இந்தியா - பாகிஸ்தான் இடையே தினமும் மாலையில் நடக்கும் 'அந்த' அதிசயம்: பின்னணி என்ன?

Beating Retreat Ceremony
Beating Retreat Ceremony
Updated on

லக வரைபடத்தில் எத்தனையோ சர்வதேச எல்லைக்கோடுகள் இருக்கலாம். ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள ‘வாகா எல்லை’ (Wagah Border) போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான, விறுவிறுப்பான எல்லையை உலகில் வேறு எங்குமே காணமுடியாது. 

வெறும் இரும்பு நுழைவாயில்களால் பிரிக்கப்பட்ட இந்த எல்லை, இரு நாடுகளின் பிரிவினையின் வலி, ராணுவ கம்பீரம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் உலகப் புகழ்பெற்ற அடையாளமாகத் திகழ்கிறது.

இந்தச் சர்வதேச எல்லை இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'அமிர்தசரஸ்' நகரத்தையும், பாகிஸ்தானின் 'லாகூர்' நகரத்தையும் இணைக்கும் புகழ்பெற்ற ‘கிராண்ட் ட்ரங்க்’ (Grand Trunk Road) சாலையில் அமைந்துள்ளது. அமிர்தசரஸில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும், லாகூரிலிருந்து 24 கி.மீ தொலைவிலும் இந்த எல்லை உள்ளது.

சுவாரஸ்யமாக, 'வாகா' என்பது பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயர். இந்தியப் பகுதியில் இந்த எல்லைக் கிராமத்திற்குச் 'அட்டாரி' (Attari) என்று பெயர். எனவே, இந்தியாவில் இத்தளம் 'அட்டாரி-வாகா எல்லை' என்றே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.

1947-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது, எல்லைகளைத் தீர்மானிப்பதற்காக பிரிட்டன் வழக்கறிஞர் சர் சிரில் ராட்க்ளிஃப் என்பவரால் ‘ராட்க்ளிஃப் கோடு’ (Radcliffe Line) வரையப்பட்டது. அந்தக்கோடு இந்த கிராமத்தின் வழியாகத்தான் சென்றது.

பிரிவினையின்போது லட்சக்கணக்கான அகதிகள் தங்கள் பூர்வீக நிலங்களை இழந்து, கண்ணீரோடும் அச்சத்தோடும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இந்தக் கோட்டைக் கடந்துதான் இடம் பெயர்ந்தார்கள். இதனால், வரலாற்று ரீதியாகவும் மனித உணர்வுகளின் ரீதியாகவும் இது மிகவும் ஆழமான ஒரு இடமாகும்.

வாகா எல்லையின் மிக முக்கியமான சிறப்பம்சமே தினசரி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் நடைபெறும் 'பீட்டிங் ரீட்ரீட்' (Beating Retreat) என்ற கொடியிறக்க விழா ஆகும். 1959-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளாலும் எவ்வித தடையுமின்றி இது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இது உலகப் புகழ்பெற்ற  ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
Beating Retreat Ceremony

இந்தியாவின் பி.எஸ்.எஃப் (BSF - Border Security Force) வீரர்களும், பாகிஸ்தானின் ரேஞ்சர்ஸ் (Pakistan Rangers) வீரர்களும் தங்களின் பிரத்யேக சீருடைகளை அணிந்து இந்த கூட்டு அணிவகுப்பை நடத்துகிறார்கள்.

இரு நாட்டு வீரர்களும் தங்களின் கால்களை தலைக்கு மேலே எகிறத் தூக்கி, ஆக்ரோஷமாகத் தரையில் மிதித்து, கண்களால் சவால் விடுவதுபோல கம்பீரமாக உலா வருவார்கள். இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆரோக்கியமான ராணுவப் போட்டியையும் அதே சமயம் பரஸ்பர மரியாதையையும் குறிக்கிறது.

அணிவகுப்பின் உச்சக்கட்டமாக இரு நாடுகளின் இரும்பு நுழைவாயில்களும் திறக்கப்பட்டு, இரு நாட்டுத் தேசியக்கொடிகளும் ஒரே நேரத்தில் மிகக் கவனமாக, பரஸ்பர மரியாதையுடன் கீழே இறக்கப்படும். பின்னர் கொடிகள் மடிக்கப்பட்டு, வாயில்கள் மூடப்படும் போது அன்றைய தினம் நிறைவடைகிறது.

தேசபக்திக் கடலாக மாறும் திருவிழா போன்று இந்த நிகழ்வைக் காண்பதற்காக எல்லையின் இருபுறமும் பிரம்மாண்டமான விளையாட்டு மைதானம் போன்ற கேலரிகள் (Amphitheaters) கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் மாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இருபுறமும் குவிகிறார்கள்.

விழா தொடங்குவதற்கு முன், இந்தியப் பகுதியில் ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஹோ’ போன்ற தேசபக்திப் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டு, மக்கள் இந்தியக் கொடியை ஏந்தி ஓடித் தங்களின் தேசபக்தியை வெளிப்படுத்துவார்கள். அதேபோல பாகிஸ்தான் பகுதியிலும் மக்கள் முழக்கங்களை எழுப்புவார்கள். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளில் எவ்வளவுதான் அரசியல் பதற்றமான சூழல் நிலவினாலும், இந்த மாலை விழா மட்டும் எவ்வித தடையுமின்றி அமைதியான முறையில், ஒரு திருவிழா போலத் தொடர்ந்து நடைபெறுவது இதன் உலகளாவிய தனிச்சிறப்பு.

இதையும் படியுங்கள்:
சுவிட்சர்லாந்திலும் தீ மிதி திருவிழாவா? நம்மூர் ராவண தகனத்தோடு ஒப்பிடப்படும் விசித்திர விழா!
Beating Retreat Ceremony

வாகா எல்லை என்பது வெறும் நிலங்களை பிரிக்கும் ஒரு எல்லைக் கோடு மட்டுமல்ல; அது இரு நாடுகளின் இறையாண்மை, கலாச்சாரம் மற்றும் அமைதிக்கான கூட்டு நம்பிக்கை ஆகியவற்றின் சின்னம். துப்பாக்கிகளும், போர்களும் பேசாத அமைதியை, இரு நாட்டு வீரர்களின் காலணிகளின் சத்தமும், மக்களின் தேசபக்தி முழக்கங்களும் இந்த எல்லையில் பேசுகின்றன. அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குச் செல்லும் எவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் கண்டு சிலிர்க்க வேண்டிய ஒரு அசாத்தியமான அனுபவம் இந்த வாகா எல்லை!

 என்ன வாசகர்களே எங்கே கிளம்பிட்டீங்கே. பொற்கோயில் பார்த்துவிட்டு அப்படியே வாகா எல்லை  விழா அனுபவத்தை கண்டுகளியுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com