

ஜர்தோசி எம்பிராய்டரி என்பது உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் பிரபலமாக உள்ள ஒரு வகையான உலோக நூல் எம்ராய்டரி ஆகும். இது பெரும்பாலும் திருமண உடைகள், பிளவுஸ்கள், லெஹங்காக்களில் மணிகள், கற்கள் மற்றும் சீக்வின்களுடன் சேர்த்து மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்படுகிறது.
ஜர்தோசி எம்பிராய்டரி (Zardozi) என்பது தங்கம், வெள்ளி அல்லது செப்பு உலோக இழைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பழமையான, ஆடம்பரமான இந்திய கைவினை நுட்பமாகும். பெரும்பாலும் பட்டு, வெல்வெட் போன்ற தடிமனான துணிகளில், ஆரி ஊசி (hook) மற்றும் ஜர்தோசி ஊசிகளைப் பயன்படுத்தி புடவைகள், லெஹங்காக்கள் மற்றும் மணப்பெண் ஆடைகள் அலங்கரிக்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் இந்த எம்பிராய்டரி தூய வெள்ளிக் கம்பிகள் மற்றும் உண்மையான தங்க இலைகளைக் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் இன்றோ கைவினைஞர்கள் தங்க அல்லது வெள்ளிப்பூச்சு பூசப்பட்ட செப்புக் கம்பி மற்றும் பட்டு நூல் ஆகியவற்றின் கலவையை பயன்படுத்துகிறார்கள்.
Zar (தங்கம்) மற்றும் Dozi (எம்பிராய்டரி) என்ற பாரசீக வார்த்தைகளிலிருந்து உருவானது. தடிமனான உலோகக் கம்பிகள் (Salma), சுருள் கம்பிகள்(Dabka) மற்றும் ஜரி நூல்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. துணியை 'அட்டா' (Adda) என்ற மரச் சட்டத்தில் பொருத்தி, ஊசி மூலம் கைகளால் மிகவும் நுணுக்கமாக செய்யப்படுகிறது.
லெஹங்கா, புடவை, பிளவுஸ் மற்றும் பைகள் போன்றவற்றை அலங்கரிக்க, மெரூன், கரும்பச்சை, தங்க நிறங்களில் அதிகம் செய்யப்படுகிறது. இது ஆடைகளுக்கு அரச தோற்றத்தை(Royal look) தருகிறது. மேலும் முத்துக்கள், மணிகள் மற்றும் குந்தன் கற்களுடன் இணைந்து செய்யப்படுகிறது.
இதில் தாமரை மலர், மயில், பூக்கள் மற்றும் பாரம்பரிய 'பைஸ்லி' (Paisley) டிசைன்கள் மிகவும் பிரபலமானவை. முக்கியமாக பிளவுஸ் கழுத்து டிசைன்கள், சாரி பாடர் மற்றும் உடைகளின் முன்பக்க அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் நிறைய வகைகள் உள்ளன. ஜர்தோசி வித் ஆரி ஒர்க் (Aari work), சிம்பிள் ஜர்தோசி ஒர்க் மற்றும் ஆடம்பரமான திருமண டிசைன்கள் என பல வகைகள் உள்ளன. இந்த கைவினை வேலைப்பாடு உடைகளுக்கு அரச தோற்றத்தை (Royal Look) அளிப்பதாக கருதப்படுகிறது.
17 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் இருந்து இந்தியாவிற்கு ஜர்தோசி வேலைப்பாடு வந்தது. அக்காலத்தில் முகலாய பேரரசர் அக்பர் ஆட்சி செய்து வந்தார். முகலாயப் பேரரசின் ஆட்சியின் போது இக்கலை செழித்தது. இந்தப் பாணியில் செய்யப்பட்ட பொருட்கள் செல்வம், அதிகாரம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக இருந்தன.
ஆனால் பின்னர் அரச ஆதரவை இழந்ததும் வீழ்ச்சி அடையத்தொடங்கியது. 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து மீண்டும் இது பிரபலமடையத் தொடங்கியது. மலர்கள், இலைகள், பறவைகள், விலங்குகள் மற்றும் ஜியோமெட்ரிக் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
லக்னோ, ஆக்ரா, பரேலி, ஹைதராபாத் மற்றும் போபால் போன்ற நகரங்கள் ஜர்தோசிக்கு பெயர் பெற்றவை. இன்றும் திருமண விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான ஆடைகளில் இந்த பாரம்பரிய கலை மிகவும் முக்கிய இடம் வகிக்கிறது. 2013 ஆம் ஆண்டில் புவியியல் குறியீட்டு பதிவகம் (GIR) லக்னோ ஜர்தோசிக்கு புவியியல் குறியீடு (GI Tag) பதிவை வழங்கியது.