நாம் பயன்படுத்தும் கர்ச்சீப் ஏன் சதுர வடிவில் இருக்கிறது தெரியுமா?

Kerchief
Kerchief

நாம் அனைவருமே கைக்குட்டை, அதாவது கர்ச்சீப் பயன்படுத்துவோம். அந்த கைக்குட்டை எத்தனை நாகரிக மாற்றங்கள் நிகழ்ந்தாலும், ஆண்டாண்டு காலமாக ஒரே அளவு, அதாவது சதுர வடிவிலேயேதான் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி கைக்குட்டையை சதுர வடிவில்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு மன்னன் சட்டமே பிறப்பித்து இருக்கிறான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆடைகளே இல்லாமல் இருந்தான் மனிதன் ஒரு காலத்தில். அதை நாகரிகமற்ற கற்காலம் என்றோம். பின்பு உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் இலை தழைகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டான். ஆஹா… சிந்திக்கத் தொடங்கிவிட்டான் மனிதன் என்று சொன்னோம். பின்பு இன்னும் வளர்ச்சி அடைந்து ஆடைகள் என்ற பெயரில் பல துணிகளை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டான். இப்போது மனிதன்தான் நாகரிகத்தின் உச்சம் என்றோம். சுற்றிய ஆடைகளை சற்று தேவைகளுக்கு ஏற்ப அழகுபடுத்தத் தொடங்கினான். இப்போது மனிதன்தான் ரசனையின் உச்சம் என்கிறோம். அதே ஆடை இன்று மெல்ல மெல்ல குறையத் தொடங்கி மீண்டும் ஆதிகாலத்திற்கு செல்லத் தொடங்கி விட்டது.

உலகத்தில் இதுவரை உருவாக்கப்பட்ட ஆடைகளின் வடிவமைப்பை கணக்கெடுக்கத் தொடங்கினால் பல நூற்றாண்டுகள் பிடிக்கும் என்று ஒரு தகவல் கூறுகிறது. காலத்தின் வேகத்தை மிஞ்சும் அளவிற்கு மனிதனின் புதுமைகள் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. என்னதான் இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆடையும் பல வடிவங்களைக் கொண்டு திகழ்ந்தாலும், இன்னும் உலகத்தில் ஒரே வடிவத்தை மட்டுமே அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒன்று உள்ளது என்றால் அது கைக்குட்டை ஒன்றுதான்.

சரி, இந்த கைக்குட்டையில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கத் தோன்றலாம். நமது மனித இனத்தில் பலர் ஆடைகளை பயன்படுத்துவதற்கு முன்பாகவே இந்த கைக்குட்டைகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இன்று மொபைல் போன்களைப் போல அனைவரின் கைவசம் இந்தக் கைக்குட்டைகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
பார்லி தண்ணீரில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
Kerchief

பொதுவாக, இதுவரை கைக்குட்டைகள் அதிகமாக சதுர வடிவத்தில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு மிகப்பெரிய காரணமும் அடங்கி இருக்கிறது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. உலகத்தில் இவ்வளவு மாற்றம் கண்ட நமது நாகரிக துணி வகைகளில் நாம் பயன்படுத்தும் கைக்குட்டையில் மட்டும் இன்னும் அதிக மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு மன்னன்தான் காரணம் என்றால் நம்புவீர்களா? ஆம் நண்பர்களே, பிரெஞ்சு மன்னர் ஒருவர் உலகத்தில் ஆடைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார். ஆனால், மனிதன் உடுத்தும் ஆடைகளில் ஒருபோதும் நம்மால் மாற்றம் செய்ய இயலாது என்று எண்ணிய மன்னன், நாம் பயன்படுத்தும் கைக்குட்டைகள் சதுர வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என்று 1785ம் ஆண்டு இதற்காக ஒரு சட்டமே இயற்றி இருக்கிறார்.

ஒருவேளை யாரேனும் இதை மீறி வேறு வடிவத்தில் கைக்குட்டைகளைப் பயன்படுத்தினால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற ஒரு பயங்கர தண்டனையையும் அறிவித்து இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தச் சட்டத்திற்குப் பிறகுதான் சர்வதேச கைக்குட்டை தயாரிப்பாளர்களும் கைக்குட்டைகளை சதுர வடிவில் மட்டுமே தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளில் கைக்குட்டை வைத்திருப்பது நன்கு படித்தவர்களின் அடையாளமாகக் கருதப்பட்ட காலமும் ஒன்று இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com