கோவில் சுவர்களில் பேசும் காவியங்கள்: அழிவின் விளிம்பிலிருந்து மீண்ட கலை!

Kerala Mural Painting
Kerala Mural Painting
Published on

கேரளாவின் பாரம்பரிய சுவரோவியக்கலை (Kerala Mural Painting), 9 முதல் 12ஆம் நூற்றாண்டுகளில் உருவான நுணுக்கமான வேலைப்பாடுகள், பிரகாசமான நிறங்கள் மற்றும் புராணக் கதைகளை சித்தரிக்கும் ஒரு பழங்காலக் கலையாகும். இது பெரும்பாலும் கோவில்கள் மற்றும் அரண்மனைகளில், இயற்கையான தாதுக்கள் மற்றும் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணங்களைப் (மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு) பயன்படுத்தி, தெய்வங்களின் உருவங்களை அக்ரிலிக் அல்லது பாரம்பரிய முறையில் வரைவதாகும்.

கேரளத்தின் சுவரோவியங்கள் கலமெழுத்து மற்றும் பதாயணி போன்ற பண்டைய திராவிட சடங்குகளின் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் மூலம் உருவாகின. கேரளத்தின் சுவரோவியங்கள் அவற்றினுடைய நுணுக்கம், கூர்மை மற்றும் அழகில் ஈடு இணையற்றவை. நுணுக்கமான கோடுகள், துடிப்பான வண்ணங்கள் மற்றும் தெய்வங்களின் முகங்களில் வெளிப்படும் அமைதியான அல்லது உக்கிரமான பாவங்களுக்கு பெயர் பெற்றவை.

இந்து புராணங்கள், ராமாயணம், பாகவதம், சிவ வழிபாடு மற்றும் கணபதி, விஷ்ணு, மயில் போன்ற உருவங்கள் பெரும்பாலும் வரையப்படுகின்றன. பழங்காலத்தில் கிரானைட் மற்றும் செங்கற் சுவர்களில் இந்த சுவரோவியங்கள் வரையப்பட்டன. ஆனால் இப்பொழுது கேன்வாஸ் மற்றும் காகிதங்களிலும் இவை வரையப்படுகிறன.

கேரள சுவரோவியக் கலையின் தலைசிறந்த படைப்புகள்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை குகைக் கோவில் ஓவியங்கள் மிகவும் பழமையானவை. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளத்திற்கு அருகிலுள்ள கிருஷ்ணபுரம் அரண்மனையில் உள்ள 'கஜேந்திர மோட்சம்' மிகப்பெரிய சுவரோவிய பேனலாகும். இந்து இதிகாசங்கள், ராமாயணம் மற்றும் பாகவதம் ஆகியவற்றின் காட்சிகளை சித்தரிக்கும் விரிவான சுவரோவியங்கள் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மட்டஞ்சேரி அரண்மனையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
நமக்கு இது கொடுமையான வெயில்... அவர்களுக்கு இது குடும்பப் பெயர்! ஒரு சுவாரஸ்யமான தகவல்!
Kerala Mural Painting

எட்டுமானூரில் உள்ள சிவன் கோயிலின் சுவரோவியங்கள் திராவிட சுவரோவியக் கலையின் ஆரம்பகால வடிவங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. திருச்சூர், குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் போன்ற இடங்களில் புகழ்பெற்ற மியூரல் ஓவியங்கள் உள்ளன. இந்தக் கலைநயம் மிக்க ஓவியங்கள் இந்தியாவின் கலாச்சாரத்தையும், பக்தி உணர்வையும் பிரதிபலிக்கும் சிறந்த கலை வடிவமாகத் திகழ்கிறது.

பாரம்பரிய சுவரோவியக் கலைஞர்கள் கேரளாவில் பல்வேறு ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் இருந்தபோதிலும், பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் கலை வடிவம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அழிந்து போகும் அபாயத்தில் இருந்த இந்த சுவரோவியங்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கேரளாவில் மறுமலர்ச்சி பெற்றது. தற்போது இந்த ஓவியங்கள் சுவர்களில் மட்டுமல்லாது, துணி (fabric), காகிதம் மற்றும் பலவற்றிலும் நவீன அக்ரிலிக் நிறங்களைப் பயன்படுத்தி வரையப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com