இந்தியா முழுவதும் உள்ள அரண்மனைகள், போர் நினைவுச்சின்னங்கள், கோட்டைகள், கொத்தளங்கள் எல்லாம் இந்தியாவின் வரலாற்று பொக்கிஷங்களாக திகழ்கின்றன. கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்ட மஞ்சராபாத் கோட்டை ராணுவ கட்டடக்கலையின் மிகச்சிறந்த கட்டடங்களில் ஒன்றாகும். நாட்டில் உள்ள முக்கிய ராணுவக் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இந்தக் கோட்டையை நவீன கட்டடக்கலையின் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் பிரெஞ்சு கட்டடக்கலைஞரான செபாஸ்டின் லு ப்ரெஸ்ட்ரே என்பவர் வடிவமைத்துள்ளார். திப்பு சுல்தானுக்கும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் விளைவாக இந்தக் கோட்டை உருவாக்கப்பட்டது. போரின் விளைவாக கோட்டை அழிக்கத்தானேபடும். எப்படி உருவானது என்றுதானே யோசிக்கிறீர்கள்.
இந்தியாவில் வணிகம் செய்த ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆகாது. ஆங்கிலேயரை உள்நாட்டு மன்னர் யாராவது வீழ்த்த முடிவெடுத்தால் சாதாரணமாகவே பிரெஞ்சுக்காரர்கள் முன்வந்து அவர்களுக்கு உதவி செய்வர். போதாக்குறைக்கு அப்போது திப்புவுக்கு பிரெஞ்சுக்காரர்கள் நண்பர்களாக இருந்தனர்.
அதனால், திப்பு சுல்தானுக்கு உதவிய பிரெஞ்சுக்காரர்களுடனான அவரது நல்லுறவின் காரணியாக, எளிதில் உடைக்க முடியாத ஒரு தனித்துவமான கோட்டையை திப்புவுக்குக் கட்டிக் கொடுத்துள்ளனர். இக்கோட்டை 1792ல் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதிருந்து, இப்போது வரை இந்தக் கோட்டை உறுதியாகவே நிற்கிறது.
உறுதியில் மட்டுமல்ல, வடிவத்திலும் மஞ்சராபாத் கோட்டை தனித்துவமானதுதான். இது ஒரு நட்சத்திர வடிவ கோட்டையாகும். இந்தக் கோட்டையின் எட்டு கடினமான அம்பு போன்ற அமைப்புச் சுவர்களைக் கொண்டுள்ளது. கோட்டையின் நட்சத்திர வடிவ முனை பகுதிகள் காவல் காக்கும் வில்வித்தை வீரர்களுக்கு சாதகமானதாக இருந்துள்ளது. அதோடு, மஞ்சராபாத் கோட்டை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள கோட்டையுடன் நிலத்தடி சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இந்தக் கோட்டையின் அழகை பாதுகாக்கவும், கோட்டையை சுற்றிலும் மரங்கள் மற்றும் தோட்டங்களை நட்டு அழகான சுற்றுலா தலமாக மாற்றவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நேர்த்தியான கோட்டைக்கு இந்த கோடை விடுமுறை சீசனில் சென்று வரலாம் அல்லவா? நம் குழந்தைகளுக்கு திப்பு, ஹைதரின் வரலாறுகளை சொல்லிக்கொடுக்கவும் ஏதுவாக இருக்கும்.
கோட்டை பெரிதாக சேதம் ஆகாமல் இன்றும் அப்படியே இருக்கிறது. இங்கு போர் பயிற்சிக்கூடம், ஆயுதக்கிடங்கு, வெடிமருந்து சேமிப்பகம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல், கோட்டைக்கு நடுவே நான்கு புறம் இருந்து இறங்கும் ஒரு நீர் தேக்கமும் உள்ளது.