உருளைக்கிழங்கின் வரலாறு தெரியுமா?

உருளைக்கிழங்கின் வரலாறு தெரியுமா?

ருளைக்கிழங்கு செடியின் பூவை பெண்கள் தங்கள் தலையில் சூடவும், ஆண்கள் தங்கள் கோட்டுகளில் செருகிக்கொள்ளவுமே ஆரம்பத்தில் பயன்படுத்தினர் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிழங்கை உண்ணும் பழக்கம் பிற்பாடுதான் ஏற்பட்டது. நமது அன்றாட உணவு பொருளாகிவிட்ட உருளைக்கிழங்கின் வரலாறை பார்த்தால் வியப்பாக இருக்கும்.

உருளைக்கிழங்கை முதலில் தென் அமெரிக்காவைச் சேர்ந்த சிலி நாட்டில்தான் கண்டுபிடித்தார்கள். 1537ல் தங்க வேட்டைக்காக தென் அமெரிக்காவுக்கு சென்ற ஸ்பெயின் நாட்டு வீரர்கள் ஆண்டீஸ் மலைப்பிரதேசத்தில் சுற்றி அலைந்து கொண்டிருந்தபோது அங்கு வாழ்ந்த மக்கள் வீரர்களின் பசியைத் தணிக்க வேக வைத்த ருசிமிக்க கிழங்கைக் கொடுத்தனர். அதுவே உருளைக்கிழங்கு. அதன்பிறகு சிலி நாட்டில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிவப்பு இந்தியர்கள் உண்பதை 1557ல் சர்.பிரான்சிஸ் டிரேக் என்பவர் கண்டார்.

தங்கத்தை தேடிச்சென்ற ஸ்பெயின் நாட்டு வீரர்களுக்கு தங்க இடம் கிடைத்ததோ இல்லையோ, ருசி மிக்க உருளைக்கிழங்கு கிடைத்தது. அவர்கள் மூலம் அது ஸ்பெயின் நாட்டிற்குப் பரவியது. பின்னர் 1580ல் கிழங்கு இத்தாலிக்கு கொண்டு போகப்பட்டு பயிரிடப்பட்டது. அங்கிருந்துதான் மற்ற மேலை நாடுகளுக்கு அறிமுகம் ஆயிற்று.

ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உருளைக்கிழங்கு செடி பெருமளவில் பெயரிடப்பட்டது. சர்.வால்டர் ரேலே என்பவர் 1588ல் அயர்லாந்தில் அதை பயிரிட்டார். 1590ல் அது இங்கிலாந்துக்கும் பரவியது. 1612ல் இங்கிலாந்தில் இருந்து பர்முடா நாட்டுக்கும், அங்கே இருந்து வெர்ஜினியாக்கும் பரவியது. இவ்வாறு காட்டுக்கிழங்காக இருந்த உருளைக்கிழங்கு நாட்டு மக்கள் உண்ணும் உணவு பொருளாய் ஏற்றம் பெற்றது.

ஆனால், ஆரம்பத்தில் பொதுமக்களிடையே இந்த கிழங்கு பிரபலமாகவில்லை. புதுமையாக இருந்ததால் இந்தக் கிழங்கை சீமான்கள் மட்டுமே உணவில் சேர்த்துக்கொண்டனர். பாதிரிமார்களும் சமயத்தினரும் உருளைக்கிழங்கு உட்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அயர்லாந்து நாட்டு மன்னன் ஃபிரடரிக், மக்கள் அனைவரும் உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும் என்று சட்டம் போட்டதோடு, குடியானவர்கள் உருளைக்கிழங்கை கட்டாயமாக பயிரிட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார். தனது அரண்மனை தோட்டத்திலேயே அதை பயிரிடவும் செய்தார்.

ஃபிரடரிக் மன்னனிடம் போர் கைதியாக இருந்த ஆந்த்வா ஆகுஸ்தை பரமேந்வார் என்னும் விஞ்ஞானி உருளைக்கிழங்கு ருசியையும் மகத்துவத்தையும் கண்டறிந்து, அவர் விடுதலை ஆனதும் தனது நாடான பிரான்சுக்கு அதை எடுத்துச் சென்று பயிரிட ஆவன செய்தார். அப்போது பிரான்ஸ் நாட்டு மன்னனாக இருந்த பதினான்காம் லூயி அதற்கு ஆதரவு தந்து பிரான்சில் அதை பெருவாரியாக பயிரிட கட்டளையிட்டார். அத்துடன் லூயி மன்னன் உருளைக்கிழங்கு செடியின் பூவை தனது சட்டை பொத்தான் துளையில் பொருத்திக்கொண்டு தர்பாருக்கு போனார். ராணி மேரி அண்டாய்னெட் அந்தப் பூக்களைக் கொண்டு கூந்தல் அலங்காரம் செய்துகொண்டாளாம்.

போர்ச்சுகீசியர் மூலமாகத்தான் உருளைக்கிழங்கு இந்தியாவுக்கு வந்தது. ஆனால், நம் நாட்டு மக்களால் அப்போது அது விரும்பிய உணவு பொருளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரிடம் இந்தக் கிழங்கின் மகிமையை நம் நாட்டு மன்னர்கள் அறிந்து, உணவில் சேர்த்துக்கொண்டனர். மெல்ல மெல்ல அதை மற்றவர்களும் உண்ணத் தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் அதை பயிரிடத் தொடங்கினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com