சோழப் பேரரசின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராசராச சோழன் காலத்தில், சோழ நாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும், 'உலகளந்தான் குரவன்' என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைச் சிறப்பாகச் செய்து அரசனின் பாராட்டையும் பெற்றது.
எந்தவிதமான அளவுகோல் சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்தில், நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது சாதாரணமான பணியல்ல. இருப்பினும் அக்காலத்தில், பதினாறு சாண் நீளமுடைய 'உலகளந்தான் கோல்' எனும் அளவுகோலை உருவாக்கி, அதன் மூலம் நிலத்தினை மிகவும் சிறந்த முறையில் அளவீடு செய்திருக்கின்றனர்.
இந்த அளவீட்டில் கீழ்க்காணும் அளவீட்டு அலகுகள் பயன்படுத்தப்பட்டன.
* 24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
* 25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
* 26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
* 27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
* 28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
* 29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
* 30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
* 31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
(இங்கு கிஷ்கு முழம் என்பது ஆங்கில அளவில் 33 இஞ்ச் எனும் அளவிற்குச் சமமானது என்று கொள்ளலாம்.)
அது சரி, விரல் எனும் அளவு என்றால் என்ன?
விரல் அல்லது விரற்கடை (Finger Unit) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று.
அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு, அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்களின் (கயிறு, கம்பு, துணி) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடையிலான தூரம் ஆகியவற்றை அளக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை.
ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.
இப்படி, பன்னிரண்டு விரல் கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம். அதாவது, இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும்.
12 விரற்கடை அளவினை சாண் என்கின்றனர். அதாவது, ஐந்து விரல்களையும் ஒரு சமதளத்தின் மீது விரித்த நிலையில் வைத்தால் கட்டை விரலின் மேல் நுனியிலிருந்து சுண்டு விரலின் மேல் நுனி வரையுள்ள அளவாகும். தற்போதுள்ள உலக அளவை முறையில், ஒன்பது அங்குலம் கொண்ட அளவாகும்.
இரண்டு சான் அளவினை முழம் என்று குறிப்பிடுகின்றனர். இது ஒரு மனிதனின் கைமுட்டியிலிருந்து நடுவிரலின் நுனி வரை உள்ள நீள அளவு ஆகும். இந்த முழங்கை அளவிலான இரு முழம் நீளம் கொண்டது சிறுகோல் என்றும், எட்டு முழ நீளம் கொண்டது பெருங்கோல் என்றும் அளவீடாகக் கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும், சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.