

சில நேரங்களில் மிகவும் எதிர்பாராத ஆச்சரியங்கள் மிக எளிமையான மற்றும் கற்பனை செய்ய முடியாத வடிவங்களில், நம் கண்களுக்கு முன்னாலேயே ஒளிந்து கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு விஷயம் தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது, ருமேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, பல வருடங்களாக ஒரு அபூர்வமான அம்பர் கல்லை தனது வீட்டின் கதவிற்கு முட்டுக்கட்டையாக பயன்படுத்தி வந்துள்ளார். அவரின் கதவிற்கு முட்டுக்கட்டையாக இருந்த அதிசய கல் மதிப்பு மட்டும் ரூ.9.6 கோடி என்றோ, 70 மில்லியன் ஆண்டு பொக்கிஷம் என்று கூட அவருக்கு தெரியாமல் இருந்து இருக்கிறார்.
70 மில்லியன் ஆண்டு கால பொக்கிஷத்தை பெண்மணி ஒருவர் தன் வீட்டு கதவிற்கு முட்டுக்கட்டையாக பயன்படுத்தி உள்ளார் என்ற விசயம் மிக ஆச்சரியமானதும் கூட.
ருமேனியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஓடையிலிருந்து அவர் எடுத்த இந்த 3.5 கிலோகிராம் எடையுள்ள கல் இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சேதமடையாத அம்பர் கற்களில் ஒன்று எனத் தெரியவந்துள்ளது. எல் பய்ஸ் (El País) செய்தியின்படி, இந்த அபூர்வ கல்லின் மதிப்பு சுமார் 1.1 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.6 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பல கோடி மதிப்புள்ள அம்பர் கல்
இந்த அம்பர் கல் 'ருமானைட்' (Rumanite) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அடர் சிவப்பு நிறத்திற்குப் பெயர் பெற்ற ஒரு வகை படிமமாகும்.
ருமேனியாவின் சில பகுதிகளில், குறிப்பாக 1920-களிலிருந்து சுரங்கத் தொழில் நடைபெறும். கோல்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அம்பர் கிடைப்பது சாதாரணமானது என்றாலும், இந்த குறிப்பிட்ட கல் மிகவும் அபூர்வமானது.
அம்பர் கல்லின் சிறப்புகள்:
அம்பர் என்பது மரங்களிலிருந்து வெளியேறும் பிசின் (resin) பல மில்லியன் ஆண்டுகள் கடந்து கற்களாக மாறியதே ஆகும். இதன் உள்ளே பழங்கால பூச்சிகள், இலைகள் அல்லது சிறிய உயிரினங்கள் கூட சிக்கியிருக்கும் வாய்ப்பு உண்டு. இந்த ருமானைட் வகை அம்பர், அதன் அடர் சிவப்பு நிறம் மற்றும் தெளிவான தன்மைக்காக மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இது சாதாரண அலங்காரக் கல் மட்டுமல்ல; புவியியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளுக்கு முக்கியமான ஆதாரமாகவும் பயன்படுகிறது.
மேலும், இத்தகைய அம்பர் கற்கள் பூமியின் பழமையான காலநிலை, தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றிய தகவல்களை வழங்கக்கூடியவை. அதனால், இவை விஞ்ஞானிகளுக்கு ஒரு “நேரக்காப்பகம்” (time capsule) போல கருதப்படுகின்றன.
1991-ஆம் ஆண்டில் அந்தப் பெண்மணி காலமான பிறகு, அவரது உறவினர் ஒருவர், சாதாரணமாகக் கதவு முட்டுக்கட்டையாக இருந்த இந்தக் கல் ஏதோ ஒரு சிறப்பு வாய்ந்த பொருளாக இருக்கலாம் என்று உணர்ந்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் கல் புஸாவ் (Buzau) மாகாண அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், போலந்தின் கிராகோவ் வரலாற்று அருங்காட்சியக நிபுணர்களால் இது ஆய்வு செய்யப்பட்டது. போலந்து நிபுணர்கள் இது உண்மையான அம்பர் என்பதை உறுதிப்படுத்தியதோடு, இதன் வயது 38.5 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர். மேலும், இந்த அம்பர் பாளம் உலகிலேயே மிகப்பெரிய துண்டுகளில் ஒன்று மற்றும் அதன் வகையிலேயே மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டார்.
நம் வாழ்க்கையில் சாதாரணமாக தோன்றும் பல விஷயங்களுக்குள் கூட அபூர்வமான மதிப்பும் வரலாறும் மறைந்து கிடக்கலாம் என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது. அறிவும் கவனமும் இல்லாமல் இருந்தால், நம்முடைய கைகளில் இருக்கும் பொக்கிஷத்தையே நாம் அறியாமல் தவறவிடக்கூடும். எனவே, எளிய பொருள்களையும் அலட்சியப்படுத்தாமல், அவற்றின் பின்னால் இருக்கும் அர்த்தத்தை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு நமக்கு அவசியம்.