

சத்யஜித் ரே 02 மே 1921 ல் மேற்கு வங்காளத்தில் பிறந்தவர். இவர் அடிப்படையில் திரைப்பட இயக்குநராக அறியப்பட்டாலும் கதாசிரியர், திரைப்படத்தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மையுடன் விளங்கினார்.
சத்யஜித்ரே இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இயக்கத்திற்காகப் புகழ் பெற்றிருந்தார். இவருடைய திரைப்படங்கள் “ஆர்ட் பிலிம்” என்று வகைப் படுத்தப்படும் கலைநயமிக்க திரைப்படங்களாகும். இவருடைய இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டில் வெளியான பதேர் பாஞ்சாலி சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற ஒரு திரைப்படம். சத்யஜித்ரேவிற்கு புகழைத் தேடித்தந்த ஒரு படமும் கூட. இதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டில் வெளியான “அபராஜிதோ” என்ற திரைப்படமும் இவருக்கு புகழைத் தேடித்தந்தது. சத்யஜித்ரே தன் வாழ்நாளில் 29 திரைப்படங்களையும் 02 குறும் படங்களையும் 05 ஆவணப்படங்களையும் இயக்கி சாதனை படைத்தவர்.
சத்யஜித்ரே கலை திரைப்படங்கள் மட்டுமின்றி சிறார்களுக்காக வங்காள மொழியில் துப்பறியும் கதைகளையும் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒன்று. இவர் சிறார்களுக்காக ஃபெலுடா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி அதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.
மேலும் இவர் உருவாக்கிய புரெபசர் ஷோங்கு என்ற கதாபாத்திரமும் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. வங்கத்தில் மிகவும் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம் ஃபெலுடா ஆகும். சிக்கலான குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை சாதுர்யமாகக் கண்டுபிடிக்கும் ஃபெலுடாவின் திறமை அனைவர் மனதையும் கொள்ளை கொண்டு கொண்டாடப்படும் ஒரு சிறந்த படைப்பாகும்.
சத்யஜித்ரேவின் தாத்தா நடத்திய “சந்தேஷ்” என்ற சிறார் இதழில் “ஃபெலுடா கதைகள்” 1965 ஆம் ஆண்டு முதல் பிரசுரமாகின. இவ்வாறாக மொத்தம் முப்பத்திஐந்து கதைகள் வெளியாகின. இதில் 34 கதைகள் சத்யஜித்ரே வாழ்ந்த காலத்திலும் பின்னர் ஒரு கதையானது அவர் காலமான பின்னர் வெளியானது. சில ஃபெலுடா கதைகள் சித்திரக்கதைப் புத்தகங்களாக பின்னாட்களில் வெளியாகின. இதில் இரண்டு கதைகள் திரைப் படங்களாகவும் உருவாக்கப்பட்டன.
வங்காளத்தின் துப்பறியும் நிபுணரான ஃபெலுடா தனது உதவியாளர் தப்சே மற்றும் லால்மோகன் கங்குலி ஆகியோருடன் இணைந்து துப்பறிந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதாக கதைகள் அமைந்திருந்தன.
ஃபெலுடா துப்பறியும் கதைகள் மட்டுமின்றி “புராபசர் ஷோங்கு” (Professor Shonku) என்ற தலைப்பில் சத்யஜித்ரே அறிவியல் புனைக்கதைகளை எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இக்கதைகளின் கதாநாயகனான புரொபசர் ஷோங்கு அபார அறிவாற்றலுடைய ஒரு விஞ்ஞானி. உலகத்தில் நிலவும் விசித்திரமான மர்மங்களை அறிவியல் மற்றும் தனது அறிவாற்றலின் மூலம் தீர்ப்பதே இத்தொடரின் மையக்கருத்தாகும்.
ஷோங்கு என்ற விஞ்ஞானியின் முழுப்பெயர் திரிலோகேஷ்வர் ஷோங்கு. இவருடைய வேலைக்காரன் பிரஹ்லாத் மற்றும் செல்லப்பிராணி நியூட்டன் என்ற பூனை. வேலைக்காரனும் பூனையும் இவருடைய சாகசங்களின் போது உடனிருப்பார்கள். வில்லியம் க்ரோல், ஜேரமி சாண்டரஸ், ஜான் சம்மவில் முதலானோர் நண்பர்கள். இப்புத்தகத்திலுள்ள கதைகள் நாட்குறிப்பு பாணியில் எழுதப்பட்டுள்ளன. ஷோங்குதான் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சாகசங்களை தனது டைரியில் எழுதுவது போல இக்கதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் கதையானது 1961 ஆம் ஆண்டில் சந்தேஷ் சிறார் இதழில் “வியோம்ஜாத்ரிர் டைரி“ என்று பெயரில் வெளியானது. அறிவியல், துப்பறிதல், மர்மம் என மூன்றையும் இணைத்து உருவாக்கப்பட்ட இக்கதைகள் சிறார்களை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
இந்திய மொழியில் எழுதப்பட்ட அறிவியல் புனைகதைகளின் தொடக்க கால எடுத்துக்காட்டுக்களில் இப்புத்தகம் ஒன்றாகும். இப்புத்தகம் இந்திய அரசின் “இளைஞர்களுக்கான சிறந்த புத்தகம்” என்ற பரிசை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.