தண்ணீருக்கு அடியில் இருந்து வெளிவந்த 'மரண ரயில்வே' ரகசியம்: தாய்லாந்தில் தமிழர்களின் ரத்த வரலாறு!

Death Railway Tamil history - மரண ரயில்வே
Death Railway Tamil history - மரண ரயில்வேAI Image
Updated on

யாம் - பர்மா ரயில் பாதை என்றும் மரண ரயில் பாதை என்றும் சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பெற்றிருப்பதுதான் தாய்லாந்தின் சயாம்- பர்மா (மியான்மர்) இடையேயான ரயில் பாதை. 2-வது உலகப் போர் காலத்தில் 1942-ல் தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியர்கள் கை ஓங்கி இருந்த காலம்.

பர்மா மீதான படையெடுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, தாய்லாந்தில் உள்ள நோங் பிளா டக் (Nong Pla Duk) முதல் மியான்மரில் (பர்மா) உள்ள தான்பியுசயாத் (Thanbyuzayat) வரை அப்போது சாயா (தாய்லாந்து) எனும் நாட்டையும் அன்றைய பர்மா எனும் இன்றைய மியான்மர் நாட்டையும் இணைக்க 415 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை ஜப்பான் தொடங்கியது. இதுதான் சயாம்- பர்மா ரயில் பாதை திட்டம் என்றழைக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் போர்க் கைதிகள் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் (குறிப்பாக மலேசியா, மியான்மர், இந்தோனேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள்) இந்த ரயில் பாதையை அமைக்க ஜப்பானியர்களால் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

காடுகள், மலைகள் மற்றும் பாறைகளை உடைத்து மிகவும் ஆபத்தான நிலப்பரப்பில் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது. போதிய உணவு, மருந்து இன்றி அடிமைகளாக வேலை வாங்கப்பட்டதில், சுமார் 1,00,000-க்கும் அதிகமான தொழிலாளர்களும் 12,000-க்கும் அதிகமான போர்க் கைதிகளும் நோய், பட்டினி மற்றும் கொடூரமான சித்ரவதைகளால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள்:
புதிய பொலிவுடன் வரும் நாட்டின் முதல் காந்தி மியூசியம்!
Death Railway Tamil history - மரண ரயில்வே

75,000-க்கும் அதிகமான தமிழ்நாடு உட்பட ஆசியத் தொழிலாளர்களும் கட்டுமானப் பணியின்போதே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனாலேயே இது 'மரண ரயில்வே' (Death Railway) என்று அழைக்கப்படுகிறது.

மரண ரயில்வே திட்டத்திற்காக ஜப்பானியர்களால் சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் தொழிலாளர்கள்:

இந்த ரயில் பாதைக்கான பணியில் பல லட்சக்கணக்கான தென்கிழக்கு ஆசியாவில் வசித்த தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். போர்க் கைதிகளாக இருந்த தமிழர்களும் சயாம்- பர்மா ரயில் பாதை பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது ஜப்பானியர்களால் தமிழ் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் சொல்லி மாளாதவை. அத்தனை கொடூரங்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன.

பசியோடும் பட்டினியோடும் திறந்த வெளிச் சறைச்சாலையில் சிக்கியவர்களாக தமிழர்கள் பெரும் பெரும் பாறைகளை இயந்திரங்கள் இல்லாமலேயே தகர்த்து காட்டாறுகளில் பாலங்கள் கட்டி முடித்தனர்.

ஆனால் இந்த கட்டுமானப் பணிகளில் ஜப்பானியர்களின் ஈவிரக்கமற்ற கொடூரத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு போயினர். அது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றளவும் ஆறாத பெரு ரணமாய் இருக்கிறது. இத்தமிழர்களின் நினைவாகத்தான் தற்போது தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் தாய்லாந்தில் நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.

போருக்குப் பிறகு ரயில் பாதையின் சில பகுதிகள் சேதமடைந்தாலும், தாய்லாந்து பகுதியில் உள்ள நோங் பிளா டக் சந்திப்பில் இருந்து காஞ்சனபுரியில் உள்ள நாம் டோக் (Nam Tok) வரையிலான 130 கி.மீ பாதை இன்றும் செயல்பாட்டில் உள்ளது.

Death Railway Tamil history - மரண ரயில்வே
Death Railway Tamil history - மரண ரயில்வேAI Image

தாய்லாந்தின் பேங்காக் (Thonburi) நகரில் இருந்து தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. புகழ்பெற்ற குவாய் நதிப் பாலம் (River Kwai Bridge) மற்றும் 'ஹெல்ஃபயர் பாஸ்' (Hellfire Pass) போன்ற பகுதிகளைக் கடந்து செல்லும் இந்த ரயில் பயணம், இயற்கை அழகையும் உலகப் போர் வரலாற்றையும் ஒருசேரக் காண உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இப்பகுதியில் ரயில்வே தொடர்பான அருங்காட்சியகங்கள் (Thailand-Burma Railway Centre, JEATH War Museum) மற்றும் போர்க் கைதிகளின் கல்லறைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில் பாதை, 1957-ஆம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற 'தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்' திரைப்படத்திலும், 2013-ஆம் ஆண்டு வெளியான 'தி ரயில்வே மேன்' திரைப்படத்திலும் இடம்பெற்றது. மேலும், விருது பெற்ற 'தி நேரோ ரோட் டு தி டீப் நார்த்' என்ற நாவலின் மையக்கருவாகவும் இது இருந்தது. அந்த நாவல், ஆஸ்திரேலிய நடிகர் ஜேக்கப் எல்ரோடி நடிப்பில் 2025-ஆம் ஆண்டில் ஒரு குறுந்தொடராகவும் வெளிவந்தது.

இந்த மரண ரயில் பாதையின் சில பகுதிகள், குறிப்பாக கஞ்சனபுரி (Kanchanaburi) நகரில் உள்ள புகழ்பெற்ற 'க்வாய் நதிப் பாலம்' (River Kwai Bridge) மற்றும் 'தாம்கிரா சே' (Thamkra Sae) ரயில் நிலையம் ஆகியவை இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
மலைகளின் ராணி சிம்லா: வெள்ளிப் பனிமலைகளுக்கு இடையே ஒரு கனவுப் பயணம்!
Death Railway Tamil history - மரண ரயில்வே

தாய்லாந்து மற்றும் மியான்மரை இணைக்கும் 415 கிலோ மீட்டர் நீளமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மரண ரயில் பாதையின் முக்கிய மையமாக விளங்கிய இடம் 'நிதே ரயில் நிலையம்' (Nithe Station). பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கட்டப்பட்ட அணை காரணமாக இந்த ஒட்டுமொத்தப் பகுதியும் தண்ணீருக்கு அடியில் மூழ்கடிக்கப்பட்டது.

வஜிரலோங்கோர்ன் அணை வற்றியதால் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த மரண ரயில்வே எச்சங்கள்:

தற்போது தாய்லாந்தின் மின்சார உற்பத்தி ஆணையம் சமீபத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக வஜிரலோங்கோர்ன் அணையின் நீர்த்தேக்கத்தை வற்றச் செய்தபோது, பல ஆண்டுகளாக ஆற்றினுள் புதைந்து கிடந்த அந்த வரலாற்று எச்சங்கள் மீண்டும் வெளியே தெரிந்துள்ளன.

ஆகஸ்ட் மாதத்திற்குள் அணையின் பராமரிப்புப் பணிகள் முடிந்துவிடும் என்பதாலும், தென்கிழக்கு ஆசியாவில் பருவமழை தொடங்கப் போவதாலும், இந்த இடம் மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். அதற்குள் இந்த வரலாற்று இடத்தை முழுமையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்த உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தாய்லாந்தின் சாங்க்லாபுரி பகுதிக்கு விரைந்து வந்து தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், இரண்டாம் உலகப் போரின் போது தென்கிழக்கு ஆசியாவில் நம் தமிழ் முன்னோர்கள் எதிர்கொண்ட சொல்லொணாத் துயரங்களையும், அவர்களின் உழைப்பில் உருவான வரலாற்றுச் சின்னங்கள் தற்போதைய தாய்லாந்து அகழ்வாராய்ச்சியில் எவ்வாறு மீட்டெடுக்கப்படுகின்றன என்ற அதிதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com