

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி வரலாறு உள்ளது. அவ்வரிசையில் மொழியை வெளிப்படுத்த எழுத்துகளை எழுத உதவும் பேனாவிற்கும் ஒரு வரலாறு உள்ளது. பேனாவின் உள்ளிருக்கும் மை-க்கும் ஒரு வரலாறு உள்ளது. மை உருவான வரலாற்றைத் தான் நம் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ஒரு மொழியை உலகிற்கு அறியச் செய்ய உதவியது எழுத்துகள் தான். எழுத்துகளை மற்றவர்களின் பார்வைக்கு வெளிப்படுத்த அன்றைய காலங்களில் ஓலைச்சுவடிகள் தான் அதிகம் பயன்படுத்துப்பட்டு வந்தன. மன்னர்கள் தங்கள் வரலாற்றையும், சாதனைகளையும் கல்வெட்டில் எழுதி வைத்தனர். காலம் செல்ல செல்ல தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இன்று எழுத்துகளை அடையாளப்படுத்த பலவழிகள் வந்து விட்டன. இருப்பினும் இதில் முக்கியமானது மை தான். சிறிதளவு பேனாவின் முனையில் இருந்து வரும் மை தான் இன்றைய எழுத்துலகை ஆட்சி செய்து வருகிறது.
இன்றைய கணிணி மயமான உலகில், என்ன தான் எழுத்துகளை கணிணியில் தட்டச்சு செய்து வந்தாலும், நம் கையால் நம் தாய்மொழியில் எழுதுவதும் கூட தனி சுகமாகத் தான் இருக்கிறது. பேனாவில் பயன்படுத்தப்படும் மை எப்படி வந்தது மற்றும் அதன் வரலாற்றை இப்போது அறிந்து கொள்வோமா!
தனது எண்ணத்தையும், கருத்துகளையும் செதுக்கிக் கொண்டிருந்த மனிதன் அதனை மேலும் மெருகேற்ற நினைத்தான். ஓலைச்சுவடிகளில் செதுக்கியவன், பின்பு கல்வெட்டுகளில் செதுக்கினான். மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் எலும்புகளில் கூட எழுத்துகளை செதுக்கியதாக கூறப்படுகிறது. இப்படி எத்தனை நாட்களுக்குத் தான் எழுத்துகளை செதுக்குவது என்று சோர்ந்து போன மனிதனுக்கு வரமாய் கண்டுபிடிக்கப்பட்டது தான் மை எனும் இங்க் (INK).
சீன நாட்டைச் சேர்ந்த தத்துவ மேதையான டியுன் சியு பல நூற்றாண்டுகளுக்கு முன் மை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இறங்கினார். அப்போது கார்பன் நிறமி, பைன் மரத்தின் துண்டுகளை எரித்தால் கிடைக்கும் புகைக் கரி மற்றும் விலங்குகளின் எலும்புகளில் இருந்து எடுக்கப்படும் ஊண் பசை ஆகியவற்றுடன் விளக்கெண்ணையைச் சேர்த்து ஆட்டு உரலில் போட்டு இடித்தார். முடிவில் அடர் கருப்பு நிறத்திலான ஒரு திரவம் கிடைத்தது. இந்தத் திரவம் தான் உலகில் முதன்முதலில் ஒரு மொழியை எழுதுவதற்காகத் தயாரிக்கப்பட்ட முதல் மை ஆகும்.
அதன் பிறகு மை-யின் வடிவம் மாறி பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு, தற்போது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மிக எளிய பொருளாக சந்தையில் விற்கப்படுகிறது. மை மட்டுமல்ல இப்போது சந்தையில் விற்கப்படும் பல பொருள்கள், ஒரு காலத்தில் யாருக்கும் கிடைக்காத அரிய பொருள்களாகவே இருந்துள்ளது. கவிஞர்களின் எழுத்துகளை தாங்கியது புத்தகம் என்றால், எழுத்துகளை அடையாளப்படுத்தியது மை தான் என்று சொன்னால் அது மிகையாகாது. எழுத்துகளை அடையாளப்படுத்த இன்னும் எத்தனை வழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், மை-க்கு என்றுமே தனியிடம் உண்டு.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here