

ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் அந்த பொருளுக்குடைய பெயருக்கான காரணம் கண்டிப்பாக இருக்கும். ஆனால், அது நம்மில் பலபேருக்கு தெரியாது. அப்படி நம்மில் பலபேருக்கு காரணம் தெரியாத ஒரு பெயர்தான் இந்த எலுமிச்சம் பழம் (Lemon).
இந்த எலுமிச்சம் பழத்தை கண் திருஷ்டிக்காக வீட்டின் முன்னே கட்டி வைப்பார்கள். இன்னும் சில பேர் வாகனத்தின் முன்பேயும் கட்டி வைத்திருப்பார்கள். புதிதாக வாகனம் வாங்கினால் பூஜை போட்டவுடன் எலுமிச்சம் பழத்தின் மேலே ஏற்றி தான் வண்டியை ஸ்டார்ட் செய்வார்கள். இன்னும் சில பேர் அம்மனுக்கு வேண்டிக் கொண்டு நினைத்த காரியம் நிறைவேறியவுடன் எலுமிச்சம் பழத்தை மாலையாக கட்டி சாற்றுவார்கள். இவை எல்லாம் எலுமிச்சம் பழத்தோடு இணைந்திருக்கும் ஆன்மீக தொடர்பான விஷயங்களாகும்.
நம் உடலுக்கும் இந்த எலுமிச்சம் பழத்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இதில் வைட்டமின் C அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் உள்ள நன்மைகள் என்னவென்று பார்க்கலாமா?
வாந்தி அதிகமாக இருந்தால் எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் விரைவில் வாந்தி நின்று விடும்.
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் இருந்தால் எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடித்தால் குறையும்.
பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க இது உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனுடன் பருகினால் உடல் எடை குறையும்.
பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.
இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும்.
நகச்சுற்று ஏற்பட்டால் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைத்தால் விரைவில் குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இப்படியோ எத்தனை நன்மைகள் இந்த பழத்தின் மூலமாக நமக்கு கிடைக்கின்றன. சரி, இந்த பழத்திற்கு எலுமிச்சம் பழம் என்ற பெயர் ஏன் வந்தது என்பதை பற்றியும் பார்க்கலாமா?
அக்காலத்தில் எலுமிச்சை பழத்திற்கு சரியான காரணத்தோடு தான் முன்னோர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள். நாம் தான் பேச்சு வழக்கில் இதனை எலுமிச்சை பழம் என்று மாற்றி அழைத்து வருகிறோம்.
எலி ஆனது பழங்கள், காய்கள் என எல்லாவற்றையும் சாப்பிட்டு நாசம் செய்து விடும். ஆனால் எலுமிச்சை பழம் இருக்கிற பக்கம் கூட போகாதாம். ஏனென்றால் அதில் இருக்கும் சிட்ரஸ் அமிலம் எலிக்கு ஆகாது.
ஆகவே, எலியானது எல்லா பழத்தையும் தின்று எலுமிச்சை பழத்தை மட்டும் மிச்சம் வைத்து விடுமாம். எனவே, இப்பழத்தை 'எலி மிச்சம்' வைத்த பழம் என்று கூறி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் எலி மிச்சம் பழம் என்பது எலுமிச்சை பழம் என்று மாறிவிட்டது. மேலும் எல் அல்லது எலு என்கிற வார்த்தைக்கு மஞ்சள் நிறம் என்று பொருள். அதாவது எல் என்றால் மஞ்சள் ஒளி, சூரியன் (மஞ்சள் நிறக் கதிரவன்) என்றும் பொருளாகும்.
எல்லி, எல்லை, எல்லோன் என்ற எல்லா வார்த்தைகளுமே சூரியனை தான் குறிக்கிறது. எல் என்ற மூலத்திலிருந்து தோன்றியது தான் Helios என்கிற கிரேக்க வார்த்தை. Helios என்றால் சூரியன் என்று பொருளாகும்.
அடுத்தபடியாக, மிச்சு அல்லது மிச்சை என்கிற வார்த்தை மிஞ்சி அதாவது மிகுந்து நிற்கும் பண்பை குறிக்கிறது. எனவே, அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள பழம் தான் இந்த எலுமிச்சை பழம். மிகுதியான 'மஞ்சள் நிறம்' கொண்ட பழமே இந்த எலுமிச்சை பழம்.