
'கசவுப் புடவைகள்' என்று அழைக்கப்படும் கேரளப் புடவைகள் கேரளாவின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. கேரளப் பண்டிகை பொதுவாக கசவு புடவை இல்லாமல் முழுமை அடையாது.
கசவு புடவை வரலாறு
மென்மையான வெள்ளை நிற கைத்தறி பருத்தி துணியே கசவு எனப்படுகிறது. வெள்ளை மற்றும் தங்க நிறத்திலான இந்த புடவைகள், அவற்றின் அமைப்பு மற்றும் தங்க பார்டர் ஆகியவற்றால் தனித்துவமாக விளங்குகின்றன.
இந்த புடவைகளின் நெசவு மற்றும் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளிலிருந்து இந்த 'கசவு' எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கேரளா மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய உடை கசவு. அங்கு பெண்கள் 'செட்டு முண்டு' எனப்படும் இரண்டு துண்டு துணிகளை அணிவர். இது 'முண்டும் நெரியதும்' என்று பிரபலமாக அறியப்படுகிறது.
உடைக்கு புவிசார் குறியீடு
பௌத்த காலத்தில் முண்டும் நெரியதும் பிரபலமடைந்தது. மேலும் அதன் வடிவமைப்பு கிரேக்க -ரோமன் உடையான 'பால் மைரீனால்' ஈர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள பாலராமபுரம், சேந்தமங்கலம் மற்றும் குத்தாம்புள்ளி ஆகிய மூன்று இடங்களில் தான் இந்த கசவு உடைகள் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக இப்பகுதிகளுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாராஜா பலராமவர்மா மற்றும் அவரது முதல்வர் உம்மினி தம்பி ஆகியோரின் ஆட்சியின் கீழ் 'முண்டும் நெரியதும் ' கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.
சாலியா நெசவாளர்கள் பங்கு
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாலராமாபுரம் கேரளாவின் சிறந்த பருத்தி கைத்தறி துணிகளுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும்.
சாலியா சமூகத்தை சேர்ந்த நெசவாளர்கள் தற்போதைய தமிழ்நாட்டின் நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தேவைக்காக நதிநவீன முண்டும் நேரியதும் இவர்கள் தயாரித்தார்கள்.
இவர்களிடமிருந்து இந்த தொழில்நுட்பம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நெசவாளர்களுக்கும் பரவியது என கூறப்படுகிறது. புகழ் பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா தனது ஓவியங்களில் முண்டும் நெரியத்தும் அணிந்த பெண்களை பாரம்பரிய மற்றும் நவீன பாணியில் சித்தரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கசவு புடவை என்பது பல நூற்றாண்டுகள் பழமையான கேரளாவின் பாரம்பரிய வெள்ளை நிற பருத்தி அல்லது பட்டு கைத்தறி புடவை ஆகும். இது தங்க இழைகளால் ஆன பார்டர்களை கொண்டது. இது கேரளாவின் அடையாளம் மற்றும் கலாச்சார சின்னமாகும் . இது செழிப்பு, புனிதத்தன்மை, கருணையை குறிக்கிறது.
அரச குடும்பத்தினரிடையே பிரபலமாக இருந்த இந்த புடவை, திருமணங்கள் மற்றும் ஓணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் அணிந்து மரியாதை செலுத்தப்படுகிறது.
ஓணம் பண்டிகையின் போது இந்த புடவை அணிவது செழிப்பு மற்றும் ஆன்மிகத்தை குறிக்கும் ஒரு பாரம்பரியமாக உள்ளது. ஓணம் பண்டிகையின் போது கசவு புடவை அணிவது வெறும் ஃபேஷன் மட்டுமல்ல, கேரளாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகும்.