அது என்ன கவரிமான் பரம்பரை?

Kavarimaan
Kavarimaan
Published on

பொதுவாக நம் வீட்டில் பெரியவர்கள் பழமொழிகளையும், தத்துவங்களையும் அவ்வப்போது கூறி வருவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் சில பழமொழிகளும், தத்துவங்களும் காலப்போக்கில் மாறி திரிந்து விடுகின்றன. 

மேலும், சில பழமொழிகள் எதற்காக சொல்லப்பட்டது என்பது தெரியாமல், அதனை தவறாக புரிந்து கொண்டு தற்போது வரை பழமொழிகளையும், தத்துவங்களையும் மாற்றி கூறி வருகிறோம். 

அந்த வகையில், நம் வீட்டு பெரியவர்கள் 'ஆமாம், இவரு பெரிய கவரிமான் பரம்பரை' என்று காமெடியாக கூறுவார்கள். இந்த பழமொழியை நாம் நகைச்சுவையாக பல படங்களிலும் கேட்டிருப்போம்.

அது என்ன கவரிமான், எதற்காக கவரிமான் பரம்பரை என்று கூறுகிறார்கள் என்று நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கும். 

நாம் இந்த பதிவில் கவரிமான் விலங்கு பற்றி பார்க்கலாம். எதற்காக இந்த பழமொழியை கூறினார்கள் என்று பார்க்கலாம்.

'கவரிமா'ன் பரம்பரை: 

முதலில் கவரிமான் என்பது தவறு. 'கவரிமா' என்பது தான் சரியான வார்த்தை. கவரிமா மாடு வகையைச் சார்ந்த ஒரு விலங்கினம் ஆகும்.

மயிர்நீப்பின் வாழா கவரிமா அன்னார் 

உயிர்நீப்பர் மானம் வரின் 

இந்த திருக்குறளில் கவரிமா-வை பற்றி திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பார்.  இதன் பொருள் என்னவென்றால் தன் உடம்பில் இருந்து முடி உதிர்ந்தால் உயிர் வாழாத கவரிமாவை போன்றவர்கள், மானம் அழிந்தால் உயிர் விட துணிவார்கள் என்பது இதன் பொருள். மேலும் திருவள்ளுவர் 'கவரிமா' என்று தான் குறிப்பிட்டுள்ளார்.

கவரிமா குளிர் பிரதேசங்களில் வாழும் ஒரு மாடு இனம் ஆகும். அதற்கு உடம்பில் அதிகப்படியான ரோமங்கள் இருக்கும். எனவே அதன் உடம்பில் உள்ள ரோமங்கள் அனைத்தும் உதிர்ந்தால், அந்த குளிரை தாங்கிக்கொள்ள முடியாது. எனவே தான் கவரிமா-வின் உடம்பில் உள்ள முடிகள் உதிர்ந்தால் அதனால் உயிர் வாழ முடியாது என்பதால் இவ்வாறாக கூறினார்கள். 

இதையும் படியுங்கள்:
நிர்மல் ஓவியங்கள், பொம்மைகள் - முகலாயர்கள் ஆதரித்த 14 ஆம் நூற்றாண்டின் கலை!
Kavarimaan

மேலும் சங்க இலக்கியம் புறநானூற்றில் கவரிமா பற்றிய குறிப்புகள்

"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண்நிழல் பிணை யொடு வதியும்

வடதிசை யதுவே வான்தோய் இமயம்'' 

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவரி என்னும் விலங்கு இமயத்தில் வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இமய பிரதேசத்தில் கவரிமா இருப்பதை புறநானூற்றின் வழியாக நாம் அறிய முடியும். 

காலப்போக்கில் கவரிமா என்னும் மாடு இனம் மருவி தவறாக மான் என  பொருள் புரிந்து கொள்ளப்பட்டது. (குளிர்பிரதேங்களில் சுமைகளை சுமர்ந்து செல்வதற்கு கவரிமா-வை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com