பறவைகளை விரட்டும் 'தன் நாச்' எனும் நெல் நடனம்

Dhan Nach
Dhan NachImg Credit: infoilam
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நேபாளத்தின் லிம்புவன் பகுதி, கிழக்கு நேபாளம் மற்றும் இந்தியாவின் டார்ஜிலிங், காளிம்பொங் மாவட்டம் மற்றும் சிக்கிம் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட லிம்பு (யக்துங்) சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படும் ஒரு நடனம் தன் நாச் (Dhan Nach) எனப்படுகிறது. இந்த நடனம் பழம் எனப்படும் நாட்டுப்புறப் பாடலுடன் இணைந்த ஒரு நடனமாகும்.

தன் நாச் எனும் நேபாள மொழிச் சொல்லுக்கு தமிழில் நெல் நடனம் என்று பொருள் கொள்ளலாம். இந்த நாட்டுப்புற நடனத்தைப் பெரும்பான்மையாக, ‘யலாங்’ என்றேச் சொல்கின்றனர். இந்நடனம் லய லிம்பு சமூகங்களில் அவர்களின் மொழிகளுக்கு ஏற்பப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. உதாரணமாக, சத்தரே லிம்பு மொழியில், இது சாலக்மா என்றும், பந்தாரே லிம்பு மொழியில், இது யாலக்மா என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும், நடனத்தின் பெயர் நெல் நடனம் என்றுதான் பொருள் தருகிறது.

இந்த நெல் நடனம் தோன்றியதற்கும் ஒரு கதை இருக்கிறது.

உள்ளூர் புராணத்தின் படி, ஒரு கிராமத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருந்தனர். பிறகு, மக்கரேபு என்று லிம்பு மொழியில் அறியப்படும் ஒரு பறவை, 'கையா' வகை நெல்லின் சில விதைகளைக் கொண்டு வந்து, கிராமவாசியிடம் கொடுத்துப் பயிரிடச் சொன்னது. அந்தக் கிராமவாசியும், அந்த விதைகளை விதைத்து, விவசாயம் செய்து பலனளிக்கும் அறுவடையைப் பெற்றார்.

ஆனால் பறவைகள் அறுவடையின் பெரும்பகுதியை உண்ண ஆரம்பித்தன. கிராமவாசிகள் பறவையை விரட்ட முயன்றனர், ஆனால் பறவைகள் விதைகளைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே என்பதால் அறுவடை செய்யத் தங்களுக்கும் உரிமை உள்ளது என்றன. பறவையின் உரிமையை மறுக்க முடியாத கிராம மக்கள், பறவைகளும் நெல் அறுவடை செய்ய ஒப்புக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
'ஓ பழமி' யா? 'இ பழம' வா? எடக்கல் குகைக் கல்வெட்டுகள் கூறுவதென்ன?
Dhan Nach

அரிசியை அடித்தவுடன் பறவைகள் நேரடியாக உண்ணும். அதனால், மக்கள் தங்களுக்குத் தேவையான நெல், அரிசி இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் பறவைகளைப் பயமுறுத்தி விரட்டுவதற்காக, "ஹா.. ஹா... ஹா…" என்று ஒரு சத்தத்தை எழுப்பினர். பின்னாளில் அதுவே, இசையுடன் கூடிய பாடலாக மாறியது. பழமை மிகுந்த இப்பாடலைப் பாடும் போது, நெல் அறுவடையின் மீது மக்கள் கைப்பிடித்து ஆடுவார்கள். அது நெல்லிலிருந்து உமியைப் பிரிக்கும். அதன் பிறகு, மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மங்சீர் மாதத்தில், 'தன் நாச்' எனும் நெல் நடனத்தை ஆடத் தொடங்கினர்.

அதன் பிறகு அச்சமூகத்தினரிடையே இந்த நடனம் முக்கிய இடம் பிடித்து விட்டது. அச்சமூகத்தினரின் திருமணம், உதௌலி போன்ற திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் போன்ற பல வேளைகளில் இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது இணைகளாகவோ அல்லது குழுக்களாகவோ சேர்ந்து ஆடப்படுகிறது. ஆண்களும், பெண்களும், எந்த இரத்த உறவும் இல்லாமல் கைகளைப் பிடித்துக் கொண்டு நேர்கோட்டில் அல்லது வட்டமாக நின்று இந்த நடனத்தை ஆடுகிறார்கள். இந்த நடனம், வரலாற்று ரீதியாக, ஏழு பகல் மற்றும் ஏழு இரவுகள் நிகழ்த்தப்பட்டது என அறியப்படுகிறது.

அண்மையில், இந்த நடனத்தில் இச்சமூக இளைஞர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். அதனால், இந்த நடனம் அழியும் நிலையிலுள்ளது. அதனால் கவலையடைந்த நேபாளம் மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு கலாச்சார அமைப்புகள் இந்த நடன வடிவத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை இச்சமூக மக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நடன வடிவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கேடா என்ற குறும்படம் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com