அன்றைய கல்கத்தா நகரில் ஒரு இனிய மாலை பொழுது. லேக் ஏரியாவின் பெரிய ஏரிக்கு எதிரில் ஒரு கட்டிடத்தில் பலர் ஆவலுடன் குழுமியிருந்தனர்.
வந்தார் அவர் மனைவியுடன். அந்த பெரிய அறையில் மாட்டப் பட்டிருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டார்.
சில ஓவியங்கள் வரைய எப்படி சிரத்தை எடுத்துக் கொண்டேன் என்று விளக்கினார்.
ஒவ்வொரு ஓவியமும் கல்கத்தாவின் பல்வேறு இடங்கள், புகழ் பெற்ற கட்டிடங்கள், டிராம் வண்டிகள், வசிக்கும் வீடுகளின் தோற்றங்கள் அந்த நகரத்திற்கே உரிய பிரத்தியோக மர ஜன்னல்கள் உட்பட தத்ரூபமாக வரையப் பட்டவை.
கல்கத்தாவின் விஸ்தரமான மைதானம், விடியற்காலையில் சுட சுட ஆவி பறக்கும் சாய் மண் கப்புக்கள், நடை பயில்பவர்கள் உடைகள் என்று பார்த்து பார்த்து வரைந்து இருந்தார்.
ஒவ்வொன்றையும் ஆயிரக் கணக்கான ரூபாய்கள் கொடுத்து வாங்கி சென்றனர் மக்கள்.
அவர் அங்கு இருந்தவர்களிடம் உரையாடிக் கொண்டு பிசியாக இருந்ததால், அவரது மனைவியிடம் தமிழில் உரையாடியதில் அவரைப் பற்றி சில அரிய தகவல்கள் அறிந்துக் கொள்ள முடிந்தது.
அவரது கார்ட்டூன்கள் எப்படி நச்சென்று இருக்கின்றன என்ற கேள்விக்கு கிடைத்த பதில் இது:
அவருக்கு சிந்தனை கற்பனை எப்படி கருவாக உருவாகி முழு உருவம் பெரும் என்று யாராலும் கூற முடியாது. பத்திரிகை ஆபிசுக்கு செல்லும் பொழுது, அல்லது லிப்ட்டில் உடன் பயணம் செய்பவர்களை கூர்ந்து கவனிக்கும் பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படும்.
அவரை யாரும் எதற்கும் தொந்தரவு செய்ய கூடாது. அவர் வேலை செய்த பத்திரிகையின் முதலாளி, எடிட்டர் உட்பட யாரும் அவரிடம் போனில் கூட பேச மாட்டார்கள் (நான் உட்பட என்று சிரித்துக் கொண்டே கூறினார், அவர் மனைவி)
ஐடியா கிடைத்தும் வெகு குறைந்த நேரத்தில் கார்ட்டூன் படமும், அதற்கு பொருத்தமான செய்தியையும் எழுதி விடுவார்.
பிறகுதான் பிறரிடம் அன்றைய தினம் பேசுவார்.
சில நாட்களில் ஆபிசுக்கு சென்ற சில நிமிடங்களிலேயே கார்ட்டூன் ரெடி ஆவதும் உண்டு.
சில நாட்கள் பைனல் பிரின்டிற்கு பத்திரிகை போகும் வரை இவரது படைப்பிற்கு காத்திருந்ததும் உண்டு.
இவரது செய்தி திருக்குறளை விட சிறிதாக இருக்கும்.
இவர் அளிக்கும் செய்தி கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்திற்கும் எப்பொழுதும் பொருந்தியிருக்கும்.
நகைச்சுவை கலந்து சிந்திக்க வைக்கும்.
நாட்டு நடப்புகள், அரசியல், அகில உலக விவகாரங்கள், சினிமா, விளையாட்டு என்று ஒன்று விடாமல் கவர் செய்து விடுவார்.
ஒவ்வொரு தினமும் காலையயில் இவரது கார்ட்டூனை படித்து ரசிக்க கண்கள் விழித்த வாசகர்கள் ஏராளம்.
இவரது கார்ட்டூன் படங்களும், அதை ஓட்டிய செய்திகளும் இவரை ஒரு தீர்க்கதரிசியாக கருத வைத்தன.
இவரை மிகவும் கவர்ந்த நிறம் கருப்பு.
கவர்ந்த பறவை கருப்பு நிற காக்கை.
இவர் கை வண்ணத்தில் வரையப் பட்ட காக்கை சித்திரங்கள் கண்ணாடி சட்டங்களில் இவரது வீட்டு மெயின் ஹால் சுவர்களை அலங்கரித்தன.
அவ்வளவு ஏன், இவர் பணி புரியும் டைம்ஸ் ஆப் இந்தியா இவருக்கு அளித்த வெள்ளை நிற புத்தம் புதிய பியட் கார் கிடைத்ததும், அதற்கு கருப்பு வண்ணம் மாற்றி மகிழ்ந்தார் இவர்,
என்று முடித்தார் அவரது மனைவி கமலா லட்சுமண்.
அந்த புகழ் பெற்றவர் இந்தியாவின் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் ஆவார்.