

டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் அடர்ந்த காட்டுக்குள் மர உச்சியில் வீடு கட்டி 'கொரோவாய்' (Korowai) பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கட்டும் 'கொரோவாய் மர வீடு 'சுத்தியல்கள், ஆணிகள், அளவிடுதல்கள் என்ற எந்த நவீன அமைப்புகளும் இல்லாமல் கட்டப்பட்ட அற்புதமான கலை படைப்பாகும். உலகையே வியப்பில் ஆழ்த்தி வரும் 'கொரோவாய் மர உச்சி வீடுகள்' குறித்து இப்பதிவில் காண்போம்.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பே இல்லாமல் கொரோவாய் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1970 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு உலகிற்கு தெரியவந்த இவர்களது தனித்துவமான வாழ்க்கை முறை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரவாய் மக்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களான மரம், மூங்கில் மற்றும் சாக்கோ பனை இலைகள் கொண்டு மர உச்சி வீடுகளை (Tree houses) அமைக்கின்றனர். 10 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரம் கொண்ட ராட்சத மரங்களின் உச்சியில் அமைக்கப்படும் இந்த மர வீடுகளை கட்டுவதற்கு பல வாரங்கள் ஆகும். அதேபோல் பலமான காற்று மற்றும் மழையை தாங்கும் திறன் கொண்டவையாக அமைக்கப்படுவதால் பல ஆண்டுகள் வரை மர வீடுகளின் ஆயுட்காலம் நீடிக்கிறது.
மரங்களின் மேல் அமைக்கப்படும் இந்த மர உச்சி வீடுகளை தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு கிராமமே இருப்பது போன்ற தோற்றமளிக்கும். மிக உயரமான மர உச்சி வீடுகள் இளைஞர்களின் தற்பெருமைக்காகவே கட்டப்படுகின்றன. இதை கட்டியவர்களை கௌரவிக்கும் விதமாக விருந்தும் கொடுக்கப்படுகிறது.
மலை உச்சி வீடுகள் காரணம்
* கொடிய விலங்குகளின் தாக்குதல், அண்டை பழங்குடியினரின் தாக்குதல்களிலிருந்த தங்களை பாதுகாத்துக்கொள்ளவே மர உச்சி வீடுகள் கட்டப்பட்டன.
* உயரமான இடத்தில் இருக்கும் மர உச்சி வீடுகளில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை எளிதாக கண்காணிக்கலாம்.
* உயரமான இடங்களில் கொசு, மற்றும் பாம்புகளின் தொல்லை குறைவு.
அமைதியான குணங்களைக் கொண்ட இந்த பழங்குடியினம் ஒரு தலைவரால் வழி நடத்தப்படுகிறது. ஜவ்வரிசியும், தண்ணீரும் முக்கிய உணவாக இருக்கும் இவர்களுக்கு நாய்ப் பற்களால் செய்யப்பட்ட கழுத்தணி, வேட்டை வில் வீட்டில் வளர்க்கப்பட்ட காட்டுப்பன்றி, முக்கிய உடமைகளாக இருக்கின்றன.
வெளிஉலகத் தொடர்பில்லாமல் வாழும் கொரோவாய் பழங்குடியின மக்களை காணவேண்டும் என்றால் ஒருவர் பல நாட்கள் காட்டில் அலைந்து மலை ஏற்றம் செய்ய வேண்டும். மனிதன் இயற்கையோடு இணைந்து மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கு, இந்த கொரோவாய் பழங்குடி இனம் தக்க சான்றாக உள்ளது.