Bronze Age Couple
Bronze Age Couple

அணைத்தப்படி கிடைத்த எலும்புக்கூடுகள்… அழியா காதல்னா இதுதானோ?

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனின் ஒரு கல்லறையில் புதைக்கப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண்ணின் எலும்புக்கூடுகள் கிடைத்தன என்பது, இன்று வரை ஆச்சரயமூட்டும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த எலும்புக்கூடுகளை கடந்த 2018ம் ஆண்டு தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர்.

அழியா காதல், காதல் காவியம் என்று ஏராளமான புராணக் காதல் கதைகள் உள்ளன. அதேபோல், காதலனுக்காக ராஜ்யத்தைவிட்டு வந்த காதலியின் காதல் என்று நம்மை ஆச்சர்யமூட்டும் காதல்கள் நிறையவே உள்ளன. அப்படியிருக்க, உக்ரைனில் கிடைத்த இந்த எலும்புக்கூடுகளுக்கு பின்னாலும் சில உண்மைக் கதைகள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.

மேற்கு உக்ரைன் நகரமான Ternpoil ல் தான் இந்த கல்லறை கண்டெடுக்கப்பட்டது. கல்லறைக்குள் அந்த பெண், அவளுடன் இருந்த ஆணை இறுக்கமாகக் கட்டி அணைத்திருக்கிறார். இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இத்தனைக் காலமாகியும் அந்த எலும்புக் கூடுகளில் எந்த சேதமும் இல்லை. மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், யாராவது இறந்தப் பின்னர் அவ்வாறு கட்டியணைக்க முடியுமா? அது முடியாத காரியம்தானே? இதுகுறித்து உடற்கூறு ஆய்வு செய்யும் நிபுணர் ஒருவர், அந்த ஆண் இறந்தவுடன் அவரது மனைவியோ அல்லது காதலியோ உயிருடனே குழியில் விழுந்து அவரைக் கட்டி அணைத்திருக்கிறார். அந்தக் குழி மூடிய பின்னர் சில நேரங்களில் அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருக்கும் என்று கூறுகிறார்.

மேலும் சில தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், ஒருவேளை அவ்வாறு தன் இணையுடன் சேர்ந்து கல்லறையில் புதைந்தால், அடுத்த ஜென்மத்தில் சேர்வார்கள் என்ற நம்பிக்கை அப்போது இருந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

கல்லறையிலிருந்த ஆணின் எலும்புக்கூடு, ஒரு உயிரற்றவர் படுத்திருப்பதுபோல் தான் இருக்கும். ஆனால் அந்த பெண் தனது வலது கையால் ஆணின் கழுத்தை சுற்றிப் பிடித்து அணைத்திருக்கிறார். மேலும் அவரது கால் சற்று வளைந்து அந்த ஆணின் முட்டி பகுதியில் இருக்கிறது. இருவருடைய நெற்றி பகுதிகள் இணைந்திருந்தன.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச்சிறந்த கட்டுமானமாகப் பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணை!
Bronze Age Couple

Bronze Age காதல் கதையாக விவரிக்கப்படும் இந்த கதை, Prehistoric Vysotskaya கலாச்சாரத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. மேலும் சில ஆராய்ச்சியாளர்கள், அந்த பெண் கல்லறையில் இறங்குவதற்கு முன், விஷம் அருந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ? தன்னுடைய கணவன்/காதலன் இல்லாத வாழ்க்கையை புறக்கணித்த அந்த பெண்ணின் காதல் ஒருவேளை அப்போதைய காவிய கதையாக இருந்திருக்குமோ? என்னவோ?

logo
Kalki Online
kalkionline.com