

பட்டாசித்ரா (Patta chitra) என்பது ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய, துணி அடிப்படையிலான ஓவியக்கலை வடிவமாகும். இது 'பட்டா'(துணி) மற்றும் 'சித்ரா'(ஓவியம்) என்ற சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து உருவானது. இந்து புராணங்கள் குறிப்பாக ஜகன்நாத் கடவுள் கதைகள் மற்றும் கிராமப்புற நாட்டுப்புற கதைகளை, இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி, துடிப்பான விவரங்களுடன் மிக அழகாக சித்தரிக்கிறது.
பாரம்பரிய துணிகளில் அச்சுகளை உருளச்செய்து உருவாக்கும் துணி அடிப்படையிலான ஓவியம் இது. இக்கலையானது கிழக்கிந்திய மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒடிசாவின் பண்டைய கலைப்படைப்புகளில் ஒன்றான இது முதலில் ஒரு பாடல் நிகழ்த்தும்பொழுது அதன் கருப்பொருளை விளக்க காட்சி சாதனமாக நிகழ்த்தப்படுகிறது. இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை இந்து தெய்வங்களின் கதைகளை சித்தரிக்கின்றன.
பட்டாசித்ரா ஓவியங்களின் மரபுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானவை. ஓவியங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து வண்ணங்களும் இயற்கையானவை. ஓவியரான சித்ரகரஸ் என்பவரால் முற்றிலும் பழைய பாரம்பரிய முறையில் ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரிசாவின் ஓவியங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அதாவது,
1. துணி ஓவியங்கள்(பட்டாசித்ரா)
2. சுவர்களில் உள்ள ஓவியங்கள்(பிட்டி சித்ரா)
3. பனை ஓலை செதுக்கல்கள்(தலா பத்ரா சித்ரா அல்லது போதி சித்ரா)
பட்டாசித்ரா ஓவியம் ஒடிசாவின் கிமு 5ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பழைய சுவரோவியங்களை ஒத்திருக்கிறது. குறிப்பாக பூரி, கோனார்க் மற்றும் புவனேஷ்வரை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக ரகுராஜ்பூர் கிராமத்தில் இவற்றின் சிறந்த படைப்புகள் காணப்படுகின்றன.
இவை பெரும்பாலும் புராணக் கதைகள், மதக் கதைகள் மற்றும் நாட்டுப்புற கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஜெகன்நாதர், ராதா-கிருஷ்ணன், கிருஷ்ண லீலை, பாலபத்ரா மற்றும் சுபத்ரா, விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், ராமாயணம், மகாபாரதம், ஜெயதேவரின் கீதகோவிந்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. பருத்தித் துணியை பல அடுக்குகளாக ஒட்டி, அதை உறுதியான கேன்வாஸாக மாற்றி ஓவியம் தீட்டப்படுகிறது. விரிவான கோடுகள், அடர்த்தியான வண்ணங்கள், புராண கதைகளை சொல்லும் பாணி என மிக அழகாக சித்தரிக்கப்படுகிறது.
இந்த ஓவியங்களில் வரையப்பட்டுள்ள ஆடை பாணியில் முகலாய தாக்கங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் வரையப்படுகின்றன. குறிப்பிடப்பட்ட பின்னணி, பூக்கள் மற்றும் பசுமையாக அலங்கரிக்கப் படுகின்றன. கூழாங்கற்கள், காய்கறிகள், சங்குகள், விளக்குக் கரி போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட இயற்கையான சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கலை வடிவம் அதன் கதையாடல் மற்றும் அழகியல் காரணமாக மிகவும் பிரபலமானது. மேலும் பெங்கால் மற்றும் ஓடிஸா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் புவியியல் குறி (GI tag) கிடைத்துள்ளது.