

கர்நாடகாவின் மைசூரில் அமைந்துள்ளது மைசூர் அரண்மனை. இந்த அரண்மனையை அம்பா விலாஸ் என்று அழைக்கிறார்கள். 1897 அக்டோபர் மாதம் தொடங்கி 1912இல் கட்டி முடிக்கப்பட்டது இந்த அரண்மனை. ஆரம்பத்தில் விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அதன் பின்னர் நரசராஜு உடையார், சிக்க தேவராய உடையார் வசம் வந்தது. இந்த அரண்மனையை கட்டி முடிக்க 41 லட்சத்து 47 ஆயிரம் செலவானது.
அரண்மனை நுழைவு வாயில் மிகப் பிரம்மாண்டமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தர்பார் மண்டபம் காணப்படுகிறது. அடுத்தது மல்யுத்த மைதானம்; அதற்குப் பிறகு அந்தப்புரம் என சுமார் 175 அறைகள் உள்ளன.
ஏறக்குறைய 50 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கோபுரம் 145 அடி உயரம் உள்ளது. திறந்த வெளி ஹால்கள் மாடமாளிகைகள் கோபுரங்கள் என அனைத்துமே பிரம்மாண்டமாக உள்ளன.
இந்த அரண்மனையில் ஆயுத அறை, நூலகம், லிப்ட் வசதி வேட்டை அறை, பிரம்மாண்டமான படுக்கை அறைகள் ஆகியவை மூன்றாவது மாடியில் உள்ளன.
அரண்மனை முழுவதும் மரத்தால் இழைக்கப்பட்டு இருந்தது. அந்த இடங்கள் தசரா விழாவின் போது எரிந்து சாம்பல் ஆனது. கிருஷ்ணராஜ உடையார் என்பவர் கட்டடங்களை புதுப்பிக்க ஆங்கில கட்டடக்கலை நிபுணர் ஹென்றி இர்வின் என்பவரை நியமித்தார். 1930 இல் ஜெய சாம்ராஜ் உடையார் என்பவர் காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1940 இல் வாழ்ந்த கிருஷ்ணராஜ உடையார் என்பவர் உலகில் பெரிய செல்வந்தராக விளங்கினார்.
மைசூர் அரண்மனைக்கு 80 ஆயிரம் கோடி அளவில் சொத்துக்கள் உள்ளன. அப்போதைய அரசாங்கம் இந்த சொத்துக்களை கைப்பற்றி மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தது. இங்குள்ள குவி மாடங்கள் அனைத்தும் பளிங்கு கற்களால் ஆனது.
அரண்மனை முழுவதும் பெரிய தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் நுழைவு வாயில் கர்நாடக அரசின் சின்னமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சின்னத்தின் கீழ் 'ஒருபோதும் பயப்பட வேண்டாம்' என்ற வாக்கியம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அரண்மனையின் முக்கிய வளாகம் 245 அடி நீளம் 156 அடி அகலம் கொண்டது. அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அரண்மனையில் மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் தசரா விழாவின் போது முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் திறக்கப்படும். தெற்கு வாயில் பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டுள்ளது. மேற்கு வாயில் தசரா விழாவின் போது பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்படும்.
எங்கு பார்த்தாலும் இளம் சிவப்பு பளிங்கு கற்கள் கண்ணை பறிக்கின்றன. இதன் மத்திய வளைவில் கஜலக்ஷ்மி சிற்பம் யானைகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் சுமார் 18 கோவில்கள் உள்ளன. மைசூர் மன்னர்கள் சாமுண்டி தேவியின் பக்தர்கள் ஆவார்கள். எனவே அரண்மனை சாமுண்டி தேவியை எதிர்நோக்கி அமைந்துள்ளது.
இந்த அரண்மனையில் இரண்டு பெரிய தர்பார் மண்டபங்கள் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாகும்.
இந்த அரண்மனையை தினசரி காலை 10 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை பார்வையிடலாம். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மாலை ஏழு மணி முதல் 8 மணி வரை லைட் ஷோ நடைபெறும். மாலையில் அரண்மனை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். இந்த அரண்மனையை சுற்றி பார்க்க சுமார் நான்கு மணி நேரம் ஆகும்.
ஆண்டுதோறும் தசரா விழா மிகச் சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். தசரா விழாவின் போது ஒன்பது யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெறும். இந்த தசரா விழாவை காண உலகில் பல்வேறு இடங்களில் இருந்து இங்கு வருகை தருகிறார்கள்
வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்த அரண்மனையை சுற்றி பார்ப்பது மனதிற்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.