
வெள்ளை பளிங்கு கற்களால் கட்டமைக்கப்பட்ட சில நினைவுச் சின்னங்க நம் நாட்டில் இருக்கின்றன. அவை கண்களை கவரும் தோற்றத்துடனும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் விளங்குகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
தாஜ்மஹால் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக முகலாயப் பேரரசர் ஷாஜகான் யமுனை ஆற்றின் கரையில் கட்டி எழுப்பிய பிரம்மாண்டம்!
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பேரரசியாக விளங்கிய விக்டோரியா மகாராணி 1901 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா இருந்தது. இதையடுத்து அங்கு விக்டோரியா மகாராணியின் நினைவாக நினைவிடம் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது.
1906-1921 இடைப்பட்ட ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. வெள்ளை மக்ரானா பளிங்கு கற்கள் பயன்படுத்தப்பட்டன. இது இந்தோ-சராசெனிக் கட்டடப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மகாராணியின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஓவியங்களும், நினைவு சார்ந்த அம்சங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அதில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப் படங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
இது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ள வெள்ளை பளிங்கு கற்களால் கட்டமைக்கப்பட்ட நினைவிடம் ஆகும். ஜோத்பூர் மகாராஜாவாக விளங்கிய அசர்தார் சிங் தனது தந்தை ஜஸ்வந்த் சிங் நினைவாக இதனை கட்டினார். இதுவும் மக்ரானா பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டது.
இந்த கற்கள் மெல்லியதாகவும் மெருகூட்டப்பட்டதாகவும், இருப்பதால் சூரிய ஒளியில் பிரதிபலிக்கும் போது கூடுதல் பிரகாசமாக ஒளிரும். 1899 ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட இது பழமையான நினைவிடங்களுள் ஒன்றாகும். இதனை சூழ்ந்து அழகிய தோட்டமும், ஏரியும் அழகாக காணப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரபிக் கடலில் உள்ள சிறிய தீவில் சூபி ஞானி ஹாஜி அலி ஷா புகாரி நினைவாக கட்டப்பட்ட நினைவிடமாகும். இங்கு மசூதியும் அமைந்துள்ளது. அலையின் சீற்றம் குறைவாக இருக்கும் சமயம் தரைப் பாலம் வழியாகவும் செல்லலாம். இவரது நினைவிடம் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.
சார்மினார் பிரபலமான கம்பீரமான நினைவு சின்னமாக ஹைதராபாத்தில் கட்டப்பட்டுள்ளது.1591 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதல் அற்புதமான மசூதி, நான்கு மினாரட்டுகளைக் கொண்டுள்ளது. பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதற்கான அடையாளமாக இதனை கொண்டாடும் பொருட்டு, முகமது குலி குப் ஷா என்பவரால் கட்டப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலத்தில் ராய் சென் மாவட்டத்திலுள்ள சாஞ்சியில் உள்ள பெரிய ஸ்தூபி பேரரசர் அசோகரால் கட்டப்பட்டது. புத்தரின் தத்துவங்களை பாதுகாக்க, பரப்ப பல முயற்சிகளை மேற்கொண்டு அதன் ஒரு பகுதியான சாஞ்சி ஸ்தூபியை நிறுவினார். நிறைய ஸ்தூபிகள் கட்டமைக்கப்பட்டாலும், பேரரசர் அசோகரால் கட்டப்பட்ட முதல் ஸ்தூபி இது. 215 அடி உயரம் உள்ள குன்றின் மேல் அரைக்கோள வடிவில் பளிங்கினால் அமைக்கப்பட்டுள்ளது.