கான்பூர் நகரத்திலிருந்து சுமார் 30கிமீ தொலைவில் உள்ள ஒரு கோவில்தான் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த செங்கற்கலால் கட்டப்பட்ட கோவிலாகும். தற்போது Google Map லியே இல்லாத இந்தக் கோவில், பல நூற்றாண்டுகளாக அசைக்கமுடியாத கோவிலாகவும், வரலாற்று சின்னமாகவும் இருந்து வருகிறது.
கான்பூரிலிருந்து ஹமிர்பூருக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில் குப்த பேரரசு காலத்தில், அதாவது 5வது நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கோவில் என்பதை சில வருடங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால், அந்த ஊரில் வாழும் மக்களுக்கு அந்த கோவிலின் சிறப்புப் பற்றியே தெரிந்திருக்கவில்லை. அதேபோல், இந்த கோவிலில் உள்ள கடவுள்களுக்கும் எந்த பக்தர்களும் இல்லை. ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கோவிலை பற்றி கண்டுபிடித்த பின்னரே, இக்கோவிலின் சிறப்பு வெளியில் தெரியவந்தது.
இந்த செங்கல் கோவிலின் வெளிபுறத்தில், பழமைவாய்ந்த மற்றும் புகழ்பெற்ற டெரக்கோட்டா வடிவமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதன் கருவறை மற்றும் கோபுரம் ஆகியவை 175 வருடங்கள் முன்பு வரை எந்த சேதங்களும் இல்லாமல் அழகின் அடையாளமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
முதன்முதலில், 1875ம் ஆண்டு ஒரு அமெரிக்கா ஆராய்ச்சியாளர் எதர்ச்சியாக அந்த கோவிலுக்கு சென்று, அதன் பழமையை அங்குள்ளவர்களிடம் கேட்டிருக்கிறார். இதனைப் பற்றி மற்ற ஆராய்ச்சியாளர்களிடம் கூறிய பின்னர், இது ஒரு பெரிய விவாதமாக மாறி, இக்கோவில் பெரிய ஆராய்ச்சி மையமாக மாறியிருக்கிறது. பிறகு அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள், இந்திய அறிஞர்கள், மொழியியலாளர்கள், வரலாற்று அறிஞர்கள் எனப் பலரிடம் இதனைப் பற்றிய தகவல்களை கேட்டு சேகரிக்க ஆரம்பித்தனர்.
Archaelogical Survey Of India வை நிறுவிய அலெக்ஸான்டர் கன்னிங்கம், இந்தத் தகவலை கேட்டு ஆச்சர்யப்பட்டு நேரில் விசாரிக்க ஆரம்பித்தார். முதன்முதலில் 1877ம் ஆண்டு கன்னிங்கம் பல நாட்கள் பயணம் செய்து அந்த கோவிலுக்கு சென்றார். அந்தக் கோவிலின் அழகும், திடமும் அவரை மேலும் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்க செய்தது. பின்னர், 1878ம் ஆண்டே, முழு ஆராய்ச்சியையும் முடித்து இறுதி ரிப்போர்டை எழுதி முடித்தார்.
“The Bhitargaon Dewal என்று மக்களால் இப்போது அழைக்கப்படும் இந்த கோவிலே, பழமைவாய்ந்த செங்கல் கோவில் இருந்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது. இதன் தோற்றமும் திடமும் இதன் உறுதித்துவத்தை உணர்த்துகிறது. அதாவது, இந்தக் கோவில் பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் நிலைத்து நின்று வருகிறது. பழமைவாய்ந்த நகரமான புல்புரைச் சேர்ந்த இக்கோவிலுக்கு தற்போது எந்த பக்தர்களும் வருவதில்லை. இதன் டெரகோட்டா வடிவமைப்புகளை பார்க்கும்போது, இது ஒரு விஷ்னு கோவில் என்று தோன்றுகிறது.” என்று அவர் எழுதியிருந்தார்.
170 ஆண்டுகளாக பக்தர்களே செல்லாத இக்கோவிலை சிலர் சிவன் கோவில் என்றும், கணபதி கோவில் என்றும் கூறுகின்றனர். கருவரைக்குள் எந்த சிலையும் இல்லாதததாலே இத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், இது வரலாற்றின் அடையாளமாகவும், குப்தா அரசின் அடையாளமாகவும் விளங்குகின்றது என்பதே உண்மை.