இந்தியாவின் பெருமைமிகு செங்கோட்டையின் வரலாறு தெரியுமா?

செங்கோட்டை
செங்கோட்டை
Published on

ந்தியாவின் கலாசாரத்துக்கு பெருமை சேர்க்கும் முக்கியமானவற்றுள் ஒன்று செங்கோட்டை என்று சொன்னால் அது மிகையல்ல. சுதந்திரப் போராட்டம் காலம் முதல் நமக்கு அடையாளமாய் திகழ்ந்து வருவது வீரமிகு செங்கோட்டை. சிறப்புமிக்க இந்த செங்கோட்டையின் வரலாறு பற்றி சுதந்திர தினமான இன்று அறிந்து கொள்வோம்.

‘லால் கிலா’ என்று அழைக்கப்படும் செங்கோட்டை இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும். இது 17ம் நூற்றாண்டின் மத்தியில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. இந்த செங்கோட்டை இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தது.

செங்கோட்டை முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 1638ம் ஆண்டு ஷாஜஹானாபாத்தின் தலைநகராகக் கட்டப்பட்டது. இது முகலாய கட்டடக் கலைஞர் உஸ்தாத் அஹ்மத் லஹூரி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த கோட்டையின் கட்டுமானம் 1648ல் நிறைவடைந்தது.

19ம் நூற்றாண்டின் மத்தியில் முகலாயப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை சுமார் 200 ஆண்டுகளாக இந்தக் கோட்டை முகலாயப் பேரரசர்களின் வசிப்பிடமாக இருந்தது. 1837ல் பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் முடிசூட்டு விழா மற்றும் 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர் உட்பட இந்திய வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகளின் தளமாக இது இருந்துள்ளது.

கோட்டை அமைப்பு: செங்கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை சுமார் 254 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் உயரமான சுவர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்கு பல நுழைவாயில்கள் உள்ளன. கோட்டையின் முக்கிய நுழைவாயில் லாகூர் கேட் வழியாக உள்ளது.

செங்கோட்டையும் இந்திய தேசியக் கொடியும்
செங்கோட்டையும் இந்திய தேசியக் கொடியும்

கோட்டையில் பேரரசர் தனது குடிமக்களுடன் உரையாடும் ஒரு பெரிய திறந்த முற்றம் உள்ளது. அது திவான்-இ-ஆம் அல்லது பொது பார்வையாளர்களின் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. செங்கோட்டையில் உள்ள மற்ற முக்கியமான கட்டமைப்புகளில் ரங் மஹால் சிறப்புப் பங்கு வகிக்கிறது. இந்த அரண்மனையில் பேரரசர்களின் மனைவிகள் தங்கியிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
அழகான கையெழுத்து கொண்ட இந்தியப் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
செங்கோட்டை

கோட்டை அழகிய சுவரோவியங்கள் மற்றும் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் பல தோட்டங்கள் மற்றும் மண்டபங்கள் உள்ளன. கோட்டையின் மிக முக்கியமான கட்டமைப்புகளில் ஒன்று மோதி மசூதி அல்லது முத்து மஸ்ஜித் ஆகும். இந்த மசூதி ஷாஜகானின் மகன் ஔரங்கசீப்பால் கட்டப்பட்டது. இது முகலாய கட்டடக்கலைக்கு மிக அற்புதமான உதாரணம். இந்த மசூதி வெள்ளை பளிங்குக்கல்லால் ஆனது.

இங்கு தினமும் மாலையில் நடைபெறும் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி கோட்டை  அழகை இரட்டிப்பாக்குவது மட்டுமின்றி, இங்கு வரும் பார்வையாளர்களை கவர்கிறது. இது தவிர, இந்தக் கோட்டை பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக, இந்தியா சுதந்திரம் பெற்ற உடனே நேரு கொடி ஏற்றிய நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி, இந்தியப் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இடமாக இது இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com