கலைகளின் அரசி யார் என்றால் அது நாடகமேயாகும். ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டே நாடகமாகும். ‘உலகமே நாடக மேடை’ எனக் கூறியவர் ஷேக்ஸ்பியர். உலக நிகழ்வுகளைக் காட்டும் கண்ணாடியாகிய நாடகத்தில் பாட்டும், உரையும், நடிப்பும் உண்டு.
இறைவனார் ஆடிய ஆதிக் கூத்திலிருந்து படிப்படியாக நாடகம் தோன்றியது என்பதை.
‘மோனத்து இருந்த முன்னோன் கூடத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே!
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே!
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே!
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே!
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே!
நாட்டியம் பிறந்தது நாடக வகையே!’
என்கிற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே நாடகக்கலை தோன்றிவிட்டதெனக் கூறப்படுகிறது.
நமது நாடு சுதந்திரமடைய, பல்வேறு நாடகங்கள் ஆற்றிய பணியை யாரும் மறுக்கவோ, மறக்கவோ இயலாது. தமிழ் நாடக மூவரென பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் ஸ்வாமிகள், பரிதிமாற்கலைஞர் ஆகியோர் கூறப்படுகின்றனர்.
குறிப்பாக, மக்களின் பார்வையில், தமிழ் நாடகம் உயர்ந்த மதிப்பிற்குரியதாகத் திகழ முன்னோடியாக செயல்பட்டவர் நாடகத் தந்தையென்று சொல்லப்படுகின்ற காலஞ்சென்ற பத்மபூஷன் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார். இவரின் உயர்ந்த நாடகக்கலைப் பணி இன்றும் அனைவராலும் போற்றப்படுகிறது. அன்றும் இன்றும் என்றும் அழியாதது நாடகக் கலையாகும்.
பெரிய திரை வந்த பின், சின்னத்திரை, கைபேசி போன்றவை வந்தபோது நாடகம் மெல்ல மெல்ல அழிந்து விடுமென என்ணியவர்கள், பேசியவர்கள் எல்லோருமே ஏமாந்துபோனார்கள். இதற்கு நாடகக் கலை மேலும் மேலும் வளர்ந்ததே காரணம்.
இத்தகைய பெருமைகள் பலவற்றைக்கொண்ட அருமையான தமிழ் நாடகக்கலையை, கலைகளின் அரசியை சிறப்பாக வளர்க்க ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி, செம்பூர் பெரும் ஆதரவு அளித்து வருகிறது. முக்கியமாக, மும்பை தமிழ் நாடகக் குழுக்களை, கலைஞர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
தமிழ் நாடகோத்ஸவத்தை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் நடத்தி வருவதோடு, சிறந்த நடிகர், நடிகை, கதை, வசனம் என பல்வகை விருதுகளையும் அளித்து வருகிறது. இந்த வருட நாடகோத்ஸவ விழாவில் ஆறு மும்பை தமிழ் நாடகக் குழுக்கள் கலந்துகொண்டன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களென்று இரு வாரங்கள் நடைபெற்றன. மறைமுகமாகச் செயல்பட்ட சிறந்த 3 ஜுரிகள் விருதுக்குரிய நாடகம் மற்றும் சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்ய விருதுகள் வழங்கப்பட்டன.
‘ஆயக் கலைகள் அறுபத்து நான்கில் கேட்டு ரசிப்பது இசைக்கலை! ருசித்து ரசிப்பது சமையற்கலை! வரைந்து பார்த்து பாராட்டுவது ஒவியக்கலை! ஆனால், கேட்டும், பார்த்தும், ரசித்தும், பாராட்டி மகிழ்வது நாடகக்கலையாகும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி, செம்பூரின் அரங்கம் ரசிகப் பெருமக்களால் நிரம்பி வழிந்தது.