ஃபாஸ்ட் ஃபேஷன் உலகிற்கு சவால் விடும் 'சஸ்டைனபிள்' சேலைகள்! புதிய ட்ரெண்ட் இதுதான்!

டிசம்பர் 21, உலக சேலை தினம்: இது இந்தியர்களுக்கு மட்டும் உரியதல்ல. அனைத்து பின்னணியிலிருந்தும் வரும் மக்கள் ஒரு அழகான கலைவடிவத்தைப் பாராட்டுவதற்கான வாய்ப்பாகும்.
December 21 World saree day
December 21 World saree day
Published on

தெற்காசியாவின், குறிப்பாக இந்தியாவின் மிகச்சிறந்த அடையாளமாகத் திகழ்வது 'சேலை'. காலமாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிகளுக்கு மத்தியிலும் தன் மங்காத புகழைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. டிசம்பர் 21, 2009-ல் சமூக ஆர்வலர் நளினி சேகரால் 'உலக சேலை தினம் தொடங்கப்பட்டு, 2020-ல் சமூக வலைதளங்கள் வாயிலாக ஒரு உலகளாவிய இயக்கமாக மாறியது. இன்று டிசம்பர் 21-ல் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் பாரம்பரியத்தை பறைசாற்ற இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

உலக சேலை(Sarees) தினத்தின் முக்கியத்துவம்

1. கலாச்சாரப் பாரம்பரியம்

உலக சேலை தினத்தின் முதன்மையான நோக்கம், தெற்காசியாவின் மிக நீண்ட மற்றும் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகிற்கு நினைவூட்டுவதாகும். சேலை ஐந்தாயிரம் ஆண்டுகால ஜவுளி மரபின் சாட்சி. வேத காலம் முதல் சிந்து சமவெளி நாகரீகம் வரை சேலையின் சுவடுகள் காணப்படுகின்றன.

2. நெசவாளர்களின் நுணுக்கமான கலைத்திறன்

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென ஒரு பிரத்யேக நெசவு முறையைக் கொண்டுள்ளது. காஞ்சிபுரம் பட்டு, பனாரசி இழை, வங்காளத்தின் ஜம்தானி, ஒடிசாவின் இக்கத் என இந்தப் பட்டியல் நீளமானது. இத்தகைய கலைத்திறனைப் பாதுகாப்பதில் சேலை முக்கியப் பங்கு வகிக்கிறது.

இத்தினத்தில், இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்திலும், தன் கைத்திறனால் ஒரு காவியத்தைப் படைக்கும் நெசவாளர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுகிறது. அவர்களின் நுணுக்கமான கலைத்திறனை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே இத்தினத்தின் முக்கிய வெற்றியாகும்.

3. நிலையான ஃபேஷன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இன்றைய நவீன உலகில் 'ஃபாஸ்ட் ஃபேஷன்' (Fast Fashion) எனப்படும் கலாச்சாரம் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. மலிவான, செயற்கை இழைகளால் ஆன ஆடைகள் விரைவாகக் குப்பைகளாக மாறி நிலத்தை மாசுபடுத்தும் நிலையில், சேலை ஒரு மிகச்சிறந்த மாற்றாகத் திகழ்கிறது.

உலக சேலை தினத்தின் மற்றொரு முக்கிய நோக்கம் 'நிலைத்தன்மையை' (Sustainability) ஊக்குவிப்பதாகும். பெரும்பாலான பாரம்பரிய சேலைகள் பருத்தி, பட்டு மற்றும் லினன் போன்ற இயற்கை இழைகளால் நெய்யப்படுகின்றன. இவை நீண்ட காலம் உழைக்கக்கூடியவை என்பதோடு, பல தலைமுறைகளுக்கு ஒரு சொத்தாகக் கடத்தப்படுகின்றன. கைத்தறி சேலைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நாம் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதுடன், ரசாயன சாயங்கள் இன்றி இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறோம். இது சுற்றுச்சூழலுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

4. உலகளாவிய அங்கீகாரம் மற்றும் பாராட்டு

இன்று தெற்காசிய மக்கள், உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி வாழ்கின்றனர். இதன் விளைவாக, சேலையின் பெருமையும் உலகமெங்கும் பரவியுள்ளது. உலக சேலை தினம் என்பது இந்தியர்களுக்கு மட்டும் உரியதல்ல. இது அனைத்து பின்னணியிலிருந்தும் வரும் மக்கள் ஒரு அழகான கலைவடிவத்தைப் பாராட்டுவதற்கான வாய்ப்பாகும்.

சர்வதேசத் திரைப்பட விழாக்கள், ரெட் கார்பெட் நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய ஆடை அலங்கார அணிவகுப்புகளில் சேலை இன்று முன்னிலை வகிக்கிறது. இந்தப் பாரம்பரிய ஆடையின் நெகிழ்வுத்தன்மை வியக்கத்தக்கது. அது ஒருவரை ஒரே நேரத்தில் எளிமையாகவும், கம்பீரமாகவும் காட்டவல்லது. உலகெங்கிலும் உள்ள மக்கள் இத்தினத்தில் சேலையை அணிந்து மகிழ்வதன் மூலம், கலாச்சார எல்லைகளைக் கடந்து ஒரு உலகளாவிய ஒற்றுமையை இது உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
இசை மேதை தான்ஸேன்: இசையால் யானையின் நோயை குணப்படுத்திய அதிசயம்!
December 21 World saree day

உலக சேலை தினம் என்பது ஒரு ஆடையைக் கொண்டாடும் நாள் மட்டுமல்ல, அது நம் வேர்களைக் கொண்டாடும் நாள். இது நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒரு பாலமாக அமைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com