சிறிய கம்பியால் செய்யப்பட்ட ‘ஹூக்கு’ எனப்படும் சேப்டி பின் என்ற பொருள் மிகவும் பயனுள்ளது. புடைவையை அணிந்து கொள்ளும்போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசர காலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை பலவிதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம். அத்தகைய சேப்டி பின்னின் வரலாறு பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயருக்குப் பின்னால் உள்ள கதை என்ன? அது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
ஹூக்கு எனப்படும் சேப்டி பின் (Safety Pin) 1849ம் ஆண்டில் வால்டர் ஹன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. வால்டர் ஹன்ட் இதுபோன்ற சிறிய சிறிய பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்ததற்காக அறியப்பட்டவர். அவருக்கு அதிக அளவில் கடன் பிரச்னை இருந்தது. கடன் தொல்லையினால் அவதிப்பட்டு வந்த அவர், கடனை அடைக்க அவர் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளில் சேப்டி பின்னும் ஒன்று.
சேப்டி பின் கண்டிபிடிக்கப்பட்ட பிறகு, இந்தப் பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை வால்டர் உணர்ந்தார். அதன் பிறகு அதற்குக் காப்புரிமைப் பெற்று விற்றார். அந்த நேரத்தில், இந்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு $ 400 கிடைத்தது. இது மட்டுமின்றி, பேனா, கத்தியை கூர்மைப்படுத்தும் கருவிகள், ஸ்பின்னர்கள் போன்றவற்றையும் வால்டர் ஹன்ட் கண்டுபிடித்தார். அவர் ஒரு தையல் இயந்திரம் கூட கண்டுபிடித்தார்.
ஒரு சமயம் வால்டரின் மனைவி ஏதோ வேலையாக வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது உடையில் இருந்த பட்டன் உடைந்தது. அந்நிலையில், வால்டர் ஒரு பொத்தானாகச் செயல்படும் வகையில் சிறு கம்பியைக் கொண்டு தயாரித்து அவருக்கு உதவினார். இதுதான் சேப்டி பின் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான கதை.
அப்போது அதற்கு டிரெஸ் பின் என்று பெயர் சூட்டப்பட்டது. மாறிவரும் காலத்திலும் அதன் பயன் குறையவில்லை. இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அதன் டிசைனில் குளறுபடி இல்லாமல், பெண்களின் புடைவையின் நிறத்திற்கேற்ப பின்னை கலர்ஃபுல்லாக செய்தன.
ஹன்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பான சேப்டி பின் மூலம் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, கம்பியால் விரல்களில் ஏற்பட்ட காயமும் தவிர்க்கப்படுவதால், இதற்கு சேஃப்டி பின் என்று பெயர் வந்தது. பெண்கள் புடைவை முதல் சல்வார் கமீஸ் வரை அனைத்திற்கும் சேப்டி பின்னை பயன்படுத்துகின்றனர். காயம் ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவே இது சேப்டி பின் என்று அழைக்கப்படுகிறது.