கோயில் கோபுர பொம்மைகள் நமக்கு உணர்த்தும் உண்மைகள் என்ன தெரியுமா?

கோயில் கோபுர பொம்மைகள்
கோயில் கோபுர பொம்மைகள்https://www.flickr.com
Published on

ம் முன்னோர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் அறிவியலுடன் கூடிய மனித வாழ்க்கைக்குத் தேவையான பல நன்மைகள் உள்ளன. அறிவியல் வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்திலேயே அதை ஆராய்ந்து அவர்கள் செய்திருக்கும் பல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. கோயிலுக்குச் சென்றால் நம் கண்ணில் படுவது முதலில் கம்பீரமாக நிற்கும் கோபுரங்கள்தான். அந்த கோபுரங்களில் வீற்றிருக்கும் நிறைய பொம்மைகளைக் கண்டு ரசித்திருப்போம்.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று கூறுவார்கள். காலையில் எழுந்ததும் முதல் தரிசனமாக நீங்கள் கோயில் கோபுரத்தைக் கண்டால் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு லாபமும், அதிர்ஷ்டமும் பெருகும். கோபுர தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என்கிறது ஆகம விதிகள்! இப்படி இருக்க கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகளுக்கு பின்னால் இருக்கும் சூட்சுமம்தான் என்ன? என்கிற ரகசியத்தை இந்தப் பதிவில் காண்போம்.

எதற்காக கோபுரங்கள் முழுவதும் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன? கோயில் கோபுர பொம்மைகளை எப்படி வேண்டுமானாலும் அமைத்து விடக் கூடாது. எந்தெந்த இடங்களில், எந்தெந்த தெய்வ உருவங்கள் இடம் பெற வேண்டுமோ, அந்த அமைப்பின்படி இருந்தால்தான் அதற்கு அதிக சக்தி உண்டு. கோபுரத்தின் மேல் பகுதியில் சிவபெருமான் தொடர்புள்ள பொம்மைகளும், நடுப்பகுதியில் விஷ்ணு பகவான் தொடர்புள்ள பொம்மைகளும், அடிப்பகுதியில் பிரம்ம தேவர் தொடர்புள்ள பொம்மைகளும் அமைக்கப்பட்டு இருக்கும். மற்ற பகுதிகளில் ரிஷிகள், பூத கணங்கள், தேவதைகள், பக்தர்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இப்படி ஒவ்வொரு பொம்மைகளையும் செதுக்கும் பொழுது அதில் இலக்கண விதி உண்டு. இந்த விதிக்கு ‘பிரதிமாலட்சணம்’ என்பது பெயராகும். இந்த விதியின்படி கோபுர பொம்மைகள் செதுக்கப்பட வேண்டும். இதில் தெய்வ உருவங்கள் அமைக்கப்படும்பொழுது அதன் கண்கள் அனுகிரக பார்வையுடன் சாந்தமாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தெய்வத்தின் திருமுகத்தை விட, உடல் பத்து மடங்கு பெரியதாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மாதுளை ஜூஸ் குடிக்கக் கூடாத 5 பேர் யார் தெரியுமா?
கோயில் கோபுர பொம்மைகள்

அதுபோல மனித உருவங்கள் அமைக்கப்படும்பொழுது முகத்தைக் காட்டிலும் உடல் எட்டு மடங்கு அதிகம் இருக்க வேண்டும். தேவதைகளின் உருவங்கள் முகத்தைக் காட்டிலும் 9 மடங்கு உடல் பெரியதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பூத கணங்கள், துவார பாலகர்கள், அசுரர்கள் ஆகியோருடைய கண்கள் உக்கிரமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கோபுர பொம்மைகளில் இவர்கள் மட்டுமல்லாமல் தேவர்கள், பறவைகள், மிருகங்கள் கூட செதுக்கப்பட்டு இருக்கும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் தெய்வம் அருள்புரியும் என்பதையும், எல்லோரும் இங்கு சமம் என்பதையும் உலக மக்களுக்கு புரிய வைக்கவே இப்படி கோயில் கோபுரத்தில் பொம்மைகள் அமைக்கப்படுகின்றன.

கோயிலுக்குச் செல்லும்பொழுது கட்டாயம் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு வர வேண்டும். கோயிலுக்கு போனோமா, வந்தோமா என்றில்லாமல் கோபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு பொம்மைகளையும் பார்த்து கண் குளிர ரசிக்க வேண்டும். கோபுரத்தை இவ்வகையில் தரிசனம் செய்த பின்பு, கோயிலுக்குள் சென்று மூலவரை வணங்க வேண்டும். பின்பு எல்லா கடவுளரையும் வணங்கிவிட்டு பிராகாரத்தை வலம் வர வேண்டும். அதன் பிறகு கொஞ்ச நேரமாவது அங்கு அமர்ந்து விட்டு, பின்னர் வீட்டுக்கு புறப்படலாம். முறையாக ஒரு கோயிலை இந்த வகையில் தரிசனம் செய்தவர்களுக்கு மனதில் தீய எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பே கிடையாது. இனி, எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் ராஜகோபுரத்தில் இருக்கும் பொம்மைகளை ரசித்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com