்தால் மூடப்பட்டு, மேலும் சில பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த அலங்காரத்தைப் பார்த்தோமானால், இது த்ரசியன் (Thracian) நம்பிக்கைக் கொண்ட த்ரசிய மக்களின் செயல்முறை என்பது தெரியவந்தது.
ஒரு கல்லறையில் ஆயுதங்களோடு இருந்த ஒரு போர் வீரனின் எலும்புக்கூடை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த கல்லறையில் தங்க நாணயங்கள், தங்க மோதிரங்கள், வெள்ளி குவளை ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இது க்ரேக்க கடவுளின் முறைகளை குறிக்கிறது. அந்தவகையில் பார்த்தால், புதைக்கப்பட்டவர் ஒரு வீரராகவோ அல்லது மன்னராகவோதான் இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். அதேபோல் த்ரசி என்ற இடத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது அந்த இடம் தற்போது பல்கேரியாவாக உள்ளது.
Thracia கலாச்சாரம் இப்போது எந்த இடத்திலுமே இல்லை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று. அந்த இடமே தற்போது பல்கேரியாகவாக மாறியிருக்கும்போது அந்த இடம் மற்றும் கலாச்சாரம் இருப்பது எப்படி சாத்தியமாகும். ரோமானியர்கள் சிலர் அப்போது மன்னர் மற்றும் பிரபுக்களாக இருந்தவர்களை இந்த முறையில்தான் அடக்கம் செய்திருக்கிறார்களாம்.
அவர்களுடன் சில பொருட்களை வைப்பதோடு, தேருடன் சேர்த்து அதை இழுக்கும் குதிரைகள் (கொல்லப்பட்டு) மற்றும் காணிக்கையாக நாய், பன்றி போன்ற விலங்குகளில் ஒன்றை பலி கொடுத்து வைப்பார்களாம். மேலும் அப்படி தேரை குழிக்குள் வைப்பதற்கு முன்னர் அதனை அடித்து உடைத்து வைப்பது வழக்கம். சிலசமயம், மது, கலைப் பொருட்கள் போன்றவையெல்லாம் இறந்தவருடன் வைக்கப்படுமாம்.
இந்த கண்டுபிடிப்புக்கு பின்னர் அந்த பொருட்கள் அனைத்தையும் ஆராய்ச்சியாளர்கள் அருங்காட்சியகத்தில் பத்திரமாக வைத்துள்ளனர். ஏனெனில், அப்போதுதானே இப்போது நமக்கே தெரியாத த்ரசியன் கலாச்சாரம் வருங்காலத்தில் வாழும் மக்களுக்குத் தெரியும்.