👑பேரரசர் ராஜராஜ சோழன்: விளக்குக்கு நெய்யும், வாழ்வுக்கு வழியும்👑

Royal Vision meets Divine Architecture
the Chola Empire and the Big Temple
Published on

பேரரசர் ராஜராஜ சோழனின் அரண்மனையில், அரசரின் முகத்தில் கவலை படர்ந்ததைக் கண்ட அமைச்சர், அதற்கான காரணத்தை வினவினார்.

அதற்கு மன்னர், "சோழப் பேரரசின் அடையாளம் இந்த தஞ்சைப் பெரிய கோயில். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்க வேண்டும். அரண்மனைகள் தனிச்சொத்து. ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படும் ஆயின், மக்களுக்கு இதில் பங்கிருக்க வேண்டும். சோழ மண்டலத்தில் கடைக்கோடியில், சிற்றூரில் வாழும் மக்களுக்கும் இதில் பங்கு இருக்க வேண்டும். எல்லா மக்களும் பங்குதாரர்களாக வேண்டும்" என்றார்.

"திட்டம் என்ன?" என்று அமைச்சர் கேட்டார்.

"அதோ, அந்தத் திருவிளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடனால் எரிகின்றன. தினந்தோறும் கோயில்களில் விளக்கு எரிய வேண்டும். அதற்காக, ஆடுகளையும் மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப் பதிலாக, அவர்கள் திருவிளக்கு ஏற்ற நெய் தந்தால் போதுமானது. மொத்த வருமானமும் ஏழைகளுக்கே. அவர்கள் அடுப்பும் எரியும், ஆலயத்தின் திரியும் எரியும். இதுதான் என் திட்டம்" என்றார் மன்னர்.

அரசனின் ஆணைப்படி ஏழைகளுக்கு ஆடு மாடுகள் வழங்கப்பட்டன.

சில நாட்களுக்குப் பிறகு, மன்னர் கோயிலைச் சுற்றி வரும்போது, ஒரு சந்நிதியில் மட்டும் விளக்கு எரியவில்லை என்பதைக் கண்டார். எவத்தூர் மாராயன் என்பவனுக்கு நாற்பத்திரண்டு பசுமாடுகள் தரப்பட்டிருந்தன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரிய வேண்டிய விளக்கு, ஏழு நாட்களாக எரியவில்லை என்பது தெரிய வந்தது.

அவன் குடிசையின் முன் மன்னரின் தேர் வந்து நின்றது. "பேரரசன் வந்திருக்கிறேன். மாராயா, வெளியே வா!" என்று குரல் கொடுத்தார்.

உள்ளே ஒரு பெண்மணியின் விசும்பல் சத்தமும், குழந்தையின் அழுகுரலும் கேட்டது. கசங்கிய சேலையில் வெளியே வந்த பெண், இடுப்பில் மெலிந்த ஒரு குழந்தையை வைத்திருந்தாள். "நீ யார்?" என்று அரசர் கேட்க, அவள் மாராயனின் மனைவி என்றாள்.

கணவனைப் பற்றிக் கேட்க, "அரசர் கொடுத்த மாடுகளோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டான்" என்றாள்.

உடனே அரசர், "கணவன் இறந்து ஒரு மாதம் ஆகிறது என்கிறாய். ஏழு நாட்கள் முன்வரை விளக்கு எரிந்திருக்கிறதே. எப்படி இருபத்திமூன்று நாட்கள் இதைச் செய்தாய்?" எனக் கேட்டார்.

இதையும் படியுங்கள்:
கேரள நாட்டு கலைகள்: களரிப்பயட்டு முதல் கதகளி வரை!
Royal Vision meets Divine Architecture

கண்களில் நீர் வழிய அவள், "புருஷன் இறந்தாலும், ராஜாவுக்கும் கொடுத்த வாக்கை மீறக் கூடாது என்று, என் தாய்ப்பாலை விற்று, மூன்று ஆழாக்கு நெய் வாங்கி தீபம் எரிய வைத்தேன். ஒரு வாரமாய் பால் வற்றிப் போனது. அதனால் திருவிளக்கு ஏற்ற முடியவில்லை" என அழுதாள்.

நடந்ததை அறிந்த மன்னன் துடிதுடித்துப் போனார். தேரிலிருந்து இறங்கி, அவளிடம் சென்று, "உன் போன்றவர்களால் தான் சோழப் பேரரசு பெருமை அடைகிறது. இன்று முதல் இந்தத் தாயை திருமஞ்சனம் பணிப்பெண்ணாக நியமிக்கிறேன். அரண்மனைச் சிற்பியை அழைத்து, 'தாய்ப்பாலால் விளக்கெரித்த இவள் பெயர்' என்று கல்வெட்டில் பொறித்து விடுங்கள்!" என்று ஆணையிட்டார்.

இதையும் படியுங்கள்:
80 ஆயிரம் கோடி அளவு சொத்துக்களுடன் கம்பீரமாய் நிற்கும் மைசூர் அரண்மனையின் பிரமிக்க வைக்கும் வரலாறு!
Royal Vision meets Divine Architecture

வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு:

பேரரசர் ராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலின் நிரந்தர விளக்குகளுக்காக (நந்தா விளக்கு) ஏழைகளுக்கு ஆடு மாடுகளை வழங்கி நெய் பெற்ற 'திருவிளக்கு அணையாமைக்' திட்டம் உண்மை வரலாறு ஆகும்.

ஆனால், தாய்ப்பாலை விற்று விளக்கு ஏற்றிய மாராயன் மனைவி பற்றிய உருக்கமான நிகழ்வு, கல்வெட்டுச் சான்றுகள் இல்லாத புகழ்பெற்ற தொன்மக் கதை ஆகும். இக்கதை, மன்னரின் மக்கள் நேசம் மற்றும் அதற்கு ஈடாக மக்கள் செலுத்திய எல்லையற்ற அர்ப்பணிப்பை விளக்கும் ஓர் உதாரணமேயாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com