- ஜே. வினு
Wabi sabi என்பது ஜப்பானின் அழகியல் சார்ந்த தத்துவம். (தமிழில் சரியாக மொழிப்பெயர்க்க முடியுமா எனத் தெரியவில்லை) அதற்கு 'குறையுள்ள அழகு' என மொழிப்பெயர்த்துள்ளனர். அதாவது எதிலும் நேர்த்தியைக் காணாமல் சிறிது குறை இருப்பதையும் மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் விளக்கமாகவும் இருக்கலாம்.
இயற்கையும் அப்படிதான். இயற்கையின் அழகில் இருக்கும் குறைகளையும் கண்டறிந்து இறைவனைக் காண வேண்டும். ஒரு ஜென்தத்துவக் கதை மூலம் இதை உணரலாம்.
ஜென் குடியிருப்பில் அந்நாட்டின் உயர்மட்ட நிலையில் இருக்கும் ஒருவரின் வருகைக்காக இளம் துறவியிடம் அந்த இடத்தை சுத்தம் செய்ய சொல்கிறார் முதிர்ந்த துறவி. இளையவர் அந்த இடத்தை அவ்வளவு சுத்தமாக மாற்றி ஆனந்தமாக பெரியவரை அழைக்கிறார். ஆனால் அப்பெரியவரோ , அவ்விடத்தில் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்து, அங்கிருந்த மரத்தைப் பிடித்து சற்று ஆட்டுகிறார். அப்போது காய்ந்த இலைகள் கீழே விழுந்து, சுத்தம் செய்த இடத்தை கொஞ்சம் அசுத்தம் ஆக்குகிறது. ஆனால் அப்பெரியவர் இப்போதுதான் அந்த இடம் அழகாக இருப்பதாக கூறுகிறார். இதுதான் wabi sabi தத்துவம்.
ஜப்பானியர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரக டீக் கோப்பைகளை சிறிது கீறிட்டு, அதில் தேநீர் அருந்துவதின் மூலம் இந்தத் தத்துவத்தை கொண்டாடுகின்றனர். இது ஜப்பானிய கலாச்சாரம்.
நம் நாட்டில் அழகான வீடு கட்டி, திருஷ்டி பொம்மை வாசலில் கட்டுவது, குழந்தைகளுக்கு கரும் மையில் கன்னத்திலும் , நெற்றியிலும் பொட்டு வைப்பது, கால் மற்றும் கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டுவது எல்லாமே wabi sabi தத்துவத்தைக் குறிப்பதுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா?