200 ஆண்டுகள் பழமையான 'நாச்சார் வீடுகள்'! போய் வருவோமா?

Nachar houses
Nachar houses
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நாற்சார் வீடுகள் என்று அழைக்கப்பட்டு, பின்னர் பேச்சு வழக்கில் நாச்சார் வீடுகள் என்று மாறிப்போன வீடுகள் இலங்கையின், யாழ்ப்பாணம் முழுதும் பரவலாக இருந்தன. மானிப்பாய், வட்டுக்கோட்டை, மருதனார்மடம் உள்ளிட்ட வலி மேற்கு, வலி வடக்கு போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. நாச்சார் வீடுகள் கருங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு அமைக்கபட்டவை. சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையான வீடுகளும் இருக்கின்றன.

நாச்சார் வீடுகளின் மையத்தில் செவ்வக வடிவில் முற்றம் ஒன்றும், அதைச் சுற்றி சற்று உயரமான நடை மேடையும், தூண்களும், பின்னர் அதனைச் சுற்றி அறைகளும் அமைக்கபட்டிருக்கும். மரவேலைப்பாடுகள் கொண்டவையாகவும் அமைக்கபட்டுள்ளன. இந்த வீடுகள் மரபு வழியிலான பெரிய கூட்டுக் குடும்பங்களுக்காக கட்டபட்டவை. அதற்கேற்றவாறு சில வீடுகள் பத்து பன்னிரண்டு அறைகள் கொண்டதாகவும் இருக்கும். வண்ணார்பண்ணைப் பகுதியில் இரண்டு முற்றங்களைக் கொண்ட சில வீடுகளும் இருந்திருக்கின்றன.

இவ்வீடுகளில், தெருவில் இருந்து வீட்டுக்குள் செல்வதற்கு ஒரு நடைபாதை இருக்கும். இதை 'நடை' என அழைப்பர். இது நடு முற்றம் வரை செல்லும். சில வீடுகளில் நடைக்கு, சதுரமாக வெட்டி, மட்டம் செய்யப்பட்ட கருங்கல் பதிக்கப்பட்டிருக்கும். நடையின் இரண்டு பக்கங்களிலும் ஒன்றரை அல்லது இரண்டு அடி உயரமான திண்ணைகள் இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அக்காலத்தில் இத்திண்ணைகளில் அமர வைத்து உபசரித்தனர்.

இந்த வீடுகள், காரைக்குடிப் பகுதியிலுள்ள செட்டிநாட்டினர் வீடுகளை நினைவுபடுத்தினாலும், இவ்வீடுகளின் மேற்கூரை ஓடுகளைக் கொண்ட அமைப்புடன் இருப்பதைப் பார்க்கும் போது, இவை கேரளத்தில் உள்ள நாலுகெட்டு வீடுகளைப் போன்றவை எனலாம்.

யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, அதிகமாகப் பொருளீட்டிய பணக்காரக் குடும்பங்களால் இவ்வகை வீடுகள் முதலில் கட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இந்த வீடுகளை உள்ளூர்க்காரர்களும் கட்டிக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
முத்து குளிக்க வாறீகளா? எப்படி?
Nachar houses

கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு வசதியாக அமைக்கப்பட்ட நாச்சார் வீடுகள், தற்போதையக் கூட்டுக் குடும்பங்களின் சிதைவால், வீடுகளில் கூட்டமின்றி போய்விட்டன. வயதானவர்கள் மட்டும் வாழக்கூடிய வீடுகளாக மாறிப் போய் விட்டன. உள்நாட்டுப் போரின் போது, இவ்வகையான பல வீடுகள் சேதமடைந்து போய்விட்டன என்றாலும், தற்போதையக் காலத்துக்கு இந்த வீடுகள் பயனில்லாதவை என்ற கருத்தின் அடிப்படையில், அதிகமான வீடுகள் இடித்து அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் நவீன மாடிக் கட்டிடங்கள் பல உருவாகி விட்டன. வணிக இட வசதித் தேவைக்கேற்பவும் இவ்வகை வீடுகள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் வணிகக் கட்டிடங்கள் வந்துவிட்டன.

யாழ்ப்பாணத்திற்குப் பெருமை சேர்த்து வந்த நாச்சார் வீடுகள் இன்று இல்லாமல் போய்க் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியதுதான்.

logo
Kalki Online
kalkionline.com