

புங்கி (Pungi) அல்லது பீன் என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரியமான காற்று இசைக்கருவியாகும். இது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பழமையான, நாட்டுப்புற, சமய இசையில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது.
தொடக்கத்தில் பாம்பு பிடிப்பவர்களால் பயன்படுத்தப் பட்டதால் "பாம்பாட்டி குழல்" என்றும் அழைக்கப் படுகிறது. இக்கருவி வங்காளம் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. இது காய்ந்த சுரைக்காய் குடுவை மற்றும் மூங்கில் குழாய்களால் செய்யப்படுகிறது. இது தொடர்ச்சியான ஒலியை எழுப்ப, வட்ட சுவாச முறையில் வாசிக்கப்படுகிறது.
இந்தியாவின் கிராமிய இசையிலும், பாம்பாட்டிகளாலும் பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பீன் (Been), முரளி, தும்பி, நாகசர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இது பழங்குடியின மக்களால் வழிபாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் இந்த இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது.
மன்னர் அவுரங்கசீப் காலத்தில் இதன் கடுமையான மற்றும் உரத்த ஒலியின் காரணமாக தனது அரசவையில் இதனை இசைக்க தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.
சுரைக்குடுக்கையின் கழுத்துப் பகுதி நீக்கப்பட்டு அதில் மூங்கில் குழல்கள் பொருத்தப்பட்டு, இசையை ஏற்படுத்தக் கூடியவாறு 7 துளைகள் வரை குழலில் இடப்படும். இடைவெளிகள் தேன்மெழுகு மூலம் காற்றிருக்கமாக மூடப்படும். இரண்டு அல்லது மூன்று குழல்களைக் கொண்ட மகுடிகளும் உள்ளன. மகுடியின் வடிவமானது நடுப்பகுதி உப்பலாகவும், வாய்ப்பகுதியும், அடிப்பகுதியும் புல்லாங்குழல் போலவும் இருக்கும்.
ஒரு காய்ந்த சுரைக்காய் நீர்த்தேக்கமாகவும், அதனுடன் இணைக்கப்பட்ட இரண்டு மூங்கில் குழாய்கள் நாணல் (reed) மூலமாகவும் ஒலியை எழுப்புகின்றன. இதன் மேல் பகுதியில் காற்று ஊதுவதற்கான ஒரு துளையும், கீழ்ப் பகுதியில் இரண்டு மூங்கில் அல்லது நாணல் குழாய்களும் இணைக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு குழாய் மெல்லிசை எழுப்பவும், மற்றொரு குழாய் தாளத்தை நிலைநிறுத்தும் ஒலியை எழுப்பவும் பயன்படுகிறது. கலைஞர்கள் 'வட்ட சுவாசம்' (circular breathing) என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இசையை எழுப்புவார்கள்.
ஆரம்பத்தில் இது இந்திய நாட்டுப்புற இசையின் ஒரு அங்கமாக இருந்தது. பின்னர் மதச் சடங்குகளிலும் பாம்பு பிடிக்கும் கலைகளிலும் முக்கியத்துவம் பெற்றது. புங்கி பொதுவாக தனியாகவே வாசிக்கப்படுகிறது. தார் பாலைவனத்தில் ஜோகிகளால் புங்கி இசைக்கப்படுகிறது. தெராய் மற்றும் நேபாளத்தில், பாம்புகளை நடனமாட தூண்டுவதற்காக வாசிக்கப்படுகிறது.
பாம்பாட்டி பொதுமக்களை மகிழ்விக்க இந்தக் கருவியை அடிக்கடி பயன்படுத்தினார்கள். ஆனால் 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 1991 ஆம் ஆண்டில் இந்த வழக்கம் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
புங்கியில் பல வகைகள் உள்ளன. ஒற்றை நாணல் புங்கி, இரட்டை நாணல் புங்கி, மும்குழல் புங்கி என அதன் தனித்துவமான வடிவம், ரீங்கார ஒலி, உயர்ந்த சுருதி மற்றும் வாசிப்பு பாணிகளைக் கொண்டு வகைப்படுத்தப் படுகிறது. இது இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. ஆன்மீகம், பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் சின்னமாக விளங்குகிறது.
நவீனமயமாக்கல் இருந்த பொழுதிலும், புங்கி இந்தியாவின் வளமான இசைப் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய சின்னமாக தொடர்ந்து விளங்குகிறது.
மகுடி இசை கேட்பது மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் என்று சுவிஸ் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். ஆனால் இந்த காற்று இசைக்கருவி இன்று மெள்ள மெள்ள அழிந்து வரும் நிலையில் உள்ளது.