

ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. மேலும் அதுவொரு சுவையான பழம் என்று எல்லோருக்குமே தெரியும். அதுவும் இந்த கோடை காலத்தில் ஆரஞ்சு பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த ஆரஞ்சு பழத்தின் தோலில் நம்முடைய தோட்டத்திற்கு தேவையான பல நன்மைகள் இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?
இந்த தோல்கள் தோட்டத்தின் மண்ணை வளப்படுத்த சிறந்த உரப் பொருளாகச் செயல்படுவதோடு மட்டுமில்லாமல் தோட்டத்தின மண்ணில் வரும் சில அசுவினிகள் போன்ற பொதுவான பூச்சிகளைத் தடுக்க தோட்டத்தில் பயன்படுத்தலாம். நீங்கள் தோல்களை தூக்கி எறிவதற்குப் பதிலாக, தோட்டத்தில் ஆரஞ்சு தோல்களைப் பயன்படுத்துவதன் மூலமாக பலவிதமான நன்மைகளை பெறலாம் என தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆரஞ்சு தோல்கள் உட்பட வேறு சில பழங்கள் மற்றும் காய்கறித் துண்டுகளை நம் வீட்டுத்தோட்டத்தின் மண்ணில் உரமாகச் சேர்க்கலாம். ஆரஞ்சு தோல்களிலிருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களால் மண்ணை வளப்படுத்துகின்றன. இது தாவர வேர் வளர்ச்சியை அதிகரிக்கிறது. நீங்கள் உங்களுடைய தோட்டத்தில் இரசாயனங்கள் சேருவதை தவிர்க்க விரும்பினால் இந்த ஆரஞ்சு தோல்களை கண்டிப்பாக பயன்படுத்துவதை வழக்கபடுத்திக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு தோல்களை உங்கள் தோட்டத்தில் உரமாக பயன்படுத்துவதற்கு முன்னால், அந்த தோல்களை நன்றாக உலர்த்தவும். பிறகு அந்த ஆரஞ்சு தோல்களை நன்றாக அரைத்த பிறகோ அல்லது மிக நேர்த்தியாக நறுக்கிய பிறகோ அவற்றை உரக் குவியலில் சேர்க்கவும்.
நீர்ப்பாசனம் செய்வதற்கு முன்னால் தோட்டத்திலுளள செடிகளின் அடிப்பகுதியைச் சுற்றி அவற்றை போட்டு நேரடியாக பரப்பவும். ஆரஞ்சு தோல்கள் சிதைவதற்கு சிறிது காலம் எடுக்கும், எனவே அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டியோ அல்லது பவுடராக அரைத்தோதான் போடவேண்டும்.
இந்த ஆரஞ்சு தோல்கள் சிறந்த உரமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் சிறந்த இயற்கை எறும்பு விரட்டிகளாகவும் திகழ்கின்றன. எறும்புகளுக்கு இதனுடைய வாசனை பிடிக்காது, ஆரஞ்சு பழங்களில் டி-லிமோனீன் உள்ளது, அது ஒரு இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.
உங்கள் தோட்டத்தில் வரும் பூச்சிகளை தடுக்க ஆரஞ்சு தோல்களைப் பயன்படுத்தி ஒரு தெளிப்பு கலவையை உருவாக்கலாம்.
புதிய ஆரஞ்சு தோலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு அதனுடன் சூடான நீர் மற்றும் சிறிது பாத்திரம் தேய்க்கும் சோப்பு பேஸ்ட்டையும் சேர்க்கவும். இந்த கலவையை நனறாக குலுக்கிய பிறகு, நீங்கள் உங்கள் தோட்டச் செடிகளின் கீழ் இலைகள் மற்றும் தண்டுகளில் அவ்வப்போது தெளிக்கவும். பாத்திரம் தேய்க்கும் சோப்பு கரைசலானது இலைகளில் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கிறது, மேலும் ஆரஞ்சு வாசனை பூச்சிகளின் வருகையை தடுக்கிறது. இதை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தெளிக்கவும்.
மேற்கூறிய முறையை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். இனி ஆரஞ்சு தோலை தூக்கி எறியாமல் அதை பயன்படுத்தவும்.