- ஸ்வர்ண ரம்யா
கனடாவின் பெருநகரம் மற்றும் பொருளாதார தலைநகரம் டொரொண்டோ. அங்கு ஒரே ஒரு வாடகை வீடு கிடைக்க பத்து நாட்களுக்கும் மேல் ஆனது. பல வலைத்தளங்களில் மேய்ந்து சலித்துப்போன பிறகு ஒரு காண்டோவில் (அடுக்குமாடி குடியிருப்பை இங்கே அப்படி அழைப்பார்கள்) பதினைந்தாவது தளத்தில் ‘பெண்ட் ஹவுஸ்’ எனப்படும் மொட்டை மாடி வீடு வாடகைக்குக் கிடைத்தது.
தனி வீடு கிடைத்திருந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தபோது. ’’வீட்டை சுத்தி அம்பது செ.மீ உயரம் வரைக்கும் குமிஞ்சி இருக்கிற ஸ்னோவை நாமேதான் சுத்தம் செய்யணும். இங்க ரெண்டு மாசம் முழுக்க ஸ்னோதான். பரவாயில்லயா?’’ என்று தனி வீட்டில் இருக்கும் நண்பர்கள் கதறவே நமக்கு காண்டோதான் சரிபடும் என்று முடிவு செய்தோம்.
இந்தியாவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கும், கனடாவில் இருக்கும் காண்டோவிற்கும் உள்ள முக்கியமான 6 வித்தியாசங்கள்:
1. எலக்ட்ரிக் குக்டாப் (மின்சார அடுப்பும் அதன் கீழே ஓவனும் சேர்ந்து இருக்கும்), டிஷ்வாஷர், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையர் இவையனைத்தும் காண்டோ வீட்டில் ஏற்கனவே இருக்கும். நாம் சென்று பட்டனை தட்டினால் போதும். (மின்சாரக் கட்டணம் வீட்டு வாடகைப் பணத்திற்குள்ளேயே வந்துவிடும்.)
2. ஒவ்வொரு வீட்டிற்கும் ப்ரத்யேகமான பாஸ்வேர்ட் போன்ற நான்கு இலக்க எண் உள்ளது. காண்டோவின் நுழைவாயிலில் இருக்கும் செக்யூரிட்டி போர்டில் அந்த எண்ணைத் தட்டியதும் அந்த பாஸ்வேர்ட் எண்ணின் சொந்தக்காரருக்கு (அதாவது வீட்டில் உள்ளவருக்கு) கைப்பேசியில் அழைப்பு வரும். அந்த அழைப்பை நாம் ஏற்றால்தான் காண்டோவின் நுழைவாயில் கதவே திறக்கும். இதனால் மர்ம நபர்கள் உள்ளே வரும் அபாயம் மிகக் குறைவே.
3. இங்கே தரைத்தளம் என நாம் கூறும் கிரவுண்ட் ஃப்ளோரை இவர்கள் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் என்கிறார்கள். காரணம். கட்டடம் கட்டப்படும் நிலம்தான் இவர்களுக்கு கிரவுண்ட். அதன்மேல் எழுப்பப்படும் முதல் தளம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்.
4. 12ஆவது தளத்திற்குப் பிறகு 14வது தளம்தான். லிஃப்டிலும் ‘13’ என்ற எண்ணைக் காண இயலாது. இந்த விதிகள் கனடாவிலுள்ள அத்தனை கட்டடங்களுக்கும் பொருந்தும். காரணம்…ட்ரிஸ்கைடேகாஃபோபியா. ‘13’ என்கிற எண்ணின் மீதுள்ள பயம். அந்த எண் வைத்த வீட்டையோ நிலத்தையோ யாரும் வாங்க மாட்டார்கள்.
5. துறுதுறு சுட்டிக் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் காண்டோவில் வாழ்வது சற்றே சவாலான விஷயம். இங்கு அதிக நாட்கள் குளிர்காலம் என்பதால் வீடுகளின் அடித்தளம் தவிர அனைத்தும் மரத்தால் கட்டப்பட்டிருக்கும். அதனால் மேல்தள வீட்டில் உள்ள குழந்தைகள் தடதடவென ஓடும்போது, கீழ்தள வீட்டினரின் தலையில் இடி இடிப்பதுபோல் சத்தம் கேட்கும். இதனால் குழந்தைகளின் பெற்றோர் மீது கீழ்வீட்டினர் புகார் கொடுக்க வாய்ப்புள்ளது.
6. தனி வீடு வைத்திருப்பவர்கள் குளிர்காலத்தில் வீட்டைச் சுற்றி குமிந்திருக்கும் பனியையும், கோடையில் மளமளவென முளைக்கும் புல்லையும் அவர்களேதான் சுத்தம் செய்ய வேண்டும், தவறினால் நகராட்சிக்கு அபராதம் கட்ட நேரும். காண்டோவில் நிர்வாகம் இதை பார்த்துக் கொள்ளும்.