

கலை மற்றும் கலாச்சாரத்தில் செழிப்பான மாநிலமான மகாராஷ்டிரா பலதரப்பட்ட நாட்டுப்புற மரபுகளைக் கொண்டுள்ளது. லாவணி என்ற சொல் 'லாவண்யா' அல்லது அழகு என்ற சொல்லிலிருந்து உருவானது. இது மகாராஷ்டிரா, குஜராத், தெற்கு மத்திய பிரதேசம் மற்றும் கொங்கன் பிராந்தியத்தில் பிரபலமான ஒரு நாட்டுப்புறப் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியாகும்.
இதில் ஒன்பது கஜம் நீளமுள்ள பிரகாசமான வண்ணப் புடவைகளை அணிந்து, கணுக்காலில் குங்குரூ எனப்படும் மணிகளையும் அணிந்து, ஒப்பனை மற்றும் முக்காடு போட்ட பெண் நடன கலைஞர்கள் நேரடி பார்வையாளர்கள் முன்னிலையில் ஒரு மேடையில் 'டோலக்' தாளங்களுக்கு ஏற்ப நடனம் ஆடுவார்கள்.
லாவணி பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது 18ஆம் நூற்றாண்டில் பேஷ்வா காலத்தில் தனிப்புகழ் பெற்று, பிரபலம் அடைந்த நடனமாகும். பாரம்பரியமாக, நிகழ்ச்சிகள் மன்னர்கள் அல்லது பிரபுக்கள் முன்னிலையிலும், போர்களுக்கு இடையிலான இடைவேளைகளில் ஓய்வெடுக்கும் களைத்த வீரர்களின் பொழுதுபோக்கிற்காகவும் நடத்தப்பட்டன.
மகாராஷ்டிரா மற்றும் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்த நடனம் மிகவும் பிரபலமாகும். டிரம் போன்ற தோல்கி (Dholki) வாத்தியத்தின் வேகமான தாளம் இந்த நடனத்தின் உயிர்நாடியாகும். ஹார்மோனியம், தம்புரா மற்றும் தாளம் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன.
வகைகள்:
லாவணியில் பல துணை வகைகள் உள்ளன. இதில் முக்கியமாக 2 துணை வகைகள் உள்ளது.
1) சிருங்கார லாவணி:
இது காதல், சிற்றின்பம் மற்றும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட மிகவும் பிரபலமான வகையாகும். இது பெரும்பாலும் மேடைகளில் ஆடப்படும் பொழுதுபோக்கு நடனமாகும்.
2) நிர்குணி லாவணி:
இது தத்துவம், பக்தி மற்றும் ஆன்மீகக் கருத்துக்களை மையமாகக் கொண்டது.
இதர துணை வகைகள் மற்றும் வடிவங்கள்:
3) படாச்சி லாவணி (Phadachi Lavani):
இது பெரிய பார்வையாளர்கள் முன்னிலையில் மேடையில் பொது நிகழ்ச்சியாக ஆடப்படும் வகையாகும்.
4) பைத்கிச்சி லாவணி (Baithakichi Lavani):
இது பாடகர் அமர்ந்த நிலையில் பாடும் ஒரு துணை வகையாகும்.
தற்போதைய நிலை மற்றும் சர்ச்சைகள்:
காதல், சிருங்காரம், சமூக அரசியல் விமர்சனம் மற்றும் பக்தி போன்ற தலைப்புகளில் பாடல்கள் அமையும்.
லாவணியில் பல துணை வகைகள் உள்ளன. அவற்றுள் மிகவும் பிரபலமானது சிருங்கார வகையாகும். இதில் பாடல்களும், நுட்பமான சைகைகளும் பெரும்பாலும் கிளர்ச்சி ஊட்டும் விதமாக இருக்கும். 1948 இல் பம்பாய் முதலமைச்சர் லாவணி நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்திருந்தார்.
ஆரம்பத்தில் சமூகசீர்திருத்த கருத்துக்களுடன் இருந்த லாவணி, தற்போது அதன் கவர்ச்சியான ஆடை மற்றும் உடல் அசைவுகள் காரணமாக, குறிப்பாக கௌதமி பாட்டீல் போன்ற இளம் கலைஞர்களின் நடனம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. பாரம்பரியத்தை கொச்சைப்படுத்துவதாக சிலர் கருதினாலும், இது மகாராஷ்டிர கலாச்சாரத்தின் மிக முக்கியமான அடையாளமாக இன்றும் நிலைத்திருக்கிறது.